Skip to main content

பாஜகவிற்கு எதிரான போராட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  ஒருங்கிணைக்கும்- பிரகாஷ்காரத் பேச்சு! 

Published on 25/08/2019 | Edited on 25/08/2019

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வாழ்வுரிமை, கருத்துரிமை பாதுகாப்பு மாநாடு, கலை இரவு, கடலூர் மாவட்ட கட்சியின் வரலாற்று நூல் வெளியீடு ஆகிய முப்பெரும் விழா கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில்  நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட செயலாளர் டி.ஆறுமுகம் தலைமை வகிக்க, மாநிலக்குழு உறுப்பினர் மூசா முன்னிலை வகித்தார். 


அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் சிறப்புரையாற்றி பேசுகையில், " இந்திய விடுதலை போராட்டம், தொழிலாளர்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டது கம்யூனிஸ்டு கட்சி. அந்த தியாகிகளின் தியாகம் வீண் போகாது. பாஜகவை வழிநடத்தும் ஆர்எஸ்எஸ் சுதந்திர போரில் ஈடுபடவில்லை. அவர்கள் ஆங்கிலேயரை விட இஸ்லாமியர்களை தான் எதிரிகளாக நினைத்தார்கள்.


1964- ஆம் ஆண்டு துவங்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பிதாமகன்களான ஏ.கே.கோபாலன் உள்ளிட்ட 9 பேர் சுதந்திர போராட்டத்திற்காக 34 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார்கள். ஆனால் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் ஒரு நாள் கூட சிறையில் இருந்தது இல்லை. ஆனால், அவர்கள் தான் ஆட்சி செய்கிறார்கள். பாஜக இந்திய தேசிய வாதம் பேசாமல், இந்து தேசிய வாதம் தான் பேசுகிறது.
 

cuddalore Marxist Party unites against all parties in BJP - Prakash Karat speech


 


பிரதமர் நரேந்திர மோடி இந்திய அரசியலமைப்பு சட்டத்தை தகர்க்கும் வகையில் ஆட்சி நடத்தி வருகிறார். அரசுக்கு எதிராக யாராவது கருத்து கூறினால், தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இது ஆங்கிலேயர் அரசால் கொண்டு வரப்பட்ட சட்டம். ஒரே நாடு, ஒரே மதம், ஒரே கலாசாரம், ஒரே தலைவர் என்ற ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை பாஜக கடைபிடித்து வருகிறது. ஜனநாயகத்தை முற்றிலும் தகர்க்கும் முறையை கடைபிடித்து வருகிறார்கள்.
 

சுதந்திரத்துக்கு பின்னர் ஒன்றியங்களை ஒன்றிணைக்கும் பேச்சு வார்த்தையின் போது காஷ்மீருக்கு 370 என்ற சிறப்பு சட்டம் இயற்றப்பட்டு சுயாட்சி அந்தஸ்து வழங்கி தான் சேர்க்கப்பட்டது. ஆனால் இந்திய யூனியன் என்ற நிலையை ஒரே சட்டத்தில் பாஜக தகர்த்து விட்டது. இந்திய பொருளாதாரம் தற்போது சரிவை நோக்கி செல்கிறது. ஆட்டோமொபைல் துறையில் லட்சக்கணக்கான மக்கள் வேலை இழந்து வருகின்றனர். அதேபோல் விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் வேலையில்லா திண்டாட்டம் நிலவுவதாக அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
 

பாஜக ஒரு கையால் மக்களின் அடிப்படை உரிமைகளை பறிப்பதையும், அவர்களின் வாழ்வாதாரத்தின் மீது தாக்குதல் நடத்துவதையும் செய்துக்கொண்டே, மறு கையால் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிக்க கடன் தள்ளுபடி செய்கிறது. தற்போது ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ரயில்வே துறையில் தனியார் மயத்தை எதிர்த்து மோடியின் தொகுதியான வாரணாசியில் கூட ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 
 

cuddalore Marxist Party unites against all parties in BJP - Prakash Karat speech


 


அனைத்து தொழிலாளர்களும் தற்போது மத்திய அரசிற்கு எதிராக போராடி வருகின்றனர். இப்போராட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒருங்கிணைத்து நடத்தும். தமிழகம் தனது சுய உரிமைக்காக தீவிரமாக போராடி வரும் மாநிலம். இப்போராட்டம் வரும் நாட்களில் தீவிரமடையும். மக்களவையில் எதிர்க்கட்சியினர் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். ஆனால், மக்கள் மன்றத்தில் எடுத்துச் சென்று அவர்களை எதிர்க் கட்சியாக மாற்றுவோம்"  என்றார்.


அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், "மத்திய அரசு புதிய கல்விக்கொள்கை மூலமாக 20 மாணவர்களுக்கு குறைவாக உள்ள அரசுப்பள்ளியை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. இக்கொள்கையை ரத்து செய்ய வலியுறுத்தி கட்சியின் சார்பில் 1 கோடி கையெழுத்து பெறப்பட்டுள்ளது. இந்த கொள்கை மூலமாக தமிழகத்தில் 1 பள்ளியை மூடுவதற்குக் கூட மார்க்சிஸ்ட் அனுமதிக்காது"  என்றார்.


மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், " மோடி என்றால் வளர்ச்சி என்று கூறினார்கள். இப்போது, பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகிறோம். 15 ஆண்டுகளாக இந்தியா பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருவதாக நாங்கள் கூறியதை இப்போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனே ஒத்துக்கொண்டார். ஆனாலும், அதனை சரிசெய்வதாகக் கூறி மீண்டும் கார்ப்பரேட், உள்நாடு, வெளிநாட்டு முதலாளிகளுக்கே சலுகைகளை வாரி வழங்குகிறார். 


சாதாரண மக்கள், தொழிலாளர்களுக்கு எந்த சலுகையும் இல்லை. கல்விக்கடன் ரத்து, விவசாயக் கடன் ரத்து போன்ற நடவடிக்கை எடுப்பதில்லை. தமிழகத்திலும், மத்தியிலும் மக்கள் விரோத ஆட்சியே நடக்கிறது. இவர்களை வீட்டிற்கு அனுப்ப மார்க்சிஸ்ட் கட்சி பாடுபடும்"  என்றார். அதனை தொடர்ந்து மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி பேசினார். கட்சியின் வரலாற்று நூல் வெளியீடு, மூத்த நிர்வாகிகள் கௌரவிப்பு, கலை நிகழ்ச்சி போன்றவை நடைபெற்றன. முன்னதாக மாநிலக்குழு உறுப்பினர் கோ.மாதவன் வரவேற்று பேசினார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

“தமிழகத்தில் நீடித்த வளர்ச்சியை தி.மு.க அரசால் மட்டுமே வழங்க முடியும்” - மல்லிகார்ஜுன் கார்கே பேச்சு

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
“ Mallikarjun Kharge speech Only a DMK government can deliver sustainable development in Tamil Nadu

கடலூர் மாவட்டம் நெய்வேலியில், கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே. விஷ்ணு பிரசாத் கை சினத்தில் போட்டியிடுகிறார். அதேபோல் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு கடலூர் தொகுதியில் கை சின்னத்தில் போட்டியிடும் விஷ்ணு பிரசாதத்தையும், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிடும் தொல். திருமாவளவனையும் இரு கரம் கோர்த்து பானை மற்றும் கை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து அவர் மக்கள் மத்தியில் பேசுகையில், “இந்திய கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தந்தை பெரியார், காமராஜர், கலைஞர் ஆகியோரின் நினைவுகளை இத்தருணத்தில் நினைவு கூற கடமைப்பட்டுள்ளோம். பாரதிய ஜனதா அரசு பல்வேறு வரிவிதிப்புகள் மூலம் ஏழை எளிய மக்களை வதைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக, தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட விவசாய பெருங்குடிகள் ஆகியோரின் நிலை மிகுந்த மோசமான நிலையில் உள்ளது. அவர் பிரதமர் ஆவதற்கு முன்பும், பிரதமர் ஆனதற்கு பின்பும் அடிக்கடி கூறி வருவது 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பதையும் ஒவ்வொரு குடும்பத்தாரின் வங்கி கணக்கில் 15 லட்சம் கருப்பு பணத்தை மாற்றி தருவேன் எனவும் வாக்குறுதி தந்தார். அதில் ஏதாவது ஒன்றை செய்துள்ளாரா?

காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி அமைத்தவுடன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும். இந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் நான் திடமாக கூறிக் கொள்வது என்னவென்றால் இரண்டு விஷயங்களை மட்டும் மக்கள் மன்றத்தில் கூற விரும்புகிறேன். ஒன்று இந்திய ஜனநாயகம் பாதுகாக்கப்படும், மற்றொன்று அரசியலமைப்பு சட்டம் பாதுகாக்கப்படும். நான் 53 ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினர், எம்.பி ராஜ்யசபா உறுப்பினர் எனப் பல்வேறு பதவிகளில் இருந்து வருகிறேன். ஆனால், இந்த ஆட்சியின் போதுதான் கவர்னர் என்ற பதவியின் செயல்பாடுகள் மிகுந்த கேள்விக்குரியதாக உருவாகியுள்ளது. அவர் பட்ஜெட் கூட்டத்தொடர், பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் போன்றவைகளில் எல்லை மீறுவதைக் காண முடிந்தது. 

“ Mallikarjun Kharge speech Only a DMK government can deliver sustainable development in Tamil Nadu

பாஜக அரசை எதிர்ப்பதில் தமிழக முதல்வர் மிக முக்கிய இடமாக உள்ளார். அதிலும் குறிப்பாக நீட் தேர்வு போன்றவற்ற எதிர்ப்பதில் மிக உறுதியாக உள்ளார். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் தற்போதைய உள்ள சிஸ்டத்தை நிச்சயம் மாற்றுவோம். விவசாயிகள் தற்போது மிகுந்த மோசமான நிலையில் உள்ளனர். அவர்களிடம் வாழ்வாதாரம் சிறக்க, சிறப்பு நடவடிக்கை காங்கிரஸ் அரசு நிச்சயம் மேற்கொள்ளும். தமிழகத்தில் நீடித்த வளர்ச்சியை, தி.மு.க அரசால் மட்டுமே தர முடியும். பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டிருக்கிறது .ஏன் விலை உயர்வு என்று கேட்டால் , மோடி அரசு குருடாயில் விலை உயர்வு என்கிறது. ஆனால், உலக அளவில் குரூடாயில் விலை குறைந்த போது பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை. இதனால் ஏழை எளிய மக்கள் விலைவாசி உயர்வால் அவதி அடைந்து வருகின்றனர்.

ஆயிரம் மோடி வந்தாலும் இந்திய ஜனநாயகத்தையும், அரசியல் சட்டத்தையும் ஒன்றும் அசைக்க முடியாது. இந்தியாவில் உள்ள பல்வேறு துறைகளில் உள்ள எஸ்.சி, எஸ்.டி பிற்பட்டோர் பிரிவினருக்கான காலியிடங்களை நிச்சயம் நிரப்புவோம். இதனால் சுமார் 30 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்புப் பெறுவர் எனவே அனைவரும் கை சின்னத்திற்கும் பானை சின்னத்திற்கும் வாக்களித்து ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும்” என்று பேசினார்.  

இந்தப் பொதுக்கூட்டத்தில் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, நெய்வேலி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சபா. ராஜேந்திரன், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி, மாநில செயலாளர் சந்திரசேகர், கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கோ.மாதவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Next Story

'தேர்தலை புறக்கணிக்கிறோம்'-போராட்டத்தில் இறங்கிய கிராம மக்கள்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'We are boycotting the election'-Village people on strike

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில்  சிதம்பரம் அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், தீர்த்தாம்பாளையம் கிராமத்தில் 6500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். தீர்த்தாம்பாளையத்தில் இருந்து பு.முட்லூர் வந்து சேர 3 கிலோ மீட்டர் தொலைவு தூரம் உள்ளது. இதனால் விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது. இதனால் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்த பொதுமக்களின் சாலையை மறித்து, மாற்றி அமைத்து மேலும் 1.6 கிலோ மீட்டர் அதிகரித்து 4.6 கிலோ மீட்டர் தூரத்தில் மாற்றுப் பாதையை அமைத்து தருவதால் ஊர் பொதுமக்கள் அடைகிறார்கள். எனவே தீர்த்தாம் பாளையம் பகுதியில் சுரங்க பாதை (சப்வே) அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து பேராடி வருகின்றனர்.

இந்நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்தும், செவிமடுக்காத அரசியல்வாதிகளையும், அவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலையும் முற்றிலும் புறக்கணிப்பதாக அறிவித்து பதாகைகள் வைத்துள்ளனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று கிராம மக்கள் பதாகை மற்றும் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.