Skip to main content

குடிநீர் குழாயை சரி செய்ய சென்றவர் விபத்தில் பலி!

Published on 25/08/2019 | Edited on 25/08/2019

கடலூர்:  விருத்தாசலம் அருகே குருணை மருந்து கலந்த குடிநீர் குழாயை சரி செய்ய சென்றவர் விபத்தில் பலி. உறவினர்கள் சாலை மறியலால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு! 
 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த புத்தூர் கிராமத்தில் சுமார் 500- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரது வீட்டில், கடந்த 14 ஆம் தேதி  ஊராட்சிக்குட்பட்ட குடிநீர் குழாயில் குருணை மருந்து கலந்ததால், அவரது குழந்தைகள் உட்பட பள்ளி மாணவர்கள்  என பலர் மயக்கம் அடைந்ததால் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது. அதன் பின்னர், அக்கிராமத்தை சேர்ந்த பாண்டியன் என்பவர் குடிநீர் குழாயை சரி செய்வதற்காக செல்லும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சாலை விபத்தில் சிக்கினார்.  

 cuddalore man who went to fix the drinking water pipe accident crisis


அதையடுத்து, அவரை மீட்டு விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி கொண்டு சென்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாண்டியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பாண்டியனின் உறவினர்கள் அடையாளம் தெரியாத வாகனத்தை கண்டுபிடிக்க கோரியும், சாலையில் வேகத்தடை அமைக்கக் கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க கோரியும், குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்க கோரியும், விபத்து அதிகமாக நடக்கும் சாலையில் வேகத்தடை அமைக்க கோரியும், விருத்தாச்சலம்- ஜெயங்கொண்டம் தேசிய நெடுஞ்சாலையில் உடலை நடுரோட்டில் வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

 cuddalore man who went to fix the drinking water pipe accident crisis


சுமார் மூன்று மணி நேரமாக சாலை மறியலில் ஈடுபட்டதால் நான்கு கிலோ மீட்டர் வரை இருபுறங்களிலும் வாகனங்கள் அணி வகுத்து நின்றன.  இதனால் பெரும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பயணிகள் அவதிக்குள்ளாகினர். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கருவேப்பிலங்குறிச்சி காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் கலைந்து செல்ல மறுத்தனர். அதன் பின்பு  விருத்தாச்சலம் தாசில்தார் கவியரசு தலைமையில் பாண்டியனின் உறவினர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அந்த பேச்சுவார்த்தையில் விபத்தை ஏற்படுத்தியவர் மீது உரிய நடவடிக்கை  எடுக்கப்படும் என்றும், வருங்காலங்களில் இந்த சாலையில் விபத்து ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தாசில்தார் உறுதியளித்ததன் பேரில் மறியலை கைவிட்டனர். இச்சம்பவத்தால் பெரும் பரபரப்பு நிலவியது.





 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.