dgp

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21 அன்று பணியின்போது வீர மரணம் அடைந்த காவலர்களின் தியாகத்தை போற்றும் விதமாக காவலர் நாள் கடைபிடிக்கப்படுகிறது.

இந்திய நாட்டில் 1.9.2017 முதல் 31.9.2018 வரை மொத்தம் 414 காவலர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் இன்று புதுச்சேரியில் உள்ள கோரிமேடு காவலர் மைதான காவலர் நினைவிடத்தில் காவலர் நாள் கடைபிடிக்கப்பட்டது.

பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆளுநர் கிரண்பேடி, பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இறந்த காவலர்களின் குடும்பத்தினரும் நிகழ்ச்சியின் போது அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து 21 குண்டுகள் முழங்க உயிரிழந்த காவலர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

Advertisment

dgp1

பின்னர் ஆளுநர் கிரண்பேடி செய்தியாளர்களிடம், "கடந்த ஆண்டு நடைபெற்ற காவலர் வீர வணக்க நிகழ்ச்சிக்கு அப்போதைய DGP சுனில் குமார் கெளதம் என்னை அழைக்கவில்லை. ஆட்சியாளர்கள் மீது அவர் பயத்தில் இருந்தார். அது மிகவும் துரதிஷ்டவசமானது. இந்த நாள் என்பது மதிக்கதக்கது. முக்கியத்துவம் வாய்ந்தது. நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து உயிர் நீத்தவர்களின் தியாகத்தை மதிக்க வேண்டும்" என்றார்.

இதேபோல் கடலூர் மாவட்டத்தில் கடலூர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள காவலர் ராஜேந்திரன் சிலை முன்பு மாவட்ட கண்காணிப்பாளர் சரவணன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் வீரராகவன், வேதரத்தினம் உதவி காவல் கண்காணிப்பாளர் தீபாசத்யன், மத்திய சிறை கண்காணிப்பாளர் நிகிலா நாகேந்திரன் ஊர்காவல் படை துணை தளபதி கேதர்நாத், டாக்டர் சுரேந்தர் தீயணைப்பு படை அலுவலர் வீரபாகு உள்ளிட்டோர் வீரவணக்கம் செலுத்தினர். ஆயுதப்படை ஆய்வாளர் விஜயகுமார் தலைமையிலான ஆயுதப்படை காவலர்கள் 21 குண்டுகள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு வீரவணக்கம் செலுத்தினர்.