Skip to main content

கஜா புயல் - கடலூரில் அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை - அனைத்துத்துறை அலுவலர்களும் பணியில் இருக்க உத்தரவு

Published on 15/11/2018 | Edited on 15/11/2018

 

 

கஜா புயலையொட்டி காற்றின் வேகம் அதிகரிப்பதால் கடலூர் துறைமுகத்தில் ஒன்பதாம் எண் 'புயல் எச்சரிக்கை' கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனிடையே புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான அனைத்து துறை அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட சிறப்பு அதிகாரி ககன்தீப்சிங் பேடி, அமைச்சர் எம்.சி.சம்பத் ஆகியோர்  கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.
 

பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 

"வெள்ள பாதிப்பு உள்ளாகக்கூடிய பகுதிகளில் முதல் தகவல் அளிப்பவர்கள் 3,126 நபர்கள் கண்டறியப்பட்டு அனைவரும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 
 

நீச்சல் வீரர்கள் 56 பேர் மற்றும் பாம்பு பிடிப்பவர்கள் 25 நபர்கள் கண்டறியப்பட்டு அனைவரும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 
 

மாநில பேரிடர் மீட்புக் குழுவில் பயிற்சி பெற்ற 117 காவலர்கள் தயார் நிலையில் உள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 50 பேர் இரண்டு குழுக்களாக கடலூர் மற்றும் சிதம்பரம் ஆகிய இடங்களில் தயார் நிலையில் உள்ளனர். 
 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளாகும் 5 இடங்களில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நீர்நிலைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. 
 

மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் பஞ்சாயத்து செயலாளர்கள் அவரவர் கிராமத்தில் தங்கி இருக்கவும், முக்கிய துறை சார்ந்த அலுவலர்கள் அவரவர் அலுவலகத்தில் இன்று இரவு தங்கி இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  
 

மின்சாரத் துறை மூலம் முழுவீச்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு போதுமான மின் கம்பங்கள்,  டிரான்ஸ்பார்மர்கள் வைக்கப்பட்டுள்ளன.  

அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் வாக்கிடாக்கி கருவிகள் கொடுக்கப்பட்டுள்ளது.   
 

43 கால்நடை பாதுகாப்பு மையங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 219 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் 24 மணி நேரமும் பணிபுரிய தயார் நிலையில் உள்ளனர்.
 

ஆவின் பால் மற்றும் பால் பவுடர் போதுமான அளவு இருப்பு உள்ளது. அரிசி 7504, சர்க்கரை 1056 மெட்ரிக் டன், கோதுமை 348 மெட்ரிக் டன் ஆகியவை இருப்பில் உள்ளது.
 

விளம்பர பதாகைகள் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை மூலம் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகளுக்காக அனைத்து துறைகளிலும் ஜேசிபி இயந்திரங்கள், ஜெனரேட்டர்கள், மரம் அறுக்கும் எந்திரங்கள், மணல் மூட்டைகள், சவுக்கு கட்டைகள்  ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 


மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவசரகால கட்டுப்பாட்டு அறையில் பாதிப்புகள்  சம்பந்தமாக தகவல் தெரிவிக்க தொலைபேசி இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. கடலூர் பேரிடர் கால வானொலி  107.8 பண்பலை அலைவரிசைகளில் மாவட்ட ஆட்சியரின் அதிகாரப்பூர்வ தகவல்களை அவ்வப்போது கேட்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.