Skip to main content

மனைவியை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட கணவர்!

Published on 04/10/2020 | Edited on 05/10/2020
incident in sethiyathoppu

 

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே மனைவியை கத்தியால் வெட்டி கொன்ற கணவர்  பூச்சிக் கொல்லி மருத்து குடித்து உயிரிழந்தது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

சேத்தியாத்தோப்பு அருகே உள்ள ஆயிப்போட்டையை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் தங்கவேல்(53). விவசாயி. இவரது மனைவி செல்வராணி(45). இவர்களின் ஒரே மகன்  வேல்முருகன்(32). இவருக்கு கடந்த 1 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. கடந்த 4 வருடமாக தங்கவேல் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இவர் அடிக்கடி மனைவியை சந்தேகப்பட்டு அவரிடம் தகராறு செய்து அடிப்பது, உதைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேல்முருகன் மனைவியுடன் பெரியப்பட்டில் உள்ள மாமனார் விட்டுக்கு சென்றுள்ளார். நேற்று முன்தினம் இரவு மனைவியிடம் தகராறு செய்த தங்கவேல் ஆத்திரமடைந்து கத்தியால் அவரது தலையில் குத்தியும், வெட்டியும் உள்ளார். இதில் படுகாயம் அடைந்த செல்வராணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து தங்கவேல் மதுவில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து குடித்து அவரும் உயிரிழந்துள்ளார். நேற்று காலை வீட்டுக்குள் இருவரும் உயிரிழந்து கிடந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து ஒரத்தூர் போலீஸாருக்கு தகவல் தந்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் 2 உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீஸார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அக்கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 



 

சார்ந்த செய்திகள்