Skip to main content

கொலைசெய்து கோவில் வளாகத்தில் புதைத்த வழக்கில் தேடப்பட்டவர் பிணமாகக் கண்டெடுப்பு...!

Published on 08/09/2020 | Edited on 08/09/2020

 

cuddalore incident



கடலூர் மாவட்டம் பண்ருட்டி, வி.ஆண்டி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணதாசன். ஹோட்டல் தொழிலாளியான இவர் பண்ருட்டி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்த மோகன் மனைவி மஞ்சுளா என்பவருடன் கடந்த ஐந்து ஆண்டுகளாக தனியாக குடும்பம் நடத்தி வந்தார். இந்த நிலையில் மஞ்சுளா கடந்த நான்காண்டுகளாக பண்ருட்டி லிங்கா ரெட்டிபாளையம் வேணுகோபால சுவாமி கோவில் அர்ச்சகர் கோபிநாத்திடம் பணியாளராக வேலை செய்துவந்தார்.

 

கோபிநாத், பிரபல ஜோதிடர். இவரிடம் ஜோதிடம் பார்க்க வருபவர்களுக்கு டோக்கன் வழங்குவது, பிறகு அவரது வீட்டு வேலைகளையும் செய்துவந்தார். இந்த தொடர்பால் அர்ச்சகர் கோபிநாத்துக்கும் மஞ்சுளாவுக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டது. இது தெரிந்த கண்ணதாசன் அடிக்கடி சென்று கோபிநாத்திடம் தகராறு செய்து வந்துள்ளார். இதன் காரணமாக கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி இரவு கண்ணதாசனை சமாதானம் பேசுவதாகக் கூறி கோவிலுக்கு வரவழைத்த அர்ச்சகர் கோபிநாத், மஞ்சுளா, கொத்தனார் திருப்பதி என்கிற சீனிவாசன் ஆகியோர் கண்ணதாசனை கொலைசெய்து கோவில் வளாக அறையில் பள்ளம் தோண்டி புதைத்துவிட்டனர். இந்தக் கொலை வழக்கில் கோவில் அர்ச்சகர் கோபிநாத், மஞ்சுளா இருவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் மூலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

கண்ணதாசன் கொலைக்கு உதவி செய்த கொத்தனார் திருப்பதி என்ற சீனிவாசன்மீதும் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த சீனிவாசனை தேடிவந்தனர். இந்தநிலையில் சீனிவாசன் குறித்த தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. 

 

கடந்த 26ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் போலீஸ் நிலைய எல்லைப் பகுதியில் உள்ள முந்திரி தோப்பில் 55 வயதுள்ள ஒரு ஆண் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இறந்து சில நாட்களான அந்த உடலை நரிகள் ஓநாய்கள் கடித்துச் சிதைத்த நிலையில் கிடந்துள்ளது. இறந்து கிடந்த அந்த உடல் யாருடையது என்ற விவரம் தெரியாததால் கடந்த 26ஆம் தேதி ஆரோவில் போலீசார் அந்த உடலை அடக்கம் செய்துவிட்டனர். அந்த உடலை புகைப்படம் எடுத்து காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைத்து விவரம் கேட்டுள்ளனர்.

 

Ad

 

அதைப் பார்த்துவிட்டு திருப்பதி என்கிற சீனிவாசனின் மனைவி ரேவதி அவரது மகன் முரளி ஆகியோர் ஆரோவில் காவல் நிலையம் சென்று இறந்தவர் பற்றிய விவரம் கேட்டுள்ளனர். அவர்களிடம், போலீசார் பிணம் கிடந்த இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட இறந்தவரின் சட்டை, லுங்கி, செருப்பு ஆகியவற்றை காட்டியுள்ளனர். அதைப்பார்த்த சீனிவாசன் மனைவி ரேவதி, அவரது மகன்  முரளி அவை சீனிவாசன் உடையதுதான் என்று ஒப்புக்கொண்டனர். இதையடுத்து கண்ணதாசன் கொலை வழக்கில் தேடப்பட்டுவந்த திருப்பதி என்கிற சீனிவாசன் கொலை வழக்கில் சிக்கி சிறையில் செல்ல வேண்டும் என்ற பயத்தில் தலைமறைவாக இருந்தவர், தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.