Skip to main content

பெண் தூக்கிட்டு தற்கொலையான விவகாரம்! தற்கொலைக்கு காரணமானவர் கைது!

Published on 19/09/2020 | Edited on 19/09/2020

 

cuddalore incident

 

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்துள்ள மணவாளநல்லூர் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவரின் மனைவி செம்பாயி (30). இவருக்கு திருமணம் ஆகி 9 ஆண்டுகளான நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை விட்டு பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி இவரை அதே பகுதியைச் சேர்ந்த சின்னகுட்டி என்கிற ராஜேந்திரன் (42), என்பவர் வலுக்கட்டாயமாக தூக்கிச்சென்று அப்பகுதியில் உள்ள தீவனத் தோட்டம் என்ற இடத்தில் பாலியல் வன்முறை செய்துள்ளார். 

 

இதனால் அவர் கூச்சல் போட்டதில் அப்பகுதியினர் ஓடிவந்து தடுப்பதற்குள் ராஜேந்திரன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதையடுத்து செம்பாயியின் தாய் அரசி செம்பாயிடம் கேட்டபோது தன்னை ராஜேந்திரன் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு ஓடி விட்டார் என கூறியுள்ளார். தொடர்ந்து இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என அரசி அவரிடம் சமாதானம் கூறி, வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். இதனால் கடந்த சில நாட்களாக மனமுடைந்திருந்த செம்பாயி நேற்று தனது வீட்டின் பின்புறம் உள்ள மாமரத்தில் தற்கொலை செய்துகொள்வதற்காக தூக்கிட்டு கொண்டுள்ளார்.

 

இதனை அறிந்த அவரது பெற்றோர் மற்றும் அப்பகுதியினர் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசென்றனர். பின்பு மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டுசென்று சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிர் இறந்தார். இதுகுறித்து செம்பாயியின் தாய் அரசி கொடுத்த புகாரின்பேரில், விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். 

 

விசாரணையில் செம்பாயி தற்கொலை செய்வதற்கு முன்பு தனது கையால் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தில், 'என்னை வன்கொடுமை செய்த ராஜேந்திரனை ஆவியாக வந்து பழி வாங்குவேன்...' என குறிப்பிட்டுள்ளார். செம்பாயி எழுதிவைத்த கடிதம் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்ததில் செம்பாயின் இறப்புக்கு ராஜேந்திரன்தான் காரணம் என தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் சின்னக்குட்டி என்கிற ராஜேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

26 மணி நேரம் விமான பயணம்; கடல் கடந்து வந்து ஜனநாயகக் கடமையாற்றிய மருத்துவர்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
doctor who came to Cuddalore from New Zealand and voted

கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்தவர் வினோத்( 46).  மருத்துவர். இவர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நியூசிலாந்தில் வசித்து வருகிறார். அங்கு அவர் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.  இந்த நிலையில் கடலூர் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதும், அவர் தனது ஒற்றை வாக்கை செலுத்த சொந்த ஊருக்கு வந்து வாக்களிக்க விரும்பினார்.

இதையடுத்து அவர் நியூசிலாந்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்து செல்ல சுமார் ரூ.1.70 லட்சம் செலவு செய்து டிக்கெட் வாங்கினார். பின்னர் அவர் ஓட்டு போட விமானத்தில் 26 மணி நேரம் பயணம் செய்து சொந்த ஊருக்கு( கடலூர்,செம்மண்டலத்துக்கு) 18 ஆம் தேதி இரவு வந்தார்.  நேற்று மதியம் 12 மணிக்கு கடலூர் செம்மண்டலத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று தனது வாக்கைப் பதிவு செய்தார்.

பின்னர் இதுகுறித்து மருத்துவர் வினோத் கூறுகையில், வெளிநாட்டில், தமிழ்நாட்டை சேர்ந்த பலர் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக சொந்த ஊர்களுக்கு சென்று தங்களது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையாற்ற முடியாமல் சிரமப்படுகின்றனர். அதனால் வெளிநாட்டில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தபால் வாக்கு அளிக்க அரசு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்றார்.

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.