Skip to main content

வேப்பூர் அரசு பஸ் நடத்துனர் கொலையில் தந்தை மகன் கைது!!!

Published on 06/05/2020 | Edited on 06/05/2020

 

c


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகிலுள்ள ஊ.கொளப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ரவிசந்திரன் (வயது 48). விருத்தாசலம் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார்.  விருத்தாசலம் முல்லை நகரில் தனது இரண்டாவது மனைவியுடன் வசித்து வந்த இவர் வீட்டின் அருகில் மனைவிக்கு  காய்கறி கடை வைத்து கொடுத்துள்ளார்.


அதே பகுதியை சேர்ந்தவர் குறி சொல்லும் பூசாரி  ஜேம்ஸ் என்ற சத்தியநாராயணன்.  குறி சொல்வதோடு,  வெங்காயம் வியாபாரமும்  செய்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கண்டக்டர்  ரவிசந்திரனிடம் பூசாரி அடிக்கடி வெங்காயத்தை கடனுக்கு  வாங்கி வியாபாரம் செய்து பின்னர் கடனை கொடுத்து வந்துள்ளார். 

 

 

c

 

இந்நிலையில் கரோனா வந்ததால் வியாபாரம் குறைந்துள்ளது. அதனால், கொஞ்ச நாட்களுக்கு முன் வெங்காயம் வாங்கிய பாக்கி தொகை 23 ஆயிரத்தை சத்தியநாராயணன் கொடு்க்காமல் இருந்து வந்துள்ளார். இது குறித்து ரவி அடிக்கடி போனில் கேட்டுள்ளார்.


கடந்த 28 ந் தேதி ரவி போன் செய்து பணம் கேட்டபோது, வேப்பூர் அருகிலுள்ள கீரம்பூர் கிராமத்திலுள்ள தனது வராகி கோயிலுக்கு வந்து பணத்தை வாங்கி செல்லும்படி கூறியதால் ரவியும் தனது டி.வி.எஸ் எக்ஸ்.எல்  வாகனத்தில் மதியம்  சுமார் இரண்டு மணிக்கு கீரம்பூர் சென்றுள்ளார்.

அங்கு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது ரவி, பூசாரியின் உயிர்நிலையில் எட்டி உதைத்துவிட,  சத்தியநாராயணன் அருகில் கிடந்த கட்டையால் ரவியை அடித்துள்ளார்.   இதை கண்ட சத்தியநாராயணனின் 17 வயது மகனான விக்னேஸ்வரன் அருகில் கிடந்த கைபம்பின் கைப்பிடியை எடுத்து ரவியின் தலையில் அடித்துள்ளார்.  தந்தையும் மகனும் மாறி மாறி அடித்ததில் பலத்த காயமடைந்த கண்டக்டர் ரவி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். இறந்த ரவிசந்திரனின் தலையிலிருந்து அதிக அளவு ரத்தம் கொட்டியதால் அதை மறைக்க பூசாரியும் அவரது மகனும் புடவையால் சுற்றி பின்னர் தார்பாயால் மூடியுள்ளனர்.

 


இரவு பத்து மணிக்கு மேல் பூசாரியின் வாகனத்தில் ரவியின் உடலையும் அவரது இருசக்கர வாகனத்தையும் ஏற்றிக்கொண்டு வேப்பூரில் இருந்து சேலம்  செல்லும் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் அருகி்ல் விபத்து நடந்தது போல ரவியின் உடலையும், அவரது இருசக்கர வாகனத்தையும் போட்டு சென்றுள்ளனர். அடையாளம் தெரியாத சடலம் கிடந்தது குறித்து  வேப்பூர் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்கு பதிவு செய்தார்.

இது குறித்து உண்மை நிலையை விசாரிக்குமாறு கடலூர் எஸ்பி அபிநவ் உத்தரவிட, திட்டக்குடி டிஎஸ்பி வெங்கடேசன், வேப்பூர் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் எஸ்ஐ, சக்திகணேஷ், குற்றபிரிவு போலிசார் மணிகண்டன்,  ராஜா, கலை, வேப்பூர் போலிசார்  பக்தவச்சலம், சதன், சதிஸ், தனஞ்செழியன், சைபர் க்ரைம் ஏட்டு பாலு ஆகியோர் கொண்ட  தனிப்படை அமைக்கபட்டது.

 

 

 


தனிப்படை போலிசார் கண்டக்டர்  ரவியின் மரணம் குறித்து விசாரணை செய்ததில், விருத்தாசலம் முல்லை நகர் பூசாரி சத்தியநாராயணன் மீது சந்தேகம் ஏற்பட்டது.  அவரை தேடியபோது, தலைமறைவாகியது தெரிந்தது.  பின்னர் ராணிபேட்டை மாவட்டம்,  அரக்கோணம் தாலுகா, வள்ளூர் காளி கோயிலில் பதுங்கி இருந்த சத்தியநாராயணன், அவரது மகன் விக்னேஸ்வரன் ஆகியோரை கைது செய்தனர்.

கொலை நடந்த ஒரு வாரத்தில் கொலை குற்றவாளிகளை கைது செய்த வேப்பூர் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் தனிப்படை போலிஸாரை கடலூர் எஸ்பி அபிநவ் மற்றும் திட்டக்குடி டிஎஸ்பி வெங்கடேசன் ஆகியோர் பாராட்டினார்கள்.

 

சார்ந்த செய்திகள்