Skip to main content

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; தீர்ப்பைக் கேட்டு தற்கொலைக்கு முயன்ற குற்றவாளி!

Published on 30/09/2021 | Edited on 30/09/2021

 

Cuddalore Girl child case POCSO Court verdict

 

கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். அவர் அதேபகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு உணவு கொண்டுபோவது வழக்கம். அப்படி 12.02.19 அன்று இரவு உணவு கொண்டுபோன சிறுமி, உணவைக் கொடுத்துவிட்டுத் திரும்பி தனது வீட்டிற்கு வந்துகொண்டிருந்தபோது, சேத்தியாத்தோப்பு - கும்பகோணம் சாலையில் உள்ள அவர்களது குல தெய்வம் கோவில் அருகில் வந்துகொண்டிருந்தார். அப்போது, குமாரக்குடியைச் சேர்ந்த பாலகுரு மகன் தொழிலாளி திலகர் என்கிற குணசேகரன் (வயது 34). தொழிலாளி கட்டமணியார் என்கிற ஜெயசங்கர் (49) ஆகிய 2 பேரும், அந்த சிறுமியை வழிமறித்து, அருகிலிருந்த கோயிலின் பின்புறத்திற்கு வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று இருவரும் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்தனர். 

 

இதனால் மனமுடைந்த அந்த சிறுமி வீட்டுக்கு வந்து விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உடன் அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிதம்பரம் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. 

 

அப்போது அச்சிறுமி தனக்கு நடந்த பயங்கரத்தைத் தனது தாயிடம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அவரது தாய், சேத்தியாத்தோப்பு மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, திலகர், ஜெயசங்கர் ஆகிய 2 பேரையும் காவல்துறை கைது செய்தனர்.

 

இந்த வழக்கு கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எழிலரசி முன்னிலையில் நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பை நீதிபதி எழிலரசி அறிவித்தார். அதில், இவ்வழக்கில் சிறுமியைத் தாக்கிய திலகருக்கு 1 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.1000 அபராதமும், அபராத தொகையைக் கட்ட தவறினால் மேலும் 3 மாத சிறைத் தண்டனையும், சிறுமியைக் கடத்திச்சென்ற குற்றத்திற்காகத் திலகர், ஜெயசங்கருக்கு தலா 10 ஆண்டு சிறைத் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராத தொகையைக் கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறைத் தண்டனையும் வழங்கி தீர்ப்புக் கூறினார். மேலும், சிறுமியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடுங்குற்றத்திற்காக 2 பேரும் சாகும் வரை ஆயுள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், இந்தத் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீட்டுத் தொகை கொடுத்து, ஈடு செய்ய முடியாது என்றாலும், அவர் தன்னிச்சையாக வாழ வழிவகை செய்யும் வகையில், 30 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியர், மாநில அரசுத் திட்டங்களில் ஏதாவது ஒன்றிலிருந்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். 

 

இந்தத் தீர்ப்பைக் கேட்டுக்கொண்டிருந்த இரண்டு குற்றவாளிகளில் ஒருவரான ஜெயசங்கர் தனது சட்டைப் பையில் வைத்திருந்த மாத்திரைகளை மொத்தமாகத் தனது வாயில் போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை அங்கிருந்த காவல்துறையினர் கவனித்து உடனடியாக அவரது வாயிலிருந்து மாத்திரைகளை வெளியே எடுத்தனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.