Skip to main content

கிணற்றுக்குள் வெடிகுண்டு வெடித்து விவசாயி பலி!

Published on 02/03/2020 | Edited on 02/03/2020

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த படுகளாநத்தம் கிராமத்தில் வசித்து வருபவர் திருமால். இவர் விழுப்புரம் பணியிடைப் பயிற்சி பள்ளியில் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது  சொந்த ஊரில்,  அமைந்துள்ள நிலத்தில் உள்ள கிணற்றை ஆழப்படுத்தி நீர் ஆதாரத்தை பெருக்க வேண்டும் என்ற முயற்சியில் பெரம்பலூர் மாவட்டம் கைகளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த  ராமலிங்கம், லட்சுமி, மணி, கோபால் ஆகி கிணறு தோண்டும் தொழிலாளிகள் மூலம் பணி மேற்கொள்ளப்பட்டது. இவர்கள் சுமார் ஒரு வார காலமாக கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். 

 

Cuddalore Farmer issue

 



இந்நிலையில் கிணறு ஆழப்படுத்தும் போது, பாறைகள் இருந்துள்ளது. இதனால் அப்பாறைகளை அகற்றி, ஆழப்படுத்துவதற்காக வெடிமருந்துகளை கொண்டு வெடிக்க செய்வதற்கான பணிகளை மேற்கொண்டனர்.  வெடிகுண்டு வெடிப்பதற்கு வயர்கள்  மூலம் கொண்டு வந்து பாதுகாப்பான இடத்தில் இருந்து வெடிப்பதற்கான முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர். அப்போது கோபால் என்பவரை தவிர்த்து மீதமுள்ள மூவரும், கிணற்றிற்கு வெளியே இருந்ததாக கூறப்படுகிறது. அச்சமயத்தில் எதிர்பாராத விதமாக, வெடிகுண்டு வெடித்ததில், மண்சரிவு ஏற்பட்டு கிணற்றில் இருந்த கோபால் என்பவரின் மீது மண் சரிந்து, பாறை இடுக்குகளுக்குள் அவர் புதைந்துள்ளார். 

இதனால் செய்வதறியாமல் திகைத்த கிணறு தோண்டும் தொழிலாளிகள் கிணற்றின் உரிமையாளரான காவல் அதிகாரிக்கும், விருத்தாசலம் காவல் துறையினருக்கும் தகவல் அளித்தனர். தகவலின் பேரில்  விருத்தாச்சலம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு மண்சரிவு ஏற்பட்ட இடத்தை அகற்றுவதற்கும், கிணற்றில் உள்ள தண்ணீரை மோட்டார் கொண்டு,  அப்புறப்படுத்துவதற்கும் உண்டான முயற்சிகளை மேற்கொண்டனர்.

சுமார் 4 மணி நேரமாக தீயணைப்புத் துறையினர் மற்றும் ஊர் பொதுமக்கள் மண் சரிவில் சிக்கிய கோபாலை மீட்பதற்கு தீவிர முயற்சி மேற்கொண்டனர்.  இச்செய்தி அக்கம்பக்கம் கிராமங்களில் வேகமாக பரவியதால், ஏராளமானோர் சம்பவ இடத்தில்  குவிந்தனர்.  நான்கு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயணைப்பு படையினர் பாறை இடுக்குகளுக்குள் சிக்கிக் கொண்டிருந்த கோபாலின் உடலை கண்டறிந்து மீட்டனர். பின்னர் அவரது உடலை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். 

வெடிப்பதற்கு அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்து கொண்டிருந்த நிலையில் எவ்வாறு வெடிகுண்டு வெடித்தது என்றும், வெடி மருந்துகள் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளதா என்றும்,  அதிக சக்தி கொண்ட ஜெலட்டின் குச்சிகள் பயன்படுத்தப்பட்டு உள்ளதா என்றும் பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 
 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி மரணம்; நீடிக்கும் மர்மம் - போலீஸ் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
College student mysterious passed away in Thiruvarangam

திருவரங்கம் ராஜகோபால நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கோபி என்கிற கோவிந்தராஜன் (வயது 60). இவர் திருவரங்கம் கோவிலில் சுவாமிக்கு வரக்கூடிய துணிகளை ஏலம் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஜெய்ஸ்ரீ(வயது 18). திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.ஏ ஆங்கில பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். இதற்கிடையில், இவர் திருவரங்கத்தைச் சேர்ந்த கிரோஷ் என்ற வாலிபரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கீழ சித்திர வீதியில் உள்ள காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து குதித்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கோவிந்தராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவரங்கம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா மற்றும் போலீசார்  காதலன்  மற்றும் காதலனின் நண்பர்கள் உள்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இரண்டு பேர் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் தெரிய வந்துள்ளது.அதனால் இது திட்டமிட்ட கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காதலனின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து கல்லூரி மாணவி குதித்து தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் திருவரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

எந்த சின்னத்திற்கு ஓட்டு போட்டேன் என சொன்ன பெண் அடித்து கொலை; 7 பேருக்கு வலை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

நேற்று தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் எந்த சின்னத்தில் வாக்களித்தேன் என வெளியே சொன்னதால் ஒரு பெண் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவல் தமிழகத்தில் பரபரப்பு ஏற்படுத்திருக்கிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ளது பக்ரிமாணியம் கிராமம். அந்த பகுதியில் வசித்து வந்தவர் கோமதி. நேற்று நடந்த மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு சின்னத்திற்கு வாக்களித்ததாக வெளியில் கூறியுள்ளார். இதனைக் கேட்ட அதே ஊரைச் சேர்ந்த அருள், பாண்டியன், அறிவுமணி, ரவிராஜா, கலைமணி, தர்மராஜ் ஆகியோர் அப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 'நீ ஏன் எங்கள் கட்சிக்கு வாக்களிக்கவில்லை' என கூறி ஏழு பேரும் ஒன்றாக சேர்ந்து கோமதியை பலமாக தாக்கியுள்ளனர்.

இதில் கோமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் உடலைக்  கைப்பற்றி விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அவரது உடலை அனுப்பி வைத்தனர். இதில் சம்பந்தப்பட்ட ஏழு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இக்கொலைக்கு உடைந்தையாக இருந்ததாக அந்த பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.