cuddalore family incident

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் எஜமான் நகரில் வசிப்பவர் குமார். இவர் சொந்தமாக லேத் பட்டறை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தனது மனைவி ஷகீரா பானு(40), 7 ஆம் வகுப்பு படிக்கும் மகன் பரத்(12), 5 -ஆம் வகுப்பு படிக்கும் மகள் ஹேமவர்ஷினி(10) ஆகியோருடன் எஜமான் நகரில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

Advertisment

இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் அனைவரும் வீட்டில் தூங்கி உள்ளனர். குமார் வீட்டில் உள்ள ஹாலில் படுத்து தூங்கி உள்ளார். அவரது மனைவி ஷகீரா பானு தனது இரண்டு பிள்ளைகளுடன் அறைக்குள் படுத்துத் தூங்கி உள்ளார். இன்று காலை குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வெகு நேரமாகியும், கதவு திறக்காததால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார் குமார். அப்போது தாய், மகன், மகள் என மூவரும் மின்விசிறியில் தூக்கில் பிணமாகத் தொங்குவதைக் கண்டு கதறி அழுதுள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் விரைந்து சென்ற காவல்துறையினர் மூன்று உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisment

இதுகுறித்து காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் குமார் மற்றும் அவரது மனைவி சகீராபானுக்கு இடையே கடந்த மூன்று மாதமாக பிரச்சனை இருந்து வந்ததாகவும், ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வது இல்லை எனவும் கூறப்படுகிறது. அவ்வப்போது பிரச்சினை ஏற்படுவதால் மனமுடைந்த குமாரின் மனைவி ஷகீரா பானு தனது மகன், மகளின் மூக்கில் பஞ்சு வைத்து அடைத்து, மின்விசிறியில் தூக்கில் தொங்க விடப்பட்டதாகவும், அதன் பின்னர் சகீராபானுவும் மின்விசிறியில் தூக்கில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகன், மகள் ஆகிய மூவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.