Skip to main content

கடலூர் என்கவுண்டர் வழக்கு; சிபிசிஐடிக்கு மாற்றம்...!

Published on 19/02/2021 | Edited on 19/02/2021

 

Cuddalore Encounter Case Change to CBCID

 

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சுப்பராயலு நகரைச் சேர்ந்த வீரா என்கிற வீராங்கையன் (30), கடந்த 16-ஆம் தேதி இரவு 10 பேர் கொண்ட கும்பலால் கொல்லப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக பண்ருட்டி வீரப்பெருமாநல்லூர் சோதனைச்சாவடி அருகே பைக்கில் தப்பிச் செல்ல முயன்ற 5 பேரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். மேலும் கொலையில் தொடர்புடைய மற்றவர்களைப் பிடிப்பதற்காக, முக்கியக் குற்றவாளியான கடலூர் குப்பங்குளத்தைச் சேர்ந்த முருகன் மகன் கிருஷ்ணன் (30) என்பவர் அளித்த தகவலின் பேரில், அவரை குடுமியான்குப்பம் ஓடை பகுதிக்குப் போலீசார் அழைத்துச் சென்றனர்.

 

அப்போது கிருஷ்ணன் போலீசாரைத் தாக்கிவிட்டுத் தப்பி ஓட முயன்றபோது அவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். அதையடுத்து அவரது சடலம் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்தச் சம்பவத்தில் கிருஷ்ணன் தாக்கியதில் காயமடைந்த உதவி ஆய்வாளர் தீபன் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரிடம் குற்றவியல் நடுவர் (எண்2) மணிமாறன் புதன்கிழமை (17.02.2021) மாலை விசாரணை செய்தார்.

 

இதனிடையே உடற்கூறாய்வு செய்யப்பட்ட கிருஷ்ணனின் சடலத்தை வாங்காமல் அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்ட கிருஷ்ணனின் தாயார் லட்சுமி, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (18.02.2021) புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், "எனது மகன் ஓவியராகவும், இசைக்குழுவில் டிரம் வாசிப்பவராகவும் செயல்பட்டு வந்தார். அவர் மீது எந்தக் குற்ற வழக்கும் இல்லாத நிலையில் போலீசார் அவரை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். இந்தச் செயலில் ஈடுபட்ட உதவி ஆய்வாளர் உள்ளிட்ட போலீசார் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்ய வேண்டும்.

 

கிருஷ்ணனின் சடலத்தை தங்கள் தரப்பு மருத்துவர் முன்னிலையில் மீண்டும் உடற்கூறாய்வு செய்வதுடன், அதை வீடியோ ஒளிப்பதிவு செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் கிருஷ்ணனின் வருமானத்தை நம்பியே குடும்பம் நடத்தி வந்ததால், அவரது மனைவிக்கு அரசு வேலையும், குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடும் வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைத்து டி.ஐ.ஜி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

26 மணி நேரம் விமான பயணம்; கடல் கடந்து வந்து ஜனநாயகக் கடமையாற்றிய மருத்துவர்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
doctor who came to Cuddalore from New Zealand and voted

கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்தவர் வினோத்( 46).  மருத்துவர். இவர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நியூசிலாந்தில் வசித்து வருகிறார். அங்கு அவர் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.  இந்த நிலையில் கடலூர் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதும், அவர் தனது ஒற்றை வாக்கை செலுத்த சொந்த ஊருக்கு வந்து வாக்களிக்க விரும்பினார்.

இதையடுத்து அவர் நியூசிலாந்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்து செல்ல சுமார் ரூ.1.70 லட்சம் செலவு செய்து டிக்கெட் வாங்கினார். பின்னர் அவர் ஓட்டு போட விமானத்தில் 26 மணி நேரம் பயணம் செய்து சொந்த ஊருக்கு( கடலூர்,செம்மண்டலத்துக்கு) 18 ஆம் தேதி இரவு வந்தார்.  நேற்று மதியம் 12 மணிக்கு கடலூர் செம்மண்டலத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று தனது வாக்கைப் பதிவு செய்தார்.

பின்னர் இதுகுறித்து மருத்துவர் வினோத் கூறுகையில், வெளிநாட்டில், தமிழ்நாட்டை சேர்ந்த பலர் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக சொந்த ஊர்களுக்கு சென்று தங்களது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையாற்ற முடியாமல் சிரமப்படுகின்றனர். அதனால் வெளிநாட்டில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தபால் வாக்கு அளிக்க அரசு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்றார்.

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.