கடலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் விறுவிறுப்புடன் நடைபெற்றது. மஞ்சக்குப்பம் வாக்குச்சாவடியில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வனும், தேவனாம்பட்டினம் வாக்குச் சாவடியில் காவல் கண்காணிப்பாளர் சரவணனும் வாக்குப் பதிவு செய்தனர். பா.ம.க வேட்பாளர் கோவிந்தசாமி விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரி வாக்குச்சாவடியிலும், தி.மு.க வேட்பாளர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் பண்ருட்டி பத்திரபதிவுதுறை வாக்குச்சாவடியிலும் வாக்களித்தனர்.
பண்ருட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவதிகை TN பாவாடை பிள்ளை நகராட்சி உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சின்னமான பரிசு பெட்டகம் பொத்தான் இல்லாததால் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக வாக்குபதிவு நிறுத்தப்பட்டது.
வேப்பூர் அருகே தே.புடையூரில் மருத்துவ கழிவு எரிக்கும் ஆலையை அப்புறம் படுத்த கோரி ஒரு பகுதி பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்ததால் 1237 வாக்குகள் உள்ள வாக்குச்சாவடியில் 400-க்கும் குறைவான வாக்குகளே பதிவாகின.
அதேசமயம் கடலூர் தொகுதி வரக்கால் பட்டு வாக்குச்சாவடியில் மொத்த வாக்காளர்களை விட 50 வாக்குகள் கூடுதலாக பதிவாகி உள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.