
நாட்டு வெடி தயார் செய்யும் குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பெண் ஒருவர் உடல் சிதறி உயிரிழந்த சம்பவம் இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியகுமட்டி பகுதியில் பி. முட்லூர் நாகவல்லி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் சுப்பிரமணியன் (55) என்பவருக்குச் சொந்தமான நாட்டு வெடி தயார் செய்யும் குடோன் உள்ளது. அரசு உரிமம் பெற்று அவர், நாட்டு வெடி தயார் செய்து, விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் பி. முட்லூர் நாகவல்லி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மணிவண்ணன் மனைவி லதா (37) என்பவர் இன்று (15.06.2025) குடோன் அருகே சிறிய அளவிலான கந்தகம் வைத்திருந்த ஓட்டுக் கொட்டகையில் வெடி தயார் செய்யும் பணியில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
அப்போது சுமார் பகல் 11.30 மணி அளவில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் அந்த கொட்டிகை தரை மட்டமானது. இதில் லதா உடல் சிதறி உயிரிழந்தார். இது குறித்துத் தகவலறிந்த பரங்கிப்பேட்டை போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று லதாவின் சிதறிய உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பரங்கிப்பேட்டை தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று விபத்து நடந்த இடத்தில் தண்ணீரைப் பீச்சி அடித்தனர். இந்த வெடி விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.