Skip to main content

மத்திய, மாநில அரசுகள் 'ஹைட்ரோ கார்பன்' திட்டத்தை ரத்து செய்யாவிட்டால் மக்கள் திரல் போராட்டத்தை நடத்துவோம்- மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

Published on 30/06/2019 | Edited on 01/07/2019

கடலூர்  மாவட்ட தி.மு.க  சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 96-ஆவது பிறந்த நாள் விழா மற்றும் மக்களவை தேர்தலில் மதசார்பற்ற கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது. கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது “தேர்தல் நேரத்தில் யார் யாரோ சொன்னார்கள். தலைவர் கலைஞர் இல்லாத இடத்தை ஸ்டாலினால் பூர்த்தி செய்ய முடியாது, ஸ்டாலினுக்கு அந்த தகுதி இருக்கிறாதா? என்றார்கள். கலைஞர் இல்லாத வெற்றிடத்தை வெற்றி இடமாக நிரப்பி நாம் காட்டியுள்ளோம். பெரிய டாக்டர், சின்ன டாக்டர் சொன்னார்கள், டாக்டர் அம்மாவும் சொன்னார்கள், திமுக அழிந்து விடும், இந்த தேர்தலோடு முடிந்து விடும்’ என்றார்கள். இப்படி சொன்னவர்கள் எல்லாம் அப்பாவி அரசியல் தலைவர்களாக, அரசியல் அனாதைகளாக ஆகி விட்டார்கள். அப்போதும் சொன்னேன், இப்போதும் சொல்கிறேன், எப்போதும் சொல்வேன் திமுகவை எந்த கொம்பனாலும் தொட்டு கூட பார்க்க முடியாது. நம்முடைய கூட்டணி  வெறும் தேர்தல் கூட்டணி அல்ல, கொள்கை கூட்டணியாக அமைந்தது. அதனால் வெற்றியும் பெற்றது. நமது கூட்டணி கடந்த 2 ஆண்டு காலமாக மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து, மத்திய மாநில, அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தி வந்தோம். அதே போல் மக்களவைத் தேர்தலில் நாற்பதும் நமதே என்ற பிரச்சாரத்தை முன் வைத்து அதில் வெற்றியும் பெற்று இருக்கிறோம்.

 

CUDDALORE DMK MEETING YESTERDAY STALIN SPEECH VOICE RAISED

 

ஒன்றரை ஆண்டுகால ஆட்சி இருக்கிறது என்கிறார்கள். இந்த ஆட்சியின் ஆயுள் முடிந்து விடுமா அல்லது அதற்கு முன் கவிழ்ந்து விடுமா? என்று கேள்விகள் எழுந்துள்ளன. நான் சொல்கிறேன் இந்த ஆட்சி விரைவில் கவிழப்போகிறது. அதுதான் உண்மை.  தமிழ்நாட்டில் ஆ ட்சி மாற்றம் ஏற்படவில்லையே என்று நம்மில் சிலருக்கு சோர்வு ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் இடைத்தேர்தலில் மக்கள் 13 இடங்களில் நம்மை வெற்றி பெற வைத்திருப்பதன் மூலம் மக்கள் இந்த ஆட்சியை மாற்ற விரும்பியிருக்கிறார்கள். அதுபோல் 38 எம்பிகள் வெற்றி பெற்று என்ன செய்யப் போகிறார்கள் என்றார்கள். ஆனால் புதிய கல்விக் கொள்கை மூலம் இந்தி மொழியை திணிக்கும் மும்மொழி கொள்கையை எதிர்த்து வெற்றி பெற்றிருக்கிறோம். ரயில்வே துறையில் இந்தியின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்தியிருக்கிறோம்.  மக்களவையில் தமிழின் பெருமையை உணர்ந்திருக்கிறோம், திராவிடத்தை உயர்த்திப் பிடித்து இருக்கிறோம். நாங்கள் கேட்கிறோம் ஒரு முதல்வர்,  ஒரு துணை முதல்வர், 32 அமைச்சர்கள் இருந்து என்ன பயன்? தவித்த வாய்க்கு தண்ணீர் தர முடியாத அரசாக, ஒரு குடம் தண்ணீர் கொடுக்க வக்கில்லாத ஆட்சியாகவும் இருக்கிறது.

 

 

CUDDALORE DMK MEETING YESTERDAY STALIN SPEECH VOICE RAISED

 


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நாம் போராட்டங்கள் நடத்தி இருக்கிறோம். இந்த பிரச்சனையை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம். அப்படி தீர்வு கிடைக்காவிட்டால் மக்களை அணி திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்று ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கிறேன். அதுபோல் நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை, மேகதாது அணை கட்ட எதிர்ப்பு என தொடர்ந்து மக்கள் பிரச்சனைக்காக போராட இருக்கிறோம். எடப்பாடி முதலமைச்சராக வேண்டும் என்பதற்காக மக்கள் வாக்களிக்கவில்லை. ஒரு விபத்தில் முதல்வராகி இருக்கிறார். இன்னும் ஒன்றரை ஆண்டு காலம் இருப்பதால் மீண்டும் தேர்தல் வைத்தாலும் அதிமுக வரப்போவதில்லை. அதற்கு முன்னோட்டமாகத்தான் இந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள், இடைத்தேர்தல் முடிவுகள் அமைந்திருக்கின்றன.  

 

 

CUDDALORE DMK MEETING YESTERDAY STALIN SPEECH VOICE RAISED

 

எதிர்வரும் சட்டசபை தேர்தலிலும் நமது அணி வெற்றி பெறும். அப்போது தவறு செய்த இவர்கள் எங்கே ஓடினாலும் நாம் விட மாட்டோம்” என்றார். இந்த பொதுக்கூட்டத்தில்  மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர், சிதம்பரம் தொல்.திருமாவளவன், புதுச்சேரி வைத்திலிங்கம், சேலம் பார்த்திபன், கள்ளக்குறிச்சி பொன்.கவுதமசிகாமணி, புதுச்சேரி மாநில அமைப்பாளர்கள் சிவா, சிவக்குமார், காரைக்கால் நாஜிம், விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் பொன்முடி, கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன், எம்.எல்.ஏக்கள் சபா.ராஜேந்திரன், துரை.கி.சரவணன் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பேசினார்கள்.  இந்த கூட்டத்தில் ஆயிரக்கணக்கான திமுக மற்றும் கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

 

 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம்;நடந்தது என்ன? - காவல்துறை விளக்கம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
womanincident What happened Police explanation

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ள பக்ரிமாணியம் கிராமத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு சின்னத்திற்கு வாக்களித்ததாக ஒரு பெண் வெளியில் கூறியதாகவும், இதனைக் கேட்ட அதே ஊரைச் சேர்ந்த சிலர் அப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதோடு இவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து அந்த பெண்ணை பலமாக தாக்கியதாகவும் கூறப்பட்டது. இதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாகவும் கூறப்பட்டது. இது குறித்து உடனடியாக ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், இந்த கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “கடந்த 19.04.2024 அன்று மாலை சுமார் 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பக்கிரிமணியம் கிராமத்தில் உள்ள ஆலமரம் முன்பு இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. ஒருபுறம் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் (அனைவரும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்) மற்றொரு பக்கம் ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் (அனைவரும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்). ஜெயசங்கரின் மகள் ஜெயப்பிரியாவை கிண்டல் செய்ததற்காகவும். ஜெயக்குமாரை தாக்கியதாக அவர் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுமாறு கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காகவும் தன்னெழுச்சியாக வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த தகராறில், இரு தரப்பினரும் ஆயுதம் ஏந்தாமல் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ள, கோமதி (ஜெயக்குமாரின் மனைவி) தலையிட்டு பிரச்னையை தடுக்க முயலும் போது. கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு (PHC)  அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் Cr.No. 96/2024 U/s 147, 148, 294 (b), 323, 324, 506(ii), 302 IPC r/w 4 of TN பெண்கள் துன்புறுத்தல் தடைச் சட்டம் வழக்கு 20.04.2024 அன்று 01.00 மணிக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட மொத்தம் 10 பேரில், ஐந்து பேர், 1. கலைமணி 2. தீபா (கலைமணியின் மனைவி) 3. ரவி 4. மேகநாதன் மற்றும் 5. அறிவுமணி ஆகியோர் கைது செய்யப்பட்டு 20.04.2024 அன்று நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். 

woman incident What happened Police explanation

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், மேற்கண்ட சம்பவம் இரு தரப்பினருக்கும் இடையே இருந்த முன்விரோதம் காரணமாக நடந்துள்ளது என்பதும், சமூகவலைத்தளங்களில் பரவிய ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக வாக்களித்ததால் தாக்கியதாக குறிப்பிட்டுள்ளது முற்றிலும் தவறான கூற்றாகும். மேலும் இந்த சம்பவம் தொடர்பான காணொளி முற்றிலும் பொய்யானது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.