Skip to main content

மலேசியாவில் மகன், மருமகள், பேத்தி உயிரிழப்பு- அரசுக்கு உறவினர்கள் கோரிக்கை!

Published on 25/07/2021 | Edited on 25/07/2021

 

 

CUDDALORE DISTRUCT FAMILY INCIDENT IN MALASIYA GOVERNMENT


கடலூர் மாவட்டம், திட்டக்குடி தெற்கு தெருவைச் சேர்ந்த பிரதாபன் சிங் என்பவரின் மகன் ரவிராஜா (வயது 40). மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர் நகரில் சாப்ட்வேர் இன்ஜினியராகப் பணிபுரிந்து வந்த இவருக்கும், சத்யா (வயது 39) என்பவருக்கும், கடந்த 2011- ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.  

 

இன்ஜினியர்களான கணவன், மனைவி இருவரும் மலேசியாவில் பணியாற்றி வந்தனர். இவர்களுக்கு குகதாராணி என்ற 5 வயது மகள் உள்ளார். இவர்கள் குடும்பத்துடன் மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர் பகுதியில் டாமன் தோனகா செலத்தானில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். 

 

இந்த நிலையில் கடந்த ஜூலை 14- ஆம் தேதி அன்று ரவிராஜாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மலேசியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதனை தொடர்ந்து கடந்த ஜூலை 16- ஆம் தேதி மனைவி சத்யா, மகள் குகதாராணக்கும் கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர்கள் இருவரும் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டனர்.  

 

இந்நிலையில், ஜூலை 16- ஆம் தேதி சத்யாவின் உடல் நிலை மோசமானது. இதனால் தாய், மகள் இருவரையும் பார்த்துக் கொள்ளவும், உதவி செய்யவும், ஆள் இல்லாததால் சத்தியா மன அழுத்தத்தில் இருந்த நிலையில் குழந்தையுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து தனது கணவருக்கு செல்ஃபோனில் குறுஞ்செய்தி அனுப்பி விட்டு, ஜூலை 16- ஆம் தேதி அன்று மாலை 06.00 மணியளவில் தான் வசித்து வந்த 18 ஆவது மாடியிலிருந்து ஐந்து வயது மகளுடன் குதித்து தற்கொலை செய்துகொண்டார். 

 

இந்த தகவல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரவி ராஜாவுக்கு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரவிராஜாவும் சிகிச்சை பலனின்றி நேற்று (24/07/2021) மாலை மலேசிய மருத்துவமனையில் உயிரிழந்தார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி, குழந்தை உள்ளிட்ட மூன்று பேர் இறந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

பணிக்கு சென்ற மகன், மருமகள், பேரக்குழந்தை வீடு திரும்பாத நிலையில் சடலத்தை கொண்டு வர முடியாத நிலையிலும் அவர்களின் அஸ்தியையாவது கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்களது பெற்றோர், உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பொது இடத்தில் இளம்பெண் மீது தாக்குதல்; வைரலான வீடியோ காட்சி

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Viral video footage of Incident on girl in public place at chennai

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமரவைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொது இடத்தில் இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.