கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் வனப்பகுதியில் திரைப்பட இயக்குனர் கௌதமன் ஆய்வு செய்து ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பிச்சாவரம் காடுகள் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், இத்திட்டத்தை தடுத்து நிறுத்த ஜல்லிக்கட்டு போராட்டத்தைவிட மிகப்பெரிய போராட்டம் நடத்துவேன் என்று தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு தமிழகத்தின் 4 மாவட்டங்களில் 200க்கும் மேற்பட்ட கிணறுகளை அமைத்து ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு முயற்சி எடுத்து வருகிறது. இதற்கான ஆரம்ப கட்ட ஆய்வு பணிகளுக்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு பரவலாக கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால் புகழ்பெற்ற அலையாத்திக் காடுகளை கொண்ட பிச்சாவரம் வனப்பகுதி அழியும் என இயற்கை ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மூலிகை தாவரங்களை கொண்ட பிச்சாவரம் சுரபுன்னை காடுகளுக்கு ஹைட்ரோகார்பன் திட்டத்தால் அழிவு ஏற்படும் நிலை உள்ளது. இந்த திட்டத்தை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தக் கூடாது. இந்த திட்டம் செயல்படுத்தப்பபட்டால் இந்த மாவட்டங்களில் இயற்கை வளம் அழியும். வனப்பகுதி அழியும்.
அதனால் இந்த திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக முதல்அமைச்சரை சந்தித்து நேரில் வலியுறுத்த உள்ளேன். அதையும் மீறி திட்டம் செயல்படுத்தப்பட்டால் லட்சக் கணக்கான இளைஞர்களையும், அனைத்து தரப்பு மக்களையும் ஒன்று திரட்டி ஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் எனக்கூறினார்.