Skip to main content

இறந்தவர்களின் உடல்களுக்கு எதிர்ப்பு! வெவ்வேறு இடங்களில்  தகராறு - மறியல்! 

Published on 15/09/2020 | Edited on 15/09/2020

 

viruthachalam and ponnadam issue
மாதிரி படம்

 

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவர் நேற்று முன்தினம் (13.09.2020) உடல்நிலை குறைவால் இறந்த நிலையில், அவரது உடலை நேற்று அவரது உறவினர்கள், வழக்கமாக அடக்கம் செய்யப்படும் இடத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது போட்டியிட்டு வென்ற அய்யாசாமி என்பவரை எதிர்த்து போட்டியிட்ட வரதராஜ் உறவினர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அரிவாள், கட்டை, ஈட்டி உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் கொண்டு, இறந்துபோன சேகர் உடலை அடக்கம் செய்யவிடாமல், துரத்திக்கொண்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன குப்பநத்தம் புதியகாலனியை சேர்ந்த சேகர் உறவினர்கள பிணத்தை சுடுகாட்டில் அடக்கம் செய்யாமல் பயத்துடன் தெறித்து ஓடி உள்ளனர்.  மேலும் உடலை அடக்கம் செய்வதற்காக வழி நெடுக அடிக்கப்படும்  மேளங்களை கிழித்ததாக கூறப்படுகிறது. 

 

இதுகுறித்து தகவலறிந்த விருத்தாசலம் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு அக்கிராமத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இறந்துபோன சேகர் உடல் அடக்கம் செய்யாமல் சுடுகாட்டில் அநாதையாக கிடந்த நிலையில், காவல் துறையின் பாதுகாப்புடன் பிணம் எரிக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் போலீஸார் காவலில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

 

இதேபோல் பெண்ணாடம் பகுதியை சேர்ந்த கூடலூர் கிராமத்தில் வசிக்கும் 76 வயது முதியவரான  கனகசபை என்பவர் நேற்று வயது மூப்பின் காரணமாக இறந்துவிட்டார். இந்நிலையில் கடந்த 200 ஆண்டுகளாக அந்தப் பகுதியில் வசிக்கும் ஒரு பிரிவினர் இறந்தால் திட்டக்குடி - விருத்தாசலம் மெயின் ரோட்டில் உள்ள கூடலூர் கிராமத்தில் புதைப்பது வழக்கம். இந்நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ரோட்டின் அருகில் சின்னதுரை மகன் சக்திவேல் என்பவர் வீடு கட்டி குடி அமர்ந்துள்ளார். தற்சமயம் சம்பந்தப்பட்ட பிரிவினரின் சடலம் புதைக்கப்பட்டுவந்த இடத்தில் புதைக்கக்கூடாது என்று இரு தரப்பினருக்கும் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. 

 

இந்நிலையில் கனகசபையின் உடலை புதைப்பதற்காக சம்பந்தப்பட்ட இடத்திற்கு ஊர்வலமாக கனகசபையின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த தனிநபர் ஒருவர் இந்த இடத்தில் புதைக்கக்கூடாது என தடுத்து நிறுத்தி அவர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதையடுத்து இறந்துபோன கனகசபையின் உடலை வைத்து திட்டக்குடி -  விருத்தாசலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திட்டக்குடி காவல் ஆய்வாளர் ரமேஷ்பாபு தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதில் சமாதானமடைய மறுத்த ஊர் பொதுமக்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து திட்டக்குடி வட்டாட்சியர் செந்தில்வேலன், திட்டக்குடி துணைக் காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன் மற்றும் சமூகநல பாதுகாப்பு தாசில்தார் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த் துறையினரும் மற்றும் காவல் துறையினரும் அவருடன் பேச்சுவார்த்தை செய்து இறந்துபோன கனகசபையின் உடலை அடக்கம் செய்வதற்கு கொண்டு சென்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.