Skip to main content

இறந்தவர்களின் உடல்களுக்கு எதிர்ப்பு! வெவ்வேறு இடங்களில்  தகராறு - மறியல்! 

Published on 15/09/2020 | Edited on 15/09/2020

 

viruthachalam and ponnadam issue
மாதிரி படம்

 

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவர் நேற்று முன்தினம் (13.09.2020) உடல்நிலை குறைவால் இறந்த நிலையில், அவரது உடலை நேற்று அவரது உறவினர்கள், வழக்கமாக அடக்கம் செய்யப்படும் இடத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது போட்டியிட்டு வென்ற அய்யாசாமி என்பவரை எதிர்த்து போட்டியிட்ட வரதராஜ் உறவினர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அரிவாள், கட்டை, ஈட்டி உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் கொண்டு, இறந்துபோன சேகர் உடலை அடக்கம் செய்யவிடாமல், துரத்திக்கொண்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன குப்பநத்தம் புதியகாலனியை சேர்ந்த சேகர் உறவினர்கள பிணத்தை சுடுகாட்டில் அடக்கம் செய்யாமல் பயத்துடன் தெறித்து ஓடி உள்ளனர்.  மேலும் உடலை அடக்கம் செய்வதற்காக வழி நெடுக அடிக்கப்படும்  மேளங்களை கிழித்ததாக கூறப்படுகிறது. 

 

இதுகுறித்து தகவலறிந்த விருத்தாசலம் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு அக்கிராமத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இறந்துபோன சேகர் உடல் அடக்கம் செய்யாமல் சுடுகாட்டில் அநாதையாக கிடந்த நிலையில், காவல் துறையின் பாதுகாப்புடன் பிணம் எரிக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் போலீஸார் காவலில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

 

இதேபோல் பெண்ணாடம் பகுதியை சேர்ந்த கூடலூர் கிராமத்தில் வசிக்கும் 76 வயது முதியவரான  கனகசபை என்பவர் நேற்று வயது மூப்பின் காரணமாக இறந்துவிட்டார். இந்நிலையில் கடந்த 200 ஆண்டுகளாக அந்தப் பகுதியில் வசிக்கும் ஒரு பிரிவினர் இறந்தால் திட்டக்குடி - விருத்தாசலம் மெயின் ரோட்டில் உள்ள கூடலூர் கிராமத்தில் புதைப்பது வழக்கம். இந்நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ரோட்டின் அருகில் சின்னதுரை மகன் சக்திவேல் என்பவர் வீடு கட்டி குடி அமர்ந்துள்ளார். தற்சமயம் சம்பந்தப்பட்ட பிரிவினரின் சடலம் புதைக்கப்பட்டுவந்த இடத்தில் புதைக்கக்கூடாது என்று இரு தரப்பினருக்கும் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. 

 

இந்நிலையில் கனகசபையின் உடலை புதைப்பதற்காக சம்பந்தப்பட்ட இடத்திற்கு ஊர்வலமாக கனகசபையின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த தனிநபர் ஒருவர் இந்த இடத்தில் புதைக்கக்கூடாது என தடுத்து நிறுத்தி அவர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதையடுத்து இறந்துபோன கனகசபையின் உடலை வைத்து திட்டக்குடி -  விருத்தாசலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திட்டக்குடி காவல் ஆய்வாளர் ரமேஷ்பாபு தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதில் சமாதானமடைய மறுத்த ஊர் பொதுமக்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து திட்டக்குடி வட்டாட்சியர் செந்தில்வேலன், திட்டக்குடி துணைக் காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன் மற்றும் சமூகநல பாதுகாப்பு தாசில்தார் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த் துறையினரும் மற்றும் காவல் துறையினரும் அவருடன் பேச்சுவார்த்தை செய்து இறந்துபோன கனகசபையின் உடலை அடக்கம் செய்வதற்கு கொண்டு சென்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.