Skip to main content

இளைஞர் மரணம்! இருதரப்பு மோதலால் காவலர்கள் குவிப்பு!

Published on 20/06/2020 | Edited on 20/06/2020

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மேலப்பாளையூர் காலனியைச் சேர்ந்தவர்கள் வினோத்குமார், புகழேந்தி. இருவரும் தியாகராஜன் மகன் ராஜி (24) என்பவருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை அழைத்துக்கொண்டு நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் சி.கீரனூர் கிராமத்தில் உள்ள ஒரு மருந்தகத்திற்குச் சென்றுள்ளனர்.

 

அப்போது அவர்கள் மூவரும் மோட்டார் சைக்கிளில் வேகமாகச் சென்றதாகக் கூறி கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த வாலிபர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் வேகமாகச் சென்றதைத் தட்டி கேட்டுள்ளனர். இதனால் மேலப்பாளையூர் காலனி பகுதியைச் சேர்ந்த ஒரு தரப்பினருக்கும், கீரனூரைச் சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.  

 

இப்பிரச்சனையால் உடல்நிலை பாதிக்கப்பட்ட ராஜுவை அழைத்துக் கொண்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.  ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனிடையே கீரனூர் தரப்பைச் சேர்ந்தவர்கள் ராஜுயை அடித்துக் கொன்று விட்டதாக மேலப்பாளையூர் காலனி தரப்பினர் புகார் தெரிவித்தனர். அதன் பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 

 

தொடர்ந்து சி.கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த காண்டீபன், சுப்ரமணியம் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிந்து 2 பேரை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

 

இதனிடையே வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அதற்குரிய நிதியுதவி வழங்க வேண்டுமென வலியுறுத்தி இறந்தவரின் உறவினர்கள் பிரேதத்தை வாங்க மாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்தனர். அதையடுத்து விருத்தாசலம் டி.எஸ்.பி. இளங்கோவன், சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டி.எஸ்.பி. வெங்கடேசன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் சமரசம் செய்து இறந்தவரின் சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். 

 

அதேசமயம் இறந்தவரும், தாக்குதல் நடத்தியவர்களும் வெவ்வேறு சமூகத்தவர் என்பதால் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 


 

சார்ந்த செய்திகள்