Skip to main content

விருத்தாசலம் சார் ஆட்சியர் அதிரடி ஆய்வு! முகக்கவசம் அணியாத வங்கி ஊழியர் மீது வழக்கு!!

Published on 23/04/2020 | Edited on 23/04/2020


கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. அதேசமயம் அத்தியாவசியப் பொருட்களான காய்கறிகள், மளிகைப் பொருட்கள், எரிபொருட்கள் விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  மேலும் வங்கி சேவைகள் இயங்கவும், பத்திரப்பதிவுத்துறை இயக்கத்துக்கும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
 


இந்நிலையில் விருத்தாசலம் சார் ஆட்சியர் பிரவீன்குமார், திட்டக்குடி தாசில்தார் செந்தில்வேல், சமூகநல தாசில்தார் ரவிச்சந்திரன், அரசு தலைமை மருத்துவர் செல்வேந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், ராமநத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் விசுவநாதன் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் விருத்தாசலம், திட்டக்குடி, பெண்ணாடம், இராமநத்தம் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.  

 

CUDDALORE DISTRICT VIRUDHACHALAM DEPUTY COLLECTOR


திட்டக்குடி அரசு மருத்துவமனைக்குச் சென்ற சார் ஆட்சியர் பிரவீன்குமார், அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகள் குறித்தும், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் ஆய்வு செய்தார்.  அப்போது மருத்துவமனையில் அதிக கூட்டம் கூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், மக்களிடம் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், கரோனா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 

இதேபோல் இராமநத்தத்தில் உள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட், கடலூர்- பெரம்பலூர் மாவட்ட எல்லையை இணைக்கும் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியிலும் ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள போலீசாரிடம் அனுமதி சீட்டு பெற்று வருபவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.   
 

http://onelink.to/nknapp

 

CUDDALORE DISTRICT VIRUDHACHALAM DEPUTY COLLECTOR


பெண்ணாடம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்,  பேருந்து நிலையம், தனியார் மற்றும் அரசுடமை ஆக்கப்பட்ட வங்கிகளில் ஆய்வு மேற்கொண்டார். பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் உள்ள ஒரு வங்கியில் ஆய்வு மேற்கொண்டபோது வங்கியில் பணிபுரிந்த எழுத்தர் வெங்கடேசன் என்பவர் முகக் கவசம் அணியாமல் பணி செய்து கொண்டிருந்தார். இதனைப் பார்த்த சார் ஆட்சியர் பிரவீன்குமார் கரோனா குறித்த விழிப்புணர்வை அவரிடம் ஏற்படுத்தினார்.  
 

CUDDALORE DISTRICT VIRUDHACHALAM DEPUTY COLLECTOR


மேலும் அவரை பெண்ணாடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து பணி காலத்தின்போது பொதுமக்களுக்கு கரோனா வருவதற்குக் காரணமாகப் பணி செய்ததாகக் கூறி அவர் மீது வழக்குப் பதிவு செய்ய அறிவுறுத்தினார். அதையடுத்து பெண்ணாடம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Parliamentary Constituency Congress candidate filing nomination

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  வேட்பாளர் வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் பாராளுமன்ற தொகுதியான நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ளவர்களை பணியாற்ற நடவடிக்கை எடுப்பேன். மேலும் கடலூர் தொகுதிக்கு நான் புதியது என்றாலும் இங்குள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசன் ஆகியவரின் அறிவுறுத்தல் படி  தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்” என கூறினார்

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன்,  நெய்வேலி சபா ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.