திருமுட்டம் அருகே தலித் பெண்ணை வன்புணர்வு செய்து படுகொலை செய்த சம்பவத்திற்கு நீதி கேட்டு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கடலூர், திருமுட்டம் வட்டம், ஸ்ரீராமன் கிராமத்தை சார்ந்த தலித் பெண் தனலட்சுமி பாலியல் வன்புணர்வு செய்து அடித்து படுகொலை செய்த அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், காவல் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்ய வேண்டும். இறந்தவர் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து போராட்டம் நடைபெற்றது.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் பிரகாஷ், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில செயலாளர் வாஞ்சிநாதன், வட்டக்குழு உறுப்பினர்கள் வெற்றிவீரன், விஜயகுமார், பொன்னம்பலம் கே.பி. குமார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், நாடாளுமன்ற தொகுதி செயலாளர் செல்லப்பன், மண்டல செயலாளர் திருமாறன், காட்டுமன்னார்குடி தொகுதி செயலாளர் வெற்றிவேந்தன், மாணவரணி செயலாளர் நீதிவளவன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.