கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இருந்தபோதிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. ஊரடங்கை மீறுபவர்களுக்கு அபராதம், வழக்குப் பதிவு, வாகனங்கள் பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளைக் காவல்துறையினர் எடுத்து வருகின்றனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (26/04/2020) ஒருநாள் முழுவதும் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று மாவட்டம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் கிருமிநாசினியைத் தெளிக்க முடிவு செய்துள்ளதாகவும், அதன்படி, மாவட்டத்திலுள்ள 5 நகராட்சிகள், 16 பேரூராட்சிகள், 683 ஊராட்சிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
ஏற்கனவே சேலம் மாவட்டத்தில் இன்று (24/04/2020) மதியம் 01.00 மணி முதல் திங்கள்கிழமை (27/04/2020) காலை வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Show comments