Skip to main content

பண்ருட்டி அருகே நீதிபதி வீட்டுக் கதவை உடைத்து 40 லட்சம் மதிப்பிலான நகைகள், பணம் கொள்ளை! 

Published on 23/05/2020 | Edited on 23/05/2020

 

cuddalore district panruti judge house incident police investigation


கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள காடாம்புலியூரைச் சேர்ந்தவர் மணிகண்டன். விவசாயியான இவருடைய மனைவி ராஜேஸ்வரி கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ளார். அதனால் இவர்கள் தற்போது கள்ளக்குறிச்சியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். 
 


அதே சமயம் விடுமுறை நாட்களில் காடாம்புலியூரில் உள்ள தங்கள் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். இவர்களது வீட்டின் அருகே பண்ருட்டியைச் சேர்ந்த கணேஷ் என்பவர் நகை அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். நீதிபதியின் வீட்டின் பின்புறம் கட்டிடப் பணிகளுக்காக ஜல்லி உள்ளிட்ட பொருட்கள் கொட்டி வைக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் நேற்று (22/05/2020) காலை மணிகண்டனின் தம்பி நீலகண்டன் கட்டிடப் பொருட்கள் எடுத்து வந்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு உள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக காடாம்புலியூர் போலீசாருக்கும் தனது அண்ணன் மணிகண்டனுக்கும் தகவல் கொடுத்தார். அதையடுத்து பண்ருட்டி டி.எஸ்.பி (பொறுப்பு) சங்கர் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர்கள் அம்பேத்கர், மலர்விழி, ரேவதி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர்.
 

cuddalore district panruti judge house incident police investigation

 


அப்போது நேற்று முன்தினம் (21/05/2020) இரவு நீதிபதி வீட்டின் பின்புறக் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், பின்னர் அருகிலுள்ள அடகுக் கடையின் பின்புறக் கதவை உடைத்து உள்ளே நுழைந்து அங்குள்ள லாக்கரை உடைப்பதற்கு முயற்சி செய்துள்ளனர். ஆனால் அந்த லாக்கரை உடைக்க முடியாமல் போனதால் வெளியில் வைக்கப்பட்டிருந்த ஏழு கிலோ வெள்ளிப் பொருட்களை மட்டும் கொள்ளையடித்தனர்.

அதேசமயம் அடகுக் கடையில் தங்க நகைகளைக் கொள்ளை அடிக்க முடியாமல் போனதால் ஏமாற்றமடைந்த கொள்ளையர்கள் நீதிபதி வீடு எனத் தெரியாமல் மற்றொரு கதவையும் உடைத்து மீண்டும் வீட்டிற்குள் புகுந்துள்ளனர். வீட்டினுள் நான்கு அறைகளில் இருந்த அலமாரிகளை உடைத்து அவற்றிலிருந்த 35 பவுன் நகைகளையும், ரூபாய் 50,000 பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளது தெரிய வந்தது. கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தின் மதிப்பு சுமார் 40 லட்சம் ரூபாய் இருக்கும் என்று தெரியவருகிறது. 
 

http://onelink.to/nknapp


இதனிடையே இந்தக் கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அறிந்த நீதிபதி குடும்பத்தினர் காடாம்புலியூர் வீட்டிற்கு விரைந்து வந்தனர். கொள்ளை நடந்திருப்பதைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கைரேகை நிபுணர்கள் கொள்ளை நடந்த இடத்தில் ஆய்வு செய்தனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனாலும் கொள்ளையடித்த மர்மநபர்களைக் கண்டுபிடிக்க இயலவில்லை. 

இந்தக் கொள்ளை நடந்த இடம் காடாம்புலியூர் காவல் நிலையத்தில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அதேபோல் நீதிபதி வீட்டில் நடந்துள்ள இந்தக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அங்கித் திவாரி வழக்கு; நீதிபதி கோபம்! 

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Ankit Tiwari case; The judge is angry

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துணை சூப்பிரண்டாக இருக்கக்கூடிய டாக்டர் சுரேஷ்பாபுவின் சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்காமல் இருக்க ரூ. 20 லட்சம் லஞ்சம் பெற முயன்றபோது, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார். அதன்பின் திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு மதுரை மத்திய சிறைக்கு மாற்றினார்கள். இதனையடுத்து அங்கித் திவாரி இரண்டாவது முறையாக தனக்கு ஜாமீன் வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “தனது கைது என்பது விதிமுறைகளுக்கு எதிரானது. கைது செய்யப்பட்டு 90 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கிறேன். எனவே சட்டப்படி ஜாமீன் வழங்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். இந்த மனு கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அங்கித் திவாரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மனுதாரர் கிட்டத்தட்ட 80 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கிறார். உடனடியாக அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என வாதிட்டது.

அதனைத் தொடர்ந்து அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “உச்சநீதிமன்றம் இந்த வழக்கிற்கு இடைக்கால தடை மட்டுமே விதித்துள்ளது. வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் வரும் மார்ச் 11 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர இருக்கிறது. திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிக்கை தயார் செய்து வைத்துள்ளது. எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பை பொறுத்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். அதுவரை அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. ஜாமீன் வழங்கினால் சாட்சியங்களை கலைக்க வாய்ப்புள்ளது” என கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட  நீதிபதி, மார்ச் 12 ஆம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்திவைத்தார். மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பை பொறுத்து தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (12.03.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திருவடிக்குமார், “அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. ஏற்கனவே உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலனை செய்ய வேண்டும் என கூறியிருக்கிறது. எனவே அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்கினால் இந்த வழக்கு நீர்த்துப்போகும்” என வாதிட்டார். மனுதார் அங்கித் திவாரி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” எனத் தெரிவித்து ஜாமீனுக்கான நிபந்தனைகள் குறித்து வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி விவேக்குமார், “தாம் இன்னும் ஜாமீன் வழங்கவில்லை. ஆனால் மனுதாரர் தரப்பு ஜாமீனுக்கான நிபந்தனைகள் குறித்து வாதிடுகிறார். இதனால் அங்கித் திவாரியின் வழக்கில் இருந்து விலகுகிறேன். இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை” எனக் கோபத்துடன் தெரிவித்துள்ளார். 

Next Story

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்துக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Supreme Court condemns Justice Anand Venkatesh's opinion!
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்களை இணையத்தில் பதிவிறக்கம் செய்து பார்த்ததாக இளைஞர் ஒருவர் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு திருவள்ளூர் போக்சோ நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது. இத்தகைய சூழலில் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று இளைஞர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இளைஞர் மீதான விசாரணையை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவில், “ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பதிவிறக்கம் செய்து பார்ப்பது குற்றமல்ல” எனக் கூறி இருந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து குழந்தைகள் உரிமைக்கான கூட்டணி என்ற அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திர சூட் அமர்வு முன்பு இன்று (11.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது ஆபாசப் படங்களை தனிப்பட்ட முறையில் பதிவிறக்கம் செய்து பார்ப்பது தவறில்லை எனக் கூறியிருந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், “ஒரு தனி நீதிபதி எவ்வாறு இத்தகைய கருத்தைக் கூற முடியும்? நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் கருத்து கொடுமையானது” எனவும் தலைமை நீதிபதி சந்திர சூட் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மனுதாரர் மற்றும் எதிர் மனுதாரர்கள் தரப்புக்கு நோட்டிஸ் வழங்கியதுடன், தமிழக காவல்துறையினர் பதிலளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து இந்த வழக்கு 4 வாரங்களுக்குப் பிறகு மீண்டும் விசாரிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.