Skip to main content

ஆறு மயில்கள் இறப்பு!!! விவசாயி கைது...  

Published on 12/05/2020 | Edited on 13/05/2020

 


கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ளது மங்களூர் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த விவசாயி ஐயப்பன். இவர் தனது நிலத்தில் கோடை பயிராக எள் விதைத்துள்ளார். அது இப்போது வளர்ந்து செழித்து பூ பூத்த நிலையில் உள்ளது. இந்த எள் செடிகளை எலிகள் ஆங்காங்கே கடித்து நாசம் செய்து வந்துள்ளது. அந்த எலிகளை கட்டுப்படுத்த ஐயப்பன் தன் நிலத்தில் சில இடங்களில் எலி பேஸ்ட் வாங்கிவந்து வைத்துள்ளார். இதனால் எலிகள் இறந்துவிடும். எள் செடிகளை காப்பாற்றிவிடலாம் என்று ஐயப்பன் வீட்டில் நிம்மதியாக இருந்தார்.


பதினோராம் தேதி காலை பேஸ்ட்டை தின்றுவிட்டு எலிகள் இறந்து கிடக்கிறதா என்பதை பார்ப்பதற்காக தனது இடத்திற்கு சென்று சுற்றிப் பார்த்தார் ஐயப்பன். அவருக்கு பகிர் என்று ஆகிப்போனது. காரணம் எலிக்கு வைத்த பேஸ்ட்டை அந்த பகுதியில் உணவுக்காக மேய வந்த 6 மயில்கள், எலி பேஸ்ட்டை தின்றுவிட்டு ஆங்காங்கே இறந்து கிடந்துள்ளன. அதற்குள் மயில்கள் இறந்து கிடக்கும் தகவலை வனத்துறை அலுவலர்களுக்கு சிலர் கொடுத்துள்ளனர்.

 

 


இதையடுத்து விருத்தாசலம் வனத்துறை அலுவலர் ரவி தலைமையில் வனவர் மணியரசன், வனக்காப்பாளர் சங்கர், வனக்காவலர் சிவானந்தன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இறந்து கிடந்த மயில்களை கைப்பற்றியதோடு மயில்கள் எலி பேஸ்ட் தின்று இறப்பதற்கு காரணமான விவசாயி ஐயப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொதுவாக கடலூர் மாவட்டத்தின் மேற்கு கடைக்கோடியில் உள்ள கிராமங்களை ஒட்டி வனத்துறைக்கு சொந்தமான காடுகள் பெருமளவில் உள்ளன. இந்த காடுகளில் மயில்கள், மான்கள், காட்டுப் பன்றிகள் அதிக அளவில் வாழ்கின்றன. இவை வனத்தை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்படும் பயிர்களை அப்போது வந்து தின்று அழித்து வருகின்றன.

 


இதை கட்டுப்படுத்துவதற்காக விவசாயிகள் தங்கள் நிலத்தை சுற்றி மின்வேலி அமைப்பார்கள். இதில் அகப்பட்டு வனவிலங்குகள் இறந்துள்ளன. இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட பல விவசாயிகள் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறை, அபராதம் என்று சிக்கலில் மாட்டி உள்ளனர். இதையடுத்து இப்போதெல்லாம் விவசாயிகள் அதுபோன்று மின் வேலி அமைப்பது இல்லை என்கிறார்கள் அப்பகுதி விவசாயிகள். வனவிலங்குகளை துரத்துவதற்கு இரவு நேரங்களில் சென்று காவல் இருப்போம், ஏனென்றால் வன விலங்குகளை வதைப்பது கொல்வது சம்பந்தமான சட்டங்கள் கடுமையாக உள்ளதால் விவசாயிகள் யாரும் தவறான செயல்களில் ஈடுபடுவதில்லை. ஐயப்பன் போன்று ஒருசிலர் இதுபோன்ற தவறுகளை செய்து சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள் என்கின்றனர் அப்பகுதி விவசாயிகள்.

காடுகளை ஒட்டி வனத்துறை சார்பில் கம்பி வேலிகள் அமைத்து வன விலங்குகள் விளை நிலங்களுக்குள் வராத வகையில் தடுக்க வேண்டும். அப்படி செய்தால், எங்கள் விவசாயம் தழைக்கும் என்று கோரிக்கை விடுக்கிறார்கள். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர்.