Skip to main content

குழந்தைகளுக்கு ஆபத்தான நிலையில் அங்கன்வாடி மையம்; மவுனம் காக்கும் அதிகாரிகள்

Published on 24/01/2023 | Edited on 24/01/2023

 

cuddalore district keezhathanur anganwadi centre renovation request form village people 

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள  கீழ ஆதனூரின் மையப்பகுதியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் பராமரிப்பு மையம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த மையத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட சிறு குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருவதோடு, அவர்களுக்கும் கர்ப்பிணி தாய்மார்களுக்கும் அரசு வழங்கும் மதியஉணவு, சத்துமாவு, முட்டை ஆகிய ஊட்டச்சத்து பொருட்கள் இந்த மையத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.

 

இந்த குழந்தைகள் பராமரிப்பு மையத்தின் கட்டடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால் மிகவும் சிதிலம் அடைந்து, மழைக்காலங்களில் உள்ளே செல்ல முடியாத அளவிற்கு மழைநீர் தேங்கி நிற்கும் நிலையில் உள்ளது. மேலும், கட்டடத்தின் மேற்கூரை மற்றும் சுற்றுச்சுவர்கள் மிகவும் சிதிலமடைந்து மேற்கூரை ஆனது ஆங்காங்கே பெயர்ந்து உதிர்ந்து விழுந்து கொண்டுள்ளது. இதனால் இங்கு பணி செய்யும் ஊழியர்களுக்கும் பராமரிக்கப்படும் குழந்தைகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டு உள்ளதால், தற்போது அருகில் உள்ள மகளிர் சுயஉதவிக் குழு கட்டடத்தில் தற்காலிகமாக மாற்றப்பட்டு குழந்தைகள் பராமரிப்பு மையம் செயல்பட்டு வருகிறது.

 

தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் பழுதடைந்துள்ள அரசு பள்ளி கட்டடங்களை முற்றிலும் இடித்து அப்புறப்படுத்திவிட்டு புதிய கட்டடம் கட்டும் பணியில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், சிறு குழந்தைகள் பராமரிக்கப்படும் பாதுகாப்பு மையம் மிகவும் மோசமான நிலையில் உள்ளதால், அதை இடித்து அப்புறப்படுத்திவிட்டு புதிய கட்டடம் கட்டவேண்டி, அதிகாரிகளுக்கு கிராம மக்கள் பல்வேறு மனுக்கள் அனுப்பியும், அதுகுறித்து எதுவும் கண்டுகொள்ளாமல் அரசு அதிகாரிகள் மௌனம் காத்து வருகின்றனர்.

 

cuddalore district keezhathanur anganwadi centre renovation request form village people 

 

இது தொடர்பாக கிராம மக்கள் பழைய கட்டடத்தை அப்புறப்படுத்தி விட்டு பாதுகாப்பான புதிய கட்டடத்தை விரைந்து கட்டி முடித்து குழந்தைகள் பாதுகாப்பு மையத்தை பாதுகாப்புடன் பராமரிக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கின்றனர். இந்த குழந்தைகள் பராமரிப்பு மைய கட்டிடம் திட்டக்குடி சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் அமைச்சருமான சி.வி.கணேசன் அவர்களின் தொகுதியில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.