Skip to main content

50 வருட காலமாக அரியவகை மூலிகைகள் மற்றும் மரப்பயிர்களைப் பாதுகாக்கப் போராடும் 75 வயது முதியவர்!

Published on 11/06/2020 | Edited on 11/06/2020

 

CUDDALORE DISTRICT FARMER TREE AYURVEDIC  HERBS  TREES


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ஆதிவராகநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பரமானந்தம். 75 வயதான பரமானந்தம் தனது இளமை காலத்தில் இருந்து இயற்கை மீது அதிக நாட்டம் ஏற்பட்டதினால், கடந்த 50 வருடங்களாக தனக்குச் சொந்தமான 10 எக்கர் நிலப்பரப்பளவில் அரிய வகை மூலிகைச் செடிகள், மற்றும் நாட்டு ரக மரப்பயிர்களை வளர்த்து வருகிறார். 
 


வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் உள்ள பல்வேறு காலச்சூழ்நிலைக்கு ஏற்ப வளரக்கூடிய மரங்கள், குளிர்பிரதேசம், மலைப்பிரதேசம், பாலைவனங்கள் உள்ளிட்ட பகுதிகளில் வளரக்கூடிய அனைத்து விதமான மூலிகைச் செடிகள் ஆகியவற்றைச் சேகரித்து வளர்த்து வருகிறார். 

ஈட்டி மரம், கருங்காலி, முள் இல்லா மூங்கில், தாண்டிரிக்காய், திருவோடு மரம், மகிழமரம், கடுக்காய், வன்னிமரம், செம்மரம், தாய்லாந்து தித்துப்புளி என 1,000-க்கும் மேறபட்ட மர வகைகளையும், சின்னி, செருகுறுங்சி, பெரியாநங்கை, சொரியாசிஸ், நத்தப்பாலை, ஆடுதிண்ணப்பாலை, முள்சித்தரத்தை, கருநொச்சி, உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அழிந்து வரும் அரிய மூலிகைச் செடிகளையும் எவ்வித ரசாயன உரங்களையும் பயன்படுத்தாமல் இயற்கை முறையில் பாதுகாப்பாக வளர்த்து வருகிறார். 
 

CUDDALORE DISTRICT FARMER TREE AYURVEDIC  HERBS  TREES

 


திருமணம் உள்ளிட்ட அனைத்து சுபகாரியங்களுக்கும் நாட்டுரக விதைகள் மற்றும் நாட்டு ரக செடிகளை அன்பளிப்பாக அளித்துவரும் பரமானந்தம், இயற்கை முறையில் உருவான மூலிகைச் செடிகளைக் கொண்டு வைத்தியமும் செய்து வருகிறார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்படக்கூடிய சளி, இருமல், காய்ச்சல், உடல் உஷ்ணம், விஷச்சந்துகள் தீண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு மூலிகைச் செடிகளைக் கொண்டு வைத்தியம் செய்து வருகிறார். 

"பிறந்தநாள் கொண்டாட்டங்கள், பேனர் வைத்தல் உள்ளிட்ட பல்வேறு ஆடம்பர நிகழ்ச்சிகளுக்கு அதிக அளவு பணம் விரயம் செய்வதைத் தவிர்த்து, நிழல் தரும் மரங்களை வைக்க வேண்டும். ஒவ்வொரு விவசாயிகளும் தங்களுக்குச் சொந்தமான நிலங்களில் காற்றைச் சுத்தப்படுத்துவதற்கும், ஆக்சிசன் அதிகளவு உற்பத்தி செய்யவும் முள் இல்லாத முங்கில் மரங்களை வளர்க்க வேண்டும். அனைத்து ஊராட்சிகள்,  அரசு அலுவகங்கள், பள்ளிக்கூடங்கள், சாலையோரங்களில் நிழல் தரும் மரங்களை வளர்த்து வருங்கால தலைமுறையினர் எவ்வித நோய் நொடியில்லாமல் வாழ்வதற்கு உதவிட வேண்டும்" என்று வேண்டுகொள் விடுத்து இயற்கையைக் காக்கப் போராடும் 75 வயது கொண்ட பரமானந்தனுக்கு தற்போது வரை சர்க்கரை, ஆஸ்துமா, நீரழிவு, இரத்த கொதிப்பு உள்ளிட்ட எவ்வித நோய்த் தொற்றும் இல்லாமல் கம்பீரமாக வளம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

CUDDALORE DISTRICT FARMER TREE AYURVEDIC  HERBS  TREES


அதேபோல் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை மாணவ, மாணவிகள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிபவர்களுக்கு ஒவ்வொரு மரங்களைப் பற்றியும் கற்றுத் தருகிறார். தற்போதைய காலக்கட்டத்தில் நவீனத்தையும், செயற்கையான ரெடிமேட் உணவுகளையும் தேடி ஒடிக்கொண்டிருக்கின்ற இளம் தலைமுறையினருக்கு, இயற்கை வழங்கிய கொடைகளை அறிந்து கொள்ளும் விதமாகவும், அரிய வகை மரங்கள் மற்றும் செடிகளை அழியாமல் பாதுகாக்கும் நோக்கத்திலும் செயல்படுவதாகத் தெரிவிக்கிறார்" பரமானந்தம். 
 

http://onelink.to/nknapp


10 ஏக்கர் பரப்பளவில் லட்சக்கணக்கான மரங்கள் மற்றும் அரிய வகை செடிகளை வளர்த்து வரும் பரமானந்தம் ஊடுபயிராக மணிலா, முருங்கை, உள்ளிட்டவைகளையும் விவசாயம் செய்து வருகிறார். இயற்கையைப் பாதுகாக்கும் பரமானந்தனுக்குப் பல்வேறு அமைப்புகள் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
 

சார்ந்த செய்திகள்