/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cuddalore 3333.jpg)
கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கை மே- 17 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் ஆரஞ்சு, பச்சை மண்டலங்களுக்கு ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டியது. கடலூர் மாவட்டத்திலிருந்து டெல்லி மாநாட்டுக்குச் சென்றவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என கடந்த 29- ஆம் தேதி வரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆக இருந்தது. மே 30- ஆம் தேதியோடு அவர்கள் அனைவரும் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பினர். கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாற வேண்டிய சூழலில் கடலூரிலிருந்து புட்டபர்த்தி சாய்பாபா கோவிலுக்குச் சென்று வந்த 68 வயது முதியவருக்குத் தொற்று உறுதியாகி மீண்டும் கரோனா பாதிப்பு உயர தொடங்கியது.
இந்த நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையிலிருந்து கடலூர் மாவட்டத்துக்கு வந்தவர்களை மருத்துவப் பரிசோதனை செய்ததில் கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்து வருகிறது. இதில் இன்று ஒரே நாளில் 107 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர்கள் 107 பேரும் கோயம்பேட்டிலிருந்து கடலூர் மாவட்டத்துக்கு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மாவட்டத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கோயம்பேட்டிலிருந்து வந்த 129 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கோயம்பேட்டிலிருந்து வந்த 430 பேருக்கு கரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது.
Follow Us