Skip to main content

கடலூர் மாவட்டத்தில் கரோனா 411 ஆனது! 13 காவலர்களுக்கு உறுதியானதால் பயிற்சி மையம் மூடல்! 

Published on 12/05/2020 | Edited on 12/05/2020
cuddalore



கரோனோ நோய் பரவலை தடுக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் மே-17ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவித்து நடைமுறையில் உள்ளது. ஊரடங்கு முடிவதற்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் கரோனோ நோய் தொற்றின் பரவல் அதிகமாகிக்கொண்டே வருகிறது. 
 

கடந்த 4 நாட்களுக்கு முன்புவரை, கடலூர் மாவட்டத்தில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்து வந்தது. ஆனால் கடந்த 4 நாட்களாக புதிய நோய் தொற்றுகள் ஏதுமில்லாமல் இருந்தது. இந்நிலையில் இன்று காவல்துறையை சேர்ந்த 13 பேர் உட்பட 16 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் மாவட்டத்தில் கரோனாவால் நோயாளிகளின் எண்ணிக்கை 395 லிருந்து 411 ஆக உயர்ந்தது.

 
கடலூரிலுள்ள காவலர் பயிற்சி பள்ளியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 134 பெண் காவலர்கள் 4-ஆம் தேதி முதல் பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்களுக்கு எந்த அறிகுறியும் இல்லாத நிலையில் முன்னெச்சரிக்கை கருதி கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் பெண் காவலர்கள் 10 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. மேலும் அங்கு பயிற்சி கொடுத்த காவல்துறை அதிகாரிகள் ஓர் உதவி ஆய்வாளருக்கும், இரண்டு தலைமை காவலர்களுக்கும் தொற்று  உறுதியாகியுள்ளது. அதையடுத்து அவர்கள் 13 பேரும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 
 

“கரோனா தொற்று தொடர்பாக எந்தவிதமான அறிகுறியும் ஏற்கனவே இல்லாத நிலையில், 13  போலீசாருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. தொற்று உறுதியானதால் பயிற்சியில் உள்ள மற்ற 124 பெண் காவலர்களும் பயிற்சி மையத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து பயிற்சிகள் நடைபெறாமலும் நிறுத்தப்பட்டுள்ளது” என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபினவ்ஸ்ரீ தெரிவித்துள்ளார். 
 

மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ள நிலையில், 87 பேர் கடலூர் அரசு மருத்துவமனையிலும், 79 பேர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையிலும், 84 பேர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 30 பேர் சிதம்பரம் அரசு மருத்துவமனையிலும், 18 பேர் திட்டக்குடி அரசு மருத்துவமனையிலும் 7 பேர் குறிஞ்சிப்பாடி மருத்துவமனையிலும் தனி வார்டுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
 

இந்நிலையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 3074 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.  மாவட்டத்தில் இதுவரை 7956 பேரின் உமிழ்நீர் பரிசோதனை செய்யப்பட்டதில் 411 பேருக்கு கரோனா இருப்பதும், 7126 பேருக்கு இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. இன்னும் 420 பேரின் உமிழ்நீர் பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy befell the young man who climbed the Velliangiri mountain

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது டிரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கியபோது 7 வது மலையில் திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் (வயது 31) என்பவர் கடந்த 18 ஆம் தேதி தவறி விழுந்தார். இதனால் அவரின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவால் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய 7 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக் உயர்ந்துள்ளது. முன்னதாக சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story

டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு; மதுரையில் பரபரப்பு!

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Tiffin box range Sensation in Madurai

மதுரை அருகே டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கீழவளவு என்ற பகுதியில் காரின் அருகே நின்று கொண்டிருந்தவர் மீது நேற்று இரவு (20.04.2024)  டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீசப்பட்ட இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் அங்கிருந்த நவீன்குமார் என்பவர் காயமடைந்தார்.

மேலும் டிபன் பாக்ஸ் குண்டு வீசப்பட்டதில் நவீன்குமாருக்கு அருகில் இருந்த ஆட்டோக்காரர் கண்ணன் என்பவர் காயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த கீழவளவு காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த இருவரையும் போலீசார் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.