Skip to main content

மக்களைக் குழப்பும் மாவட்ட நிர்வாகம்!!

Published on 25/06/2020 | Edited on 25/06/2020

 

cc

 

ஒவ்வொரு ஆண்டும் மே மாத வாக்கில் தமிழகம் முழுவதும் வட்டாட்சியர் அலுவலகங்களில் ஜமாபந்தி நடப்பது வழக்கம். இதில் அந்தந்த தாலுகாவிற்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள நெல், கரும்பு, மரப்பயிர் ஆகிய சாகுபடிகள் பற்றிய கணக்குகள் மற்றும் பிறப்பு-இறப்பு, முதியோர் உதவித்தொகை பெறும் பயனாளிகள் பற்றிய விவரங்கள் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களில் சாகுபடி செய்பவர்கள் பற்றிய விவரங்கள், வரி அதற்கான கணக்குகள் இப்படிப்பட்ட கணக்கு, வழக்குகளை முறையாக எழுதி ஜமாபந்தி அதிகாரியாக நியமிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைப்பார்கள். 

ஜமாபந்தி நடத்தும் அதிகாரி அதை சரிபார்த்து கையொப்பமிட்டு திருப்பிக் கொடுப்பார்கள். அதேபோன்று இந்த ஜமாபந்தி நடைபெறும்போது, ஒவ்வொரு கிராம மக்களும், விவசாயிகளும் தங்கள் நிலங்களுக்கு பட்டா மாற்றம் முதியோர் உதவித்தொகை ஏற்கனவே வருவாய்த் துறையினருக்கு அளிக்கப்பட்ட புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தும் பிரச்சனைகள் இவைகளை எல்லாம் ஜமாபந்தியின் அதிகாரியாக வருபவர்களிடம் புகார் மனுவாக கொடுப்பது வழக்கம்.

அந்த மனு மீது உடனுக்குடன் தீர்வு காணப்பட வேண்டும் என்பது நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த ஆண்டு ஜமாபந்தி நடைபெறுமா, நடைபெறாதா என்ற கேள்வி குறியுடன் இருந்த இந்த நேரத்தில் கிராம நிர்வாக அலுவலர்களும், கிராம உதவியாளர்களும், பொதுமக்களும் குழப்பத்தில் இருந்தனர். காரணம் கரோனா பரவல் காரணமாக ஒவ்வொரு கிராம நிர்வாக அலுவலர்களும் அந்தப் பணிகளை கடந்த மூன்று மாதங்களாக செய்து வந்துள்ளனர். இதனால் ஜமாபந்தியில் அளிக்கப்படும் வருவாய் தீர்ப்பாய கணக்கு வழக்குகளை அவர்கள் எழுதவில்லை. பொதுமக்களும் கரோனா பரவல் காரணமாக சமூக இடைவெளி, அரசின் தடை சட்டம் இப்படிப்பட்ட காரணங்களால் ஜமாபந்தி இந்த ஆண்டு நடைபெறாது என்று மற்ற பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் திடீரென ஜமாபந்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி திட்டக்குடி தாலுகாவில் 25ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெற உள்ள ஜமாபந்தியில் பெண்ணாக குறுவட்டம் 26-ம் தேதியும், திட்டக்குடி கிழக்கு 29-ஆம் தேதி திட்டக்குடி மேற்கு,  தொழுதூர் குறுவட்டம் ஆகியவற்றிற்கு உட்பட்ட கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெறும் என அறிவித்துள்ளார்.

“மாவட்டம் முழுவதும் உள்ள மற்ற தாலுகாக்களிலும் இதே தேதிகளில் ஜமாபந்தி நடைபெறும் என்றும் அதற்கான அதிகாரிகளையும் நியமித்துள்ளார். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர்கள் சிலர் கூறுகையில், நாங்கள் கடந்த பிப்ரவரியில் இருந்து கரோனா நோய் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளோம். இதனால் மற்ற வருவாய் பணிகளை பார்க்க முடியவில்லை. பொதுமக்களுக்கான பணிகளிலும் கவனம் செலுத்த முடியவில்லை. இந்த நிலையில் திடிரென்று ஜமாபந்தி நடத்துமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளதால், கிராம கணக்குகளை சரிபார்க்க எழுத போதிய கால அவகாசம் தராமல் திடிரென அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


மேலும் திருச்சி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கரோனா பரவல் காரணமாக அந்தந்த மாவட்ட நிர்வாகம் ஜமாபந்தியை ரத்து செய்துள்ளது. இந்தநிலையில் நம் மாவட்டத்தில் மட்டும் ஜமாபந்தி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது எங்களுக்கும், மக்களுக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது அப்படியே ஜமாபந்தி நடத்த வேண்டுமென்றால் அதற்குப் போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும்” என்று கூறுகிறார்கள் கிராம நிர்வாக அலுவலர்கள்.

“அதேநேரத்தில் இப்படிப்பட்ட அசாதாரணமான சூழ்நிலையில் ஜமாபந்தி நடைபெற்றால் கிராம மக்கள் விவசாயிகள் ஒவ்வொரு தாலுகாவிலும் ஆயிரக்கணக்கில் கூடுவார்கள், அதன்மூலம் கரோனா நோய் பரவல் அதிகரிக்கக்கூடும். நோய் பரவலை தடுக்க வேண்டும் என்று மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல தடை செய்யப்பட்டுள்ள இந்த நேரத்தில் இப்படி ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜமாபந்தி நடைபெறும்போது மக்கள் கூடினால் நோய் பரவாதா” என்று பொதுமக்கள் கேட்கிறார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.