Skip to main content

போலி மருத்துவர்கள் அதிகரிப்பு; மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

Published on 14/05/2022 | Edited on 14/05/2022

 

cuddalore district collector inspect virudhachalam government hospital

 

கடலூர் மாவட்டம், ராமநத்தம் பகுதியில் மருந்து கடை வைத்திருந்த முருகன் என்பவர் கருக்கலைப்பு செய்ததில் அகிலா என்ற பெண் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் போலி மருத்துவர்களை குறித்து ஆய்வு நடத்தச் சென்றபோது மங்களூரில் போலி மருத்துவர் ஒருவர், தனது வீட்டு மாடியில் வைத்து ஒரு பெண்ணுக்கு கருக்கலைப்பு மாத்திரை கொடுத்து அதற்கான ஏற்பாடுகள் செய்து வந்தது தெரியவந்தது. அந்தப் போலி மருத்துவர் மருத்துவ அதிகாரிகளை கண்டதும் தலைமறைவாகிவிட்டார். 

 

கருக்கலைப்புக்கு தயாராக இருந்த பெண்ணை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் விருத்தாசலத்தில் நேற்று அரசு மருத்துவமனையில் "நம்ம மருத்துவமனை மகத்தான மருத்துவமனை" என்ற இயக்கத்தின் கீழ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவசர சிகிச்சைப் பிரிவு, மகப்பேறு பிரிவு, ஆண்கள் பெண்கள் வார்டுகள் மற்றும் தீவிர சிகிச்சை மையம், ஆக்சிஜன் உற்பத்தி மையம் ஆகியவற்றை பார்வையிட்டார். 


அப்போது அங்கிருந்த நோயாளிகளிடம் மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். மருத்துவமனையில் அரளி விதை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற 14 வயது சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதை கேள்விப்பட்ட மாவட்ட ஆட்சியர் உரிய சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர் செவிலியர்களுக்கு உத்தரவிட்டார். அப்போது மருத்துவமனையில் இடப்பற்றாக்குறை இருப்பது குறித்து நகராட்சி சேர்மன் சங்கவியும், கவுன்சிலர் சிங்காரவேலும் ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதுதொடர்பாக விரிவான அறிக்கை தருமாறு மருத்துவ அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். 


அப்போது ஆட்சியர் கூறும்போது, “மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் தற்போது ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் 35 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் மாவட்டத்தில் ராமாநத்தத்தில் மெடிக்கல் ஷாப்பில் கர்ப்பிணி பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்து இறந்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுபோன்று அனுமதியின்றி கருக்கலைப்பு செய்வது குறித்து மருத்துவத் துறை இணை இயக்குநர் விசாரணை நடத்தி வருகிறார். 


வேப்பூர் மெடிக்கல் ஷாப்பில் சிகிச்சை பெற்ற சிறுவன் இறந்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் போலி மருத்துவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் மருத்துவமனையில் ஸ்கேன் சென்டர்களில் கர்ப்பிணி பெண்கள் வயிற்றில் வளரும் குழந்தை ஆணா பெண்ணா என கண்டறியக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறோம். மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குநர் தலைமையில் ஒரு குழு ரகசியமான முறையில் மாவட்டம் முழுவதும் போலி மருத்துவர்கள் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்பவர்கள் குறித்த தகவலை சேகரித்து வருகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் மீது கடுமையான சட்டம் பாயும்” என்று எச்சரித்தார். 

 

மாவட்ட ஆட்சியரின் இந்த ஆய்வின்போது, மாவட்ட சுகாதார பணிகள், துணை இயக்குநர் டாக்டர் மீரா, விருத்தாசலம் அரசு தலைமை மருத்துவர் எழில், நகராட்சி கமிஷனர் சசிகலா மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் உடனிருந்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.