Skip to main content

கடலூர் மாவட்டத்தில் ஞாயிறு முழு ஊரடங்கு - மீறினால் கடும் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை 

Published on 02/05/2020 | Edited on 02/05/2020
 collector



சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பணியாற்றியவர்களுக்கு கரோனா தொற்று பரவியதை அடுத்து கடலூர் மாவட்டம் விருத்தாசலம், வேப்பூர், திட்டக்குடி, பண்ருட்டி பகுதிகளை சேர்ந்த சுமார் 600 பேர் அவரவர் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். அவர்கள் விருத்தாசலம் அரசு கல்லூரி மாணவர் விடுதி, தொழுதூர் ஆறுமுகம் கல்லூரி, வேப்பூர் ஜெயப்பிரியா பள்ளி, பண்ருட்டி அண்ண பல்கலை கழக பொறியியல் கல்லூரி ஆகிய இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர். 


அவர்களின் உமிழ் நீர் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதில் விருத்தாசலம் முகாமில் உள்ள 7 பேர் பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த 7 பேர் மற்றும் ஏற்கனவே புட்டபர்த்தி சென்று வந்த முதியவர் மற்றும் கோயம்பேட்டிலிருந்து வந்த 2 பேர் என சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில் 10 பேர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அத்துடன் பண்ருட்டி பகுதியை சேர்ந்த 3 பேர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் கரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆக மொத்தம் கரோனா தொற்றின் எண்ணிக்கை கடலூர் மாவட்டத்தில் 13 ஆக உள்ளது.

இந்நிலையில் கோயம்பேட்டிலிருந்து திரும்பியவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்புகள் மற்றும் அவர்களுக்குரிய மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கரோனா முடிவு நமக்கு சாதகமாக வரும் நிலையில், திடீரென இப்போது ஏழு பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. மேலும் பலருக்கு முடிவு வர உள்ளது. இதனால் பொது மக்கள் அனைவரும் பாதுகாப்போடு வீட்டில் தனிமையாக இருக்க வேண்டும். வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து யாரேனும் வந்திருந்தால் அப்பகுதி அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்” என்றார். மேலும், “கடலூர் மாவட்டத்தில் நாளை (03.05.2020) முழு ஊரடங்கு அமுலில் இருக்கும் என்றும், மருந்து, பால் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்படும் என்றும், ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை செய்தார். 

இதனிடையே கரோனா  நோய் பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு மாவட்ட ஆட்சியர் ஆணைப்படி நெய்வேலி நகரியம் முழுவதும்  நாளை (03.05.2020) ஞாயிற்றுகிழமை ஒரு நாள் மருந்தகங்கள், பால் விற்பனையகங்கள் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும் என்றும், மீறும் கடை உரிமைதாரர்கள் மீது கடை உரிமம் ரத்து மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 மற்றும் கொள்ளை நோய்கள் சட்டம் 1897 இன் கீழ் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் என்.எல்.சி நகர நிர்வாகம் எச்சரித்துள்ளது.
 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.