Skip to main content

ஊரடங்கு உத்தரவு : நஷ்டத்தைச் சந்திக்கும் பீங்கான் பொருள் உற்பத்தியாளர்கள் !

Published on 06/04/2020 | Edited on 06/04/2020


கடலூர் மாவட்டம் விருத்தாசலம், நெய்வேலி மற்றும் அதன் சுற்று வட்டாரப்  பகுதிகளில் வெள்ளை களிமண் அதிக அளவில் கிடைக்கிறது. இதனைக் கொண்டு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் 1965- ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் காமராஜர் ஆட்சிக் காலத்தில் விருத்தாசலத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் பீங்கான் தொழிற்பேட்டையை அப்போதைய மத்திய தொழில்துறை அமைச்சர் வெங்கட்ராமன் தொடங்கி வைத்தார். 

இங்கு 44 ஏக்கரில் தமிழ்நாடு அரசு பீங்கான் உற்பத்தி நிறுவன நிர்வாகத்தின் கீழ் கற்குழாய் தொழிற்சாலை, பீங்கான் கலைப் பொருட்கள் உற்பத்தி கூடம், செராமிக் மூலப் பொருட்கள் விற்பனை நிலையம், பீங்கான் பொருட்களைச் சூடேற்றும் கில்லன் உள்ளிட்ட பிரிவுகளும், 56 ஏக்கரில் 61 செராமிக் தொழிற்கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.வருவாய்ப் பெருகியதால் மேலும் பலர் ஆர்வத்துடன் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். 
 

cuddalore district ceramics products employees and business owners said


இத்தொழிற்பேட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ளள பகுதிகளில் டீ கப், வாட்டர் பில்டர், எலக்ட்ரிக் ஹீட்டர், சுவாமி சிலைகள், தலைவர்கள் சிலைகள், பறவைகள், செடிகள், மரங்கள், பூக்கள், இயற்கைக் காட்சிப் பொருட்கள்,வாஷ்பேசின், அகல் விளக்குகள், சானிட்டரி பொருட்கள் மற்றும் மின்சாரத்துறைக்கு தேவையானப் பியூஸ்கேரியர் உள்ளிட்ட 100- க்கு மேற்பட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

200- க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிசைத் தொழிலாகவும் பீங்கான் பொருட்களைத் தயாரித்து வருகின்றனர்.மேலும் இவைகளில் 5,000- க்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பு பெற்று வருவாய் ஈட்டி வருகின்றனர். இங்குச் செய்யப்படும் அனைத்து பீங்கான் பொருட்களையும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து வாங்கிச் சென்று விற்பனை செய்கின்றனர்.

இந்நிலையில் மத்திய மாநில அரசுகள் அறிவித்த 144-தடை மற்றும் ஊரடங்கு உத்தரவால் 50- க்கும் மேற்பட்ட நிறுவனங்களும்,200- க்கும் மேற்பட்ட குடிசை தொழிற் கூடங்களும் மூடப்பட்டுள்ளன. 
 

cuddalore district ceramics products employees and business owners said


இதனால் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் பல்வேறு இடங்களில் கடன் பெற்று செராமிக் பொருட்களைத் தயாரித்த நிலையில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதன் காரணமாக வெளிமாநில வியாபாரிகள் வராததால் பெரிய அளவில் நஷ்டம் அடைந்துள்ளதாகவும், இந்நஷ்டத்தை ஈடுகட்டுவதற்கு ஒரு வருட காலம் கடினமாகப் போரட வேண்டும் என்றும் கவலையுடன் தெரிவிக்கின்றனர் தொழிற்துறையினர். 

மேலும் வருகின்ற தீபாவளி மற்றும் கார்த்திகை தீபம் விழாக்களுக்காகப் பயன்படுத்தப்படும் அகல் விளக்குகள் செய்யும் பணிகளைத் தற்போது தொடங்கினால் மட்டுமே ஐப்பசி, கார்த்திகை மாதத்திற்குள் தயாராகும் என்றும், மூலப்பொருட்கள் கொண்டு வருவதற்குத் தடை ஏற்பட்டுள்ளதால் எவ்விதப் பணியும் செய்ய முடியாமல் தவித்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர். 
 

cuddalore district ceramics products employees and business owners said


இரண்டு மாதத்திற்குப் பின்பு செராமிக் பணியைத் தொடங்கினால் மழைக்காலம் ஏற்பட்டு விடுவதால் செராமிக் பொருட்கள் வெயிலில் உலர வைப்பது முடியாத காரியம் என்பதால் அனைத்து விதத்திலும் பீங்கான் தொழில் மிகவும் பாதிப்படைந்து பெரும் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும் என்கின்றனர். 
 

இதேபோல் இந்நிறுவனங்களில் பணிபுரிந்து வந்த சுற்று வட்டாரப் பகுதி  தொழிலாளர்கள், வடமாநில தொழிலாளர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய வருமானத்தை ஈட்ட முடியாமல் தவித்து வருவதாகத் தெரிவிக்கின்றன. மேலும் தங்களின் அத்தியவாசியத் தேவை பொருட்களை வாங்குவதற்கு தாங்கள் வேலை செய்யும் முதலாளிகளிடம் கேட்பதாகவும், அவ்வாறு கேட்கும் போது வங்கியில் பணம் எடுக்க முடியவில்லை,வியாபாரிகள் பணம் அனுப்பவில்லை என்று அவர்களின் கஷ்டத்தைத் தெரிவிப்பதாகக் கூறுகின்றனர். இதனால் அன்றாடச் செலவுகளுக்கு கூட அல்லாடுகின்றனர் கூலித் தொழிலாளர்கள்.
 

 

cuddalore district ceramics products employees and business owners said


தமிழகத்திலேயே விருத்தாச்சலத்தில் மட்டும் செயல்படும் பீங்கான்  தொழிற்பேட்டை முற்றிலுமாக முடங்கிப் போனதால் தங்களின் வாழ்வாதாரத்தைக் காத்திட தமிழக அரசு நிவாரண உதவி அளிக்க வேண்டுமென்று சிறு, குறு முதலாளிகளும், தொழிலாளர்களும் கோரிக்கை வைக்கின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக பிரமுகர் மீது  துப்பாக்கிச் சூடு; ஓ.பி.எஸ் அணி பொறுப்பாளர் உட்பட 6 பேர் கைது! 

Published on 09/09/2023 | Edited on 09/09/2023

 

6 people arrested in Virudhachalam DMK member case
இளையராஜா

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த தியாகராஜன் மகன் இளையராஜா(45). தி.மு.க பிரமுகரான இவர் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற முன்னாள் மாவட்ட பொறுப்பாளராவார். மேலும் வள்ளலார் குடில் என்ற ஆதரவற்ற முதியோர், குழந்தைகள் இல்லத்தை நடத்தி வருவதுடன் இயற்கை விவசாயம் செய்து, அது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.  

 

இந்நிலையில் நேற்று மாலை, இளையராஜா நாளை(10 ஆம் தேதி) நடைபெற உள்ள இயற்கை விவசாயம் சார்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டிற்காக கொளஞ்சியப்பர் கோவில் அருகே உள்ள தனது சொந்த நிலத்தில் வேளாண் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். அது முடிந்து அதிகாரிகள் கிளம்பிச் சென்ற பிறகு மாலை 5.30 மணியளவில் தானும் கிளம்புவதற்காக காருக்கு அருகே வந்துள்ளார். அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. அவர்களைப் பார்த்ததும் இளையராஜா வேக வேகமாக காருக்குச் சென்று ஏற முயன்றார். அப்போது அந்த கும்பலில் இருந்த ஒருவர்  இளையராஜாவை நோக்கி துப்பாக்கியால் சுட, அந்த குண்டு இளையராஜாவின் பின்பக்கமாக இடுப்பு பகுதியில் பாய்ந்தது. உடனே சுதாரித்துக் கொண்ட இளையராஜா, அங்கிருந்து தப்பிப்பதற்காக காரில் ஏறி, கதவைப் பூட்டிக்கொண்டு காரை இயக்க முற்பட்டபோது, அந்த கும்பலைச் சேர்ந்த மற்றொருவர் கைத்துப்பாக்கியால் காரின் முன்பக்க கண்ணாடி வழியாகச் சுடவே, அந்த குண்டு கார் கண்ணாடியைத் துளைத்தது. கண்ணாடிகள் உடைந்து அவரது கழுத்தில், மார்பில் படவே இரத்தம் பீரிட்டு வெளியேறியது. மேலும் அந்த கும்பல் இரண்டு முறை காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றது. இளையராஜாவும் வேக வேகமாக காரை ஓட்டிக்கொண்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார்.

 

அதனைத் தொடர்ந்து உறவினர்கள் மற்றும் விருத்தாசலம் போலீசாருக்குத் தகவல் கிடைத்ததன் பேரில், அங்கு விரைந்து சென்ற டி.எஸ்.பி ஆரோக்யராஜ், இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் இளையராஜா, “இயற்கை வேளாண்மை நிகழ்ச்சிக்காக வேளாண் அதிகாரிகளிடம் பேசிவிட்டு அவர்களை அனுப்பிவிட்டு நானும் வீட்டிற்கு புறப்பட தயாரானேன். அப்போது ஆடலரசன், புகழேந்தி உள்ளிட்ட 6 பேர் மூன்று பைக்கில் வந்தனர். ஆடலரசன் தனது இடுப்பில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்தார். இதை பார்த்து நான் அருகில் இருந்த எனது காரில் ஏறி தப்பிக்க முயன்றேன். அதற்குள் புகழேந்தி துப்பாக்கியால் சுட்டார். ஆடலரசின் கையிலும் துப்பாக்கி இருந்தது. நான் காருக்குள்ளே சென்று கார் கதவை மூடியதும் என்னை நோக்கி ஓடி வந்த ஒருவர் கார் கண்ணாடி வழியாக மீண்டும் என் மீது துப்பாக்கியால் சுட்டார். இதனால் எனக்கு கழுத்து, தோள்பட்டை பகுதியில் காயம் ஏற்பட்டது. இதே கும்பல் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கத்தி அரிவாளுடன் பொன்னேரி - சித்தலூர் பைபாஸில் வழிமறித்து தாக்கிக் கொலை செய்வதற்கு முயற்சித்தனர். இது குறித்து விருத்தாசலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை” எனத் தெரிவித்தார். 

 

6 people arrested in Virudhachalam DMK member case
புகழேந்தி மற்றும் ஆடலரசு

 

இளையராஜா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் குறித்தும், அவர்களுக்குத் துப்பாக்கி எப்படி கிடைத்தது என்றும் போலீசார் தீவிரமாக விசாரித்தனர். அதனைத் தொடர்ந்து மணவாளநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகரின் மகனும் ஓ.பி.எஸ் அணியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டச் செயலாளருமான புகழேந்தி, அவரது தம்பி ஆடலரசு மற்றும் அடையாளம் தெரியாத 4 பேர் மீது கொலை முயற்சி, உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, 3 தனிப்படைகள் அமைத்து தீவிரமாகத் தேடினர். மேலும் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார். இதனிடையே இன்று அதிகாலை கடலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராஜசேகரை பார்ப்பதற்காக அவரது மகன்கள் புகழேந்தி, ஆடலரசு ஆகியோர் வந்தபோது போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்து விசாரணைக்காக விருத்தாசலம் அடுத்த ஆலடி காவல்நிலையத்துக்கு அழைத்து வந்தனர்

 

விசாரணையில் புகழேந்தி மற்றும் ஆடலரசு ஆகியோருக்கும், இளையராஜாவுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. அதன் காரணமாக இளையராஜாவை கொலை செய்யும் நோக்கத்தில் 2 கள்ளத் துப்பாக்கிகளை வாங்கி வந்த புகழேந்தி, ஆடலரசன் மற்றும் இவர்களின் கூட்டாளிகள் பாளையங்கோட்டை விஜயகுமார், விருத்தாசலம் சரவணன், மதுரை சூர்யா, விருத்தாசலம் வெங்கடேசன் ஆகிய 6 பேரையும் விருத்தாசலம் அடுத்த ஆலடி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர். அவர்களிடமிருந்து 2 கள்ள கைத்துப்பாக்கிகளையும் போலீசார் பறிமுதல்  செய்தனர். 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

 

Next Story

''ரோட்ல கடை போட்டா டெய்லி 100 ரூபாய் தரணுமா?'' - மாமூல் கேட்ட அதிமுக கவுன்சிலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் 

Published on 02/08/2023 | Edited on 02/08/2023

 

Youth who had an argument with the AIADMK councilor, "Should we give 100 rupees to put up a shop on the road?"

 

விருத்தாசலத்தில் சாலையோரம் பிரியாணிக் கடை வைத்திருந்த இளைஞர்களிடம் அதிமுக கவுன்சிலர் ஒருவர் 100 ரூபாய் மாமூல் கேட்டு வாக்குவாதம் செய்யும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.

 

விருத்தாசலத்தில் அதிமுக கவுன்சிலர் ராஜேந்திரன் என்பவர் அந்தப் பகுதியில் சாலையில் பிரியாணிக் கடை வைத்திருக்கும் இளைஞர்களிடம் 100 ரூபாய் மாமூல் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. வெளியாகி இருக்கும் அந்த வீடியோவில் பிரியாணி கடை உரிமையாளரின் நண்பர் ஒருவர் அதிமுக கவுன்சிலரிடம் ''அண்ணா நானும் இந்த ஏரியாதான் அண்ணா. என் வண்டில பாருங்க நீதித்துறை'னு ஸ்டிக்கர் ஒட்டி இருக்கும். நானும் அட்வகேட் தான். நான் வாடகைக்கு எடுத்து ஒரு மொபைல் கடை வெச்சிருக்கேன். அந்த கடைக்கே மாதம் 2,500 ரூபாய் தான் வாடகை. நீங்க தினமும் இங்க 100 ரூபாய் கேக்கறீங்க. மாதம் 3000 ரூபாய். அது இருந்தா ஏன் சாலை ஓரத்துல பிரியாணி கடை போடுறோம். கடைய வாடகைக்கு எடுக்க மாட்டோமா? எதுக்கு டெய்லி 100 ரூபாய் கேக்கறீங்க. எதுக்கு நாங்க காசு தரணும்'' என பேசியுள்ளார்.  அதிமுக கவுன்சிலர் ராஜேந்திரனும் பதிலுக்கு வாக்குவாதத்தில் ஈடுபடும் அந்தக் காட்சி தற்போது வைரலாகி வருகிறது.