கடலூர் மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் உயர்வை கண்டித்து  மறியல் செய்த 664 பேர் கைது

kattu

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி பந்த் அறிவித்திருந்தது. அதற்கு திமுக,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தது.

அதன் படி திங்களன்று கடலூர் மாவட்டத்தில் 15 இடங்களில் திமுக, திமுக,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டன. கடலூரில் திமுக தலைமையில் சீமாட்டி சிக்னல் மறியல் போராட்டம் நடந்தது. மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் இளபுகழேந்தி, நகர செயலாளர் ராஜா, காங்கிரஸ் நிர்வாகி வழக்கறிஞர் சந்திரசேகரன் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி நிர்வாகி தாமரைச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் 90 பேர் கைது செய்யப்பட்டனர். இது போல கடலூர் அண்ணா பாலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் செய்தனர்.மாவட்ட செயலாளர் ஆறுமுகம் மாநிலக்குழு மாதவன் ,மாவட்ட செயற்குழு சுப்பராயன், நகர செயலாளர் அமர்நாத், ஒன்றிய செயலாளர் ராஜேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 60 பேர் கைது செய்யப்பட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. வட்ட செயலாளர் தமிழ்மணி தலைமையில் வட்ட பொருளாளர் வடிவேல், நிர்வாகிகள் முருகன், மகேஷ், அமாவாசை முன்னிலையில் மாநில குழு உறுப்பினர் குளோப், நகர செயலாளர் ஹரிகிருஷ்ணன் மாவட்ட துணை செயலாளர் சுந்தர் ராஜா உள்பட 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

kattu

இது போல சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காந்தி சிலை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். நகர செயலாளர் ராஜா, மாநிலக்குழு மூஸா, மாவட்ட செயற்குழு ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் புவனகிரி சதானந்தம், கீரப்பாளையம் வாஞ்சிநாதன், குமராட்சி மூர்த்தி உள்ளி பலர் கலந்து கொண்டனர். இதில் 40 பேர் கைது செய்யப்பட்டனர். சிதம்பரம் வடக்குவீதி தபால்நிலையம் அருகே மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நிர்வாகி சேகர் உள்ளிட்ட 35 பேர் கைது செய்யப்பட்டனர்.

இது போலகாட்டுமன்னார்கோவில் திமுக அலுவலகத்திலிருந்து திமுக ஒன்றிய செயலாளர் முத்துசாமி தலைமையில் திமுக, காங்கிரஸ், விடுதலைச்சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகிய கட்சியை சேர்ந்தவர்கள் ஊர்வலமாக புறப்பட்டு பேருந்து நிலையத்தில் மத்திய அரசை கண்டித்து முழுக்கங்கள் எழுப்பினர். திமுக நகர செயலாளர் கணேசமூர்த்தி. அவைதலைவர் கருணாநிதி, காங்கிரஸ் நஜிர்அகமது,அன்வர்,இளங்கீரன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மணவாளவன்,ராவணன் ,நாகராஜன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பேருந்து நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,மார்க்சிஸ்ட் லெனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகள் சார்பில் மாவட்ட குழு உறுப்பினர் பிரகாஷ் தலைமையில் நகர செயலாளர் இளங்கோவன் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடத்தி மறியலில் ஈடுபட்டனர். இதில் 76 பேர் கைது செய்யப்பட்டனர். நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, சி.முட்லூர். பண்ருட்டி, விருத்தாசலம் உள்ளிட்ட 15 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 664 பேர் கைது செய்யப்பட்டனர்.

kattumannaarkovil
இதையும் படியுங்கள்
Subscribe