Skip to main content

போலி வங்கி நடத்தி போலீசில் சிக்கிய 19 வயது இளைஞர்!

Published on 14/07/2020 | Edited on 14/07/2020

 

CUDDALORE DISTRICT 19 YOUTH POLICE INVESTIGATION

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி எல்.என்.புரம் ஸ்டேட் பேங்க் நகரைச் சேர்ந்த தம்பதி சையது கலீல்- லட்சுமி. இவர்களின் மகன் கமால்பாபு (வயது 19). கமால்பாபு தான் ஒரு வங்கி மேலாளர் எனக் கூறிக்கொண்டு 'பண்ருட்டி நார்த் பஜார் பாரத ஸ்டேட் வங்கி' என்று தாமாகவே வீட்டில் ஒரு வங்கி தொடங்கி நடத்தி வருவதாக பண்ருட்டி காவல்நிலையத்துக்கு புகார் வர கடந்த 08- ஆம் தேதி குற்ற எண் 1349/2020- 465, 473, 469, 484, 109 ஆகிய சட்டப் பிரிவுகளின்படி வழக்குப் பதிவு செய்து, கமால்பாபுவையும், அவருக்கு உடந்தையாக இருந்த ஈஸ்வரி ஸ்டாம்ப் உரிமையாளர் மாணிக்கம் (வயது 52), அருணா பிரிண்டர்ஸ் உரிமையாளர் குமார் (வயது 42) ஆகியோரையும் கைது செய்தனர்.

 

இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்ததில், "சையத் கலீல் ஸ்டேட் வங்கியில் பணியாற்றிய போது உடன் பணியாற்றிய லட்சுமியைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். நீண்ட காலமாக இவர்களுக்குக் குழந்தை இல்லாததால் கமால்பாபுவைத் தத்தெடுத்து வளர்த்தார்கள். இருவரும் வங்கி ஊழியர்கள் என்பதாலும், குழந்தையாக இருந்த கமால்பாபுவை பார்த்துக்கொள்ள வீட்டில் யாரும் இல்லாததாலும் வங்கிக்கு அழைத்துச் சென்று, அங்கு அமரவைத்து விட்டு வேலை பார்த்து வந்துள்ளனர். 

 

குழந்தை இல்லாதவர்களுக்கு கிடைத்த குழந்தை என்பதால் கமால்பாபுவை ரொம்ப செல்லமாக வளர்த்தனர். குழந்தை சிறுவனாக ஆன நிலையிலும் வங்கிக்கு அழைத்துச் செல்லும் போது அங்கு வங்கித் தொடர்பான சின்னச் சின்ன வேலைகளைக் கமால்பாபுவை செய்து பழக்கியுள்ளனர். இந்த நிலையில் 7 ஆண்டுகளுக்கு முன்னர் சையத்கலீல் வங்கியில் பணியில் இருக்கும்போதே ‘ஹார்ட் அட்டாக்’கால் இறந்துவிட்டார். 

 

அது கமால்பாபு மனதை ரொம்பவே பாதித்துள்ளது. அப்பாவை போல, அதே வங்கியிலேயே வேலை செய்ய வேண்டும் என்ற விருப்பம் விருட்சமாக வளர்ந்தது. வாரிசு அடிப்படையில் வேலை கேட்டு அதே வங்கி மேலாளருக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். போதுமான வயது இல்லை என்பதால் வங்கி நிர்வாகம் அதைக் கிடப்பில் போட்டுள்ளது. இதனால் மனரீதியாக பாதிப்புக்குள்ளான கமால்பாபு தன்னை ஒரு வங்கி அதிகாரியாக மனதளவில் பாவித்ததோடு அல்லாமல் தானே ஒரு வங்கிக் கிளை தொடங்க அனுமதி கேட்டும் ஒரு மின்னஞ்சலை மேலாளருக்கு மீண்டும் அனுப்பியிருக்கிறான்.

 

CUDDALORE DISTRICT 19 YOUTH POLICE INVESTIGATION

 

ஆனால் வங்கி அதிகாரிகள் இதை விளையாட்டாகக் கருதி கண்டும் காணாமல் விட்டுவிட்டனர். இந்த நிலையில் நிறைய சொத்துகள், நிறைய பணம் இருந்ததால் வீட்டுமாடியிலுள்ள அறையையே வங்கியாக மாற்றி, கம்ப்யூட்டர், பிரிண்டர், வருகைப் பதிவேடு, பணம் எடுக்கும்- போடும் செலான்கள், ஸ்டேட் பேங்க் சீல் எல்லாம் தயார் செய்து கொண்டார் கமால்பாபு. அவரது வங்கியில் 10 பேர் வேலை செய்வதுபோல் தினமும் வருகைப் பதிவேட்டில் அவரே அட்டெண்டன்ஸ் போட்டுவந்துள்ளார். அதையடுத்து கமாலினுடைய பெரியம்மாவிடம் அவர் பணி ஓய்வு பெற்ற பணம் இருந்திருக்கிறது.

 

அதைத் தனது வீட்டு வங்கி (நெட்பேங்க்) மூலம் அம்மாவின் அக்கவுண்ட்டிலிருந்து பெரியம்மாவின் அக்கவுண்ட்டுக்கும், பெரியம்மாவின் அக்கவுண்ட்டிலிருந்து தனது அக்கவுண்ட்டுக்கும், பணப் பரிமாற்றம் செய்து வந்துள்ளார். அம்மா, பெரியம்மாவின் கணக்கு எண் மற்றும் பாஸ்வர்டு தெரிந்திருப்பதால் பரிமாற்றம் செய்துள்ளார். மற்றபடி வேறு எந்தப் பரிமாற்றமும் இல்லை.

 

இந்த நிலையில்தான் கமால்பாபு வங்கி நடத்தும் செய்தியறிந்த சிலர் பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகத்துக்குத் தகவல் கொடுத்துள்ளனர். அதையடுத்து வங்கி அதிகாரிகள் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது ‘பண்ருட்டி நார்த் பஜார் ஸ்டேட் பேங்க்’ என்ற பெயரில் அங்கிருந்த பல்வேறு ஆவணங்களைப் பறிமுதல் செய்ததுடன் மேலாளர் வெங்கடேஷ் காவல்துறையிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில் வீட்டுக்குச் சென்ற இன்ஸ்பெக்டர் அம்பேத்கார் டீம் விசாரணை செய்து கமால்பாபுவைக் கைது செய்ததுடன், இரப்பர் ஸ்டாம்ப் செய்து கொடுத்தவர் மற்றும் செலான் அச்சடித்தவரும் கைது செய்து, நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

 

ஸ்டாம்ப் பேட் செய்தவர், அச்சடித்தவரை போலீசார் விசாரித்ததில் கமால்பாபுவின் பெற்றோர் வங்கியில் வேலை செய்தவர்கள் என்பதால் அவர்களுக்காகத்தான் வேலை கொடுக்கிறார் எனக் கருதி அச்சடித்து கொடுத்ததாகவும், அவரது உள்நோக்கம் தெரியாது என்றும் கூறியுள்ளனர்.

 

‘நீ எதுவாக ஆக நினைக்கிறாயோ, அதுவாகவே ஆவாய்’ என்பதைப் போல வங்கி அதிகாரியாகவே தன்னைப் பாவித்துக்கொண்டுள்ளார் கமல்பாபு. ஆனால், நடைமுறைச் சிக்கல்களால் வங்கி அதிகாரியாக ஆக முடியாத விரக்தியில் தவறான வழிகளைத் தேர்ந்தெடுத்துள்ளார். அவரின் வயதைக் கருத்தில்கொண்டு, சரியான மனநல ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும் என்பதே பண்ருட்டி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.