Cuddalore - corona virus

Advertisment

கரோனோ நோய் பரவலைத் தடுக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் அறிவித்த ஊரடங்கு மே-17 ஆம் தேதியோடு முடிய இருக்கிறது. ஊரடங்கு முடிய இன்னும் ஒரு நாட்களே உள்ள நிலையில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா என்பது இன்று தெரிய வரும்.

இந்நிலையில் கோயம்பேடு காய்கறி சந்தையிலிருந்து வந்தவர்களால் கடலூர் மாவட்டத்தில் கரோனா நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த வாரத்தில் மளமளவென உயர்ந்தது. அதே வேகத்தில் கடந்த இரண்டு நாட்களாக நோயாளிகள் குணமடைந்து வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் கரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 416 ஆக இருந்த நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையிலிருந்த 84 பேர், விருத்தாசலம் அரசு மருத்துவமனையிலிருந்த 48 பேர், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்த 36 பேர், சிதம்பரம் அரசு மருத்துவ மனையிலிருந்த 30 பேர், திட்டக்குடி அரசு மருத்துவமனையிலிருந்த 16 பேர் என 250 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 214 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் மாவட்ட நிர்வாகம் நிம்மதியடைந்துள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்தில் நேற்று வரை நோயாளர்களின் எண்ணிக்கை 413 ஆக இருந்த நிலையில் இன்று அது 166 ஆக குறைந்தது.

Advertisment

இன்னமும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் 36 பேர், கிருஷ்ணா மருத்துவமனையில் 64 பேர், புதுச்சேரி ஜிப்மரில் 3 பேர், முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரியில் ஒருவர், சென்னையில் 2 பேர் என 166 பேர் தனி வார்டுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 3,294 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 8,848 பேரின் உமிழ்நீர் பரிசோதனை செய்யப்பட்டதில் 416 பேருக்கு கரோனா இருப்பதும், 8,280 பேருக்கு இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. இன்னும் 152 பேரின் உமிழ்நீர் பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

http://onelink.to/nknapp

Advertisment

டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்தவர்கள், கோயம்பேட்டிலிருந்து வந்தவர்கள், காவல்துறை பயிற்சிக்கு வந்தவர்கள் என கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்த வேகத்தில் குணமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளதால் மாவட்ட நிர்வாகம் நிம்மதியடைந்துள்ளது. “விரைவில் அனைவரும் குணமடைவார்கள் என்றும், புதிய தொற்றுகள் ஏற்படாமலிருக்க மக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, முகக் கவசம் அணிவது போன்றவற்றைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்” எனவும் கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவுறுத்தியுள்ளார்.