Skip to main content

கடலூர்: காணொளி காட்சி மூலம் குறைகேட்பு! சித்த மருத்துவத்தில் கரோனா சிகிச்சை! - ஆட்சியர் சந்திரசேகர் சகாமூரி.

Published on 04/08/2020 | Edited on 04/08/2020
cuddalore

 

வாரந்தோறும் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் தமிழகம் முழுவதும் நடத்தப்படுவது வழக்கம். 

 

இந்தக் கூட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் நேரில் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று தொடர்புடைய அதிகாரிகளிடம் குறைகளைக் களைவதற்கு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்துவார்கள். அதனால் மாவட்ட ஆட்சியர் குறைதீர்வு கூட்டத்தில் தங்களது குறைகளைத் தெரிவிக்க மாவட்டம் முழுவதிலிருந்தும் பொதுமக்கள் நேரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவது வாடிக்கை.

 

ஆனால் கரோனோ தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக நடைமுறையிலுள்ள ஊரடங்கு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக குறைதீர்வு கூட்டங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நடத்தப்படவில்லை. மனு கொடுக்க வரும் பொதுமக்கள் ஆட்சியர் அலுவலக நுழைவுவாயிலில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் மனுக்களைப் போட்டுவிட்டுச் சென்று விடுவார்கள். அம்மனுக்களைப் பிரித்துப் படித்துப் பார்க்கும் மாவட்ட ஆட்சியர்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பிவைத்து குறைகளைத் தீர்வு காண அறிவுறுத்தி வந்தனர்.

 

இந்த நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காணொளி காட்சி மூலம் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தினை நடத்த மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகாமூரி நடவடிக்கை மேற்கொண்டார்.

 

அதன்படி நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகாமூரி தலைமையில் அதிகாரிகள் கலந்து கொண்ட காணொளி கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது.

 

அதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவுவாயில் அருகே வரவேற்பாளர் அமரும் இடத்தில் கேமராவுடன் கூடிய எல்.இ.டி டிவி அமைக்கப்பட்டிருந்தது. அதன் முன்பாக மனு கொடுக்க வந்த பொதுமக்கள் ஒவ்வொருவராக அமர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் தங்கள் கோரிக்கைகள் மற்றும் புகார்களைத் தெரிவித்தனர். அதைக் காணொளி காட்சி மூலம் பார்த்த ஆட்சியர் சந்திரசேகர் சகாமூரி பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

 

அதையடுத்து செய்தியாளரிடம் பேசிய சந்திரசேகர் சகாமூரி, "கரோனா ஊரடங்கால் கடலூர் மாவட்டத்தில் திங்கள்கிழமைகளில் நடைபெற்று வந்த குறைதீர்வு கூட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று  காணொளி காட்சி மூலம் பொது மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் முதலில் வந்த 30 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு அவர்கள் ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு தங்கள் கோரிக்கைகளைத் தெரிவித்தனர். இந்தக் குறைகேட்பு கூட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும் பட்சத்தில் அதிக நபர்கள் பங்கெடுக்கும் வகையில் அடுத்தடுத்த கூட்டங்கள் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

 

அதேபோல்  பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.

 

இதனிடையே கடலூர் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரியில் கரோனோ பாதித்து சேர்க்கப்பட்ட 192 பேருக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

 

சித்த மருத்துவமனையைப் பார்வையிட்டு,  சித்த மருத்துவ முறையில் கொடுக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து  மருத்துவர்களிடம் விசாரித்த மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகாமூரி, "கரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

அவ்வாறு சிகிச்சை பெறுபவர்களை அலோபதி மருத்துவர்கள்,  சித்த மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.  சிகிச்சை பெறுபவர்களுக்கு சித்த மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது.  நோய்த் தொற்று ஏற்பட்டு அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கும் அலோபதி மருத்துவத்துடன் சித்த மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன" என்றார்.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எந்த சின்னத்திற்கு ஓட்டு போட்டேன் என சொன்ன பெண் அடித்து கொலை; 7 பேருக்கு வலை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

நேற்று தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் எந்த சின்னத்தில் வாக்களித்தேன் என வெளியே சொன்னதால் ஒரு பெண் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவல் தமிழகத்தில் பரபரப்பு ஏற்படுத்திருக்கிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ளது பக்ரிமாணியம் கிராமம். அந்த பகுதியில் வசித்து வந்தவர் கோமதி. நேற்று நடந்த மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு சின்னத்திற்கு வாக்களித்ததாக வெளியில் கூறியுள்ளார். இதனைக் கேட்ட அதே ஊரைச் சேர்ந்த அருள், பாண்டியன், அறிவுமணி, ரவிராஜா, கலைமணி, தர்மராஜ் ஆகியோர் அப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 'நீ ஏன் எங்கள் கட்சிக்கு வாக்களிக்கவில்லை' என கூறி ஏழு பேரும் ஒன்றாக சேர்ந்து கோமதியை பலமாக தாக்கியுள்ளனர்.

இதில் கோமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் உடலைக்  கைப்பற்றி விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அவரது உடலை அனுப்பி வைத்தனர். இதில் சம்பந்தப்பட்ட ஏழு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இக்கொலைக்கு உடைந்தையாக இருந்ததாக அந்த பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Next Story

26 மணி நேரம் விமான பயணம்; கடல் கடந்து வந்து ஜனநாயகக் கடமையாற்றிய மருத்துவர்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
doctor who came to Cuddalore from New Zealand and voted

கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்தவர் வினோத்( 46).  மருத்துவர். இவர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நியூசிலாந்தில் வசித்து வருகிறார். அங்கு அவர் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.  இந்த நிலையில் கடலூர் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதும், அவர் தனது ஒற்றை வாக்கை செலுத்த சொந்த ஊருக்கு வந்து வாக்களிக்க விரும்பினார்.

இதையடுத்து அவர் நியூசிலாந்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்து செல்ல சுமார் ரூ.1.70 லட்சம் செலவு செய்து டிக்கெட் வாங்கினார். பின்னர் அவர் ஓட்டு போட விமானத்தில் 26 மணி நேரம் பயணம் செய்து சொந்த ஊருக்கு( கடலூர்,செம்மண்டலத்துக்கு) 18 ஆம் தேதி இரவு வந்தார்.  நேற்று மதியம் 12 மணிக்கு கடலூர் செம்மண்டலத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று தனது வாக்கைப் பதிவு செய்தார்.

பின்னர் இதுகுறித்து மருத்துவர் வினோத் கூறுகையில், வெளிநாட்டில், தமிழ்நாட்டை சேர்ந்த பலர் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக சொந்த ஊர்களுக்கு சென்று தங்களது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையாற்ற முடியாமல் சிரமப்படுகின்றனர். அதனால் வெளிநாட்டில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தபால் வாக்கு அளிக்க அரசு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்றார்.