கடலூரில் குடிசை மாற்று வாரிய வீடுகள் கட்டுவதில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து ஒப்பந்ததாரர் மற்றும் உதவி செயற்பொறியாளர் வீடு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகேயுள்ள அரியகோஷ்டி கிராமத்தில் குடிசை மாற்று வாரியம் மூலமாக கட்டப்பட்டு வரும் வீடுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், இந்த கட்டுமான பணிக்கான ஒப்பந்தம் பெற கையூட்டு கொடுக்கப்பட்டதாகவும் லஞ்ச ஒழிப்பு காவல் துறைக்கு பல்வேறு புகார்கள் வந்தன. அதையடுத்து ஒப்பந்தம் எடுத்த கட்டுமான நிறுவனமான எம்.கே.எம்.எஸ் கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர் பஷீருல்லா என்பவரின் கடலூர் ஆர்.வி.எஸ் நகரில் உள்ள வீடு மற்றும் கடற்கரை சாலையில் உள்ள கட்டுமான நிறுவனம் மற்றும் குடிசை மாற்று வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளர் ராஜாமெல்வின் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீரென இன்று காலை அதிரடி சோதனை நடத்தினர்.
இதேபோல் விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் உள்ள எம்கேஎம்எஸ் அரிசி ஆலையிலும் சோதனை நடைபெற்றது. மேலும் கடலூர் குடிசை மாற்று வாரியத்தில் உதவி செயற்பொறியாளர் ஆக பணியாற்றி வரும் ஜெயக்குமாரின் பெண்ணாடம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரேயுள்ள வீட்டிலும் இன்று முதல் கடலூர் லஞ்ச ஒழிப்பு துறையை சேர்ந்த காவல் ஆய்வாளர் மாலா தலைமையிலான குழுவினர் அதிரடி சோதனை செய்தனர். அப்போது வீட்டில் ஜெயக்குமார் இல்லாத நிலையில் அவரது மனைவி வளர்மதியிடம் விசாரணை செய்தனர். 10 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த அதிரடி வந்த சோதனைகளில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் தெரிவித்தனர்.