Skip to main content

ரூபாய் ஒன்றே கால் கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்! 3 பேர் கைது! 3 பேருக்கு வலை!

Published on 16/08/2020 | Edited on 16/08/2020
Cuddalore

 

கடலூர் அருகே உள்ள கே.என் பேட்டை திருப்பதி நகரில் உள்ள ஒரு வீட்டில் வீடு முழுவதும் தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா, உள்ளிட்ட போதைப் பொருட்கள் டன் கணக்கில் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாகவும், அங்கிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிக்கும் சப்ளை செய்யப்படுவதாகவும், தற்போது அந்த வீடு பூட்டியே கிடப்பதாகவும் கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் சாந்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

 

அதையடுத்து சாந்தி தலைமையில் திருப்பாதிரிப்புலியூர் காவல்துறையினர் மற்றும் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சுகந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் கே.என்.பேட்டை திருப்பதி நகரில் மகேஸ்வரி என்பவருக்கு சொந்தமான வீட்டில் அதிரடியாக சென்று பூட்டியிருந்த அந்த வீட்டை உடைத்து சோதனை செய்தனர். அந்த வீட்டின் ஒவ்வொரு அறையிலும் அரசால் தடைசெய்யப்பட்ட போதை மற்றும் புகையிலைப் பொருட்கள் நூற்றுக்கும் மேற்பட்ட அட்டை பெட்டிகளில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  

 

1,21,12,740 ரூபாய் மதிப்பிலான சுமார் 7 டன் 753 கிலோ அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா போதை பாக்கு மற்றும் ஹான்ஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவ் அந்த வீட்டை நேரில் ஆய்வு செய்து குற்றவாளியை உடனடியாக விரைந்து பிடிக்க உத்தரவிட்டார்.


 
அதுகுறித்து வழக்குப்பதிவு செய்த  காவல்துறையினர் போதைப் பொருட்களை அந்த வீட்டில் பதுக்கி வைத்தது யார்? அவை எங்கிருந்து கொண்டுவரப்பட்டது? எந்தெந்த கடைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது?  என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்தனர். மேலும்  தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

 

விசாரணையில் திருப்பாதிரிப்புலியூரில் மளிகை கடை வைத்து நடத்தி வரும் பாரதி என்பவர் மகேஸ்வரியின் வீட்டை வாடகைக்கு எடுத்து, வீட்டில் போதைப் பொருட்களை பதுக்கி வைத்து மாவட்டம் முழுவதும் விநியோகம் செய்து வந்ததும், அவர் மீது ஏற்கனவே போதைப்பொருட்கள் விற்றதாக வழக்கு உள்ளதாகவும்  தெரியவந்தது. 

 

அதையடுத்து திருப்பாபுலியூர் போடிசெட்டி தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரது மகன் பாரதி(36)யை கைது செய்து விசாரித்தனர்.  மேலும் அவருக்கு பிடாரி அம்மன் கோவில் தெரு ராஜேந்திரன் மகன் சரவணன் (49), சாவடி, ரட்சகர் நகரை சேர்ந்த கேசவன் மகன் ராம்குமார்(19),  கே.என்.பேட்டை செல்வராஜ் மகன் பிரசாந்த், அதே தெருவை சேர்ந்த சிவக்குமார் மகன் தேவநாதன், நெல்லிக்குப்பம் கணபதி ஆகியோர் உடந்தையாக இருப்பதும் தெரியவந்தது. அதையடுத்து  பாரதி, சரவணன், ராம்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

 

பாரதியிடம் விசாரித்ததில், "தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை பெங்களூரிலிருந்து மொத்த வியாபாரி ஒருவர் வாங்கி காய்கறி மூலம் அனுப்பி வைப்பார். இதை நான் வீட்டில் பதுக்கி வைத்து கடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விற்பனை செய்து வந்தேன்" என கூறியுள்ளார். இதனிடையே மேலும் தலைமறைவாகவுள்ள 3 பேர் தேடப்பட்டு வருகின்றனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.