Skip to main content

சிதம்பரம் நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது; நூலகம் கட்ட 20 லட்சம் நிதி ஒதுக்கீடு

Published on 29/08/2019 | Edited on 29/08/2019

 

சிதம்பரம் நகரத்தில் பழமைவாய்ந்த நூலக கட்டிடத்தை நவீன முறையில் கட்ட முதல்கட்டமாக ரூ20 லட்சம் சிதம்பரம் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் ஒதுக்கியுள்ளதால் பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.

 

c

 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரத்தில் உள்ள காசுகடைதெருவில் கடந்த 1955-ஆம் ஆண்டு மார்ச் 3-ந்தேதி சிதம்பரம் கிளை நூலகம் வாடகை கட்டிடத்தில் துவக்கப்பட்டது. இது முதல்நிலை நூலகமாக கடந்த 1982-ஆம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. 50 ஆண்டுகள் சிறப்பாக இயங்கி வந்த இந்த நூலகம் கட்டிட வசதி சரியில்லாததால் கடந்த 2006-ஆம் ஆண்டு சின்னகாஜதெருவில் உள்ள வாடகை கட்டிடத்தின் மேல்தளத்தில் மாற்றப்பட்டது. இந்த நூலகத்தில் இந்திய ஆட்சிபணி மற்றும் குடிமைப்பணி நூல்கள் உட்பட 167014 நூல்கள் உள்ளது. 16350 பேர் உறுப்பினராக உள்ளனர். நூல் இரவல் 55296 உள்ளது. நூல்களின் மொத்த பயன்பாடு 222310 ஆகும். 103 புரவலர்கள் உள்ளனர். பெரும்புரவலர் 1 உள்ளனர்.

 

தினந்தோறும் 1500 வாசகர்கள் வந்து செல்கிறார்கள். இதில் மாணவர்கள் 50 பேர் வருகிறார்கள். இப்படி பெருமை வாய்ந்த நூலக கட்டிடம் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக மழைகாலங்களில் மேல்தளத்தின் வழியாக மழைநீர் உள்ளே வருவதால் புத்தகங்கள் பாதிக்கப்படுகிறது. மேலும் முதல்தளத்தில் செயல்படுவதால் வயது முதிந்தவர்கள் நூலகத்திற்கு வர சிரமம் அடைந்து வருகிறார்கள்.  இதனால் சிதம்பரம் நகரத்திலே புதிய நூலகம் கட்டுவதற்கு கடந்த 2012-லிருந்து நூலகத்துறையினர் பல்வேறு முயற்ச்சிகளை எடுத்து வந்தனர்.

 

c

 

இந்த நிலையில் கடந்த 2014,.ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் சிதம்பரம் சட்ட மன்ற உறுப்பினராக இருந்த பாலகிருஷ்ணன் மற்றும் நகராட்சி தலைவராக இருந்த பவுசியாபேகம் ஆகியோரின் முயற்சியால் சிதம்பரம் நகராட்சியில் சிறப்பு கூட்டத்தை கூட்டி நூலகத்திற்கு சிதம்பரம் நகராட்சி அலுவலகத்திற்கு அருகிலே கச்சேரி தெருவில் நகராட்சிக்கு சொந்தமான 4 ஆயிரம் ச.அ இடம் வழங்கப்பட்டது.

 

இதனை தொடர்ந்து இடம் இருந்து கட்டிடம் கட்ட பணம் இல்லாமல் நூலக துறை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேல் அல்லாடி வந்தது. இந்த நிலையில் 1300 ச.அ அளவில் மூன்று அடுக்கில் திட்டமதிப்பீடு தயார் செய்யப்பட்டது. இந்த நிலையில் கடலூர் மாவட்ட நூலகர் பாலசரஸ்வதி தலையில் சிதம்பரம் நூலகர்கள் முத்துகுமரன், ரகுநந்தனன் உள்ளிட்ட ஊழியர்கள் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ பாண்டியனிடம் நூலகம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கவேண்டும் என்று கோரிக்கைவிடுத்தனர். அவரும் நூலகத்தின் அருமை கருதி தொகுதி மேம்பாட்டு நிதியில் முதல் கட்டமாக ரூ 20 லட்சத்தை உடனடியாக ஒதுக்கி அதற்கான உத்தரவையும் கொடுத்துள்ளார்.

 

இதுகுறித்து நூலகர்கள் கூறுகையில் முதல்தளம் கட்டுவதற்கு ரூ 60 லட்சம் தேவைபடுகிறது. இதில் நூலகத்துறை ரூ20 லட்சம் கொடுக்கஉள்ளது. எம்எல்ஏ நிதி ரூ 20 லட்சம் கிடைத்துள்ளது. சிதம்பரம் பாரளுமன்ற உறுப்பினர் திருமாவளவனை சந்தித்து நூலகம் கட்டுவதற்கு நிதி கேட்கவுள்ளோம். தற்போது கிடைத்த நிதியை கொண்டு ஒரு மாதத்தில் பணியை தொடங்கவுள்ளதாக கூறினார்கள். சிதம்பரம் நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நவீன நூலகம் அமைய நிதிஒதுக்கியுள்ளதை அறிந்து அனைத்து தரப்பு மக்களும் வரவேற்றுள்ளனர்.    

சார்ந்த செய்திகள்

Next Story

விசிக தேர்தல் அறிக்கை வெளியீடு!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Release of special election report

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை சிதம்பரத்தில் உள்ள ஜெயங்கொண்டபட்டிணம் என்ற இடத்தில் அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. வெளியிட்டார். இதனை தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார். இந்த தேர்தல் அறிக்கையில், “வகுப்புவாத பிரிவினையை தூண்டும் சட்ட திருத்தங்கள் நீக்கப்படும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத்தரப்படும். டாகர்.அம்பேத்கர் பிறந்தநாளை அறிவு திருநாளாக அங்கீகரிக்கப்பட வலியுறுத்தப்படும்.

இந்திய தேர்தல் ஆணையர் நியமன திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும். ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும். தேர்தலில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை நடைமுறைப்படுத்த வலியுறுத்தப்படும். தமிழ்நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு இலங்கை பிரச்சனையில் முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். கச்சத்தீவை இலங்கையில் இருந்து மீட்க நாடாளுமன்றத்தில் விசிக குரல் எழுப்பும். தமிழக ஆளுநரை பல்கலைக்கழக வேந்தராக நியமிக்கக் கூடாது. மின்னணு வாக்கு எந்திரத்துக்கு பதில் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த வலியுறுத்தப்படும்.

பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு தனி வங்கி அமைக்கப்படும். உயர் சாதியினருக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் வழக்காடு வழியாக தமிழை அறிவிக்க வேண்டும். பாசிச சக்திகளை அகற்றுவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளும் எடுக்க வேண்டும். இதற்காக நாடாளுமன்றத்தில் விசிக குரல் எழுப்பும். இந்துத்துவ சக்திகளால் பாதிக்கபட்டவர்களை பாதுகாக்க தேவையான முயற்சிகளை விசிக மேற்கொள்ளும். காஷ்மீர் பிரச்சனை அடிப்படையில் இந்திய அரசின் வெளியுறவு கொள்கை தீர்மானிக்கப்படக் கூடாது.

ராமர் கோயில் கட்டுமானத்தில் நடந்த ஊழல் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்படும். ராமர் கோயில் திறப்பு விழா நடந்துள்ள நிலையில் நீதிமன்ற ஆனைப்படி மசூதிக்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கை அவசியம் எடுக்கப்படும். மத்திய மற்றும் மாநில அளவில் பொது லோக்பால் அமைப்புகளை உருவாக்க வேண்டும். இதில் பொது மக்களும் பங்கேற்கும் வகையில் அதற்கான கண்காணிப்புக் குழுவையும் உருவாக்க வேண்டும். இதற்காக நாடாளுமன்றத்தில் விசிக குரல் எழுப்பும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

படகு கவிழ்ந்து மீனவர் பலி; இருவர் மருத்துவமனையில் அனுமதி

Published on 31/12/2023 | Edited on 01/01/2024
Fisherman incident after boat capsizes Two were hospitalized

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை புதுகுப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் ஜெயசீலன் (வயது 42), அமுது (வயது 48), சக்திவேல் (வயது 50) ஆகிய 3 பேரும் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை பரங்கிப்பேட்டை கடலில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்துள்ளது. இதில் அமுது, சக்திவேல் ஆகிய இருவரும் கடலில் நீந்தி காயங்களுடன் கரைக்கு வந்துள்ளனர். இதில் ஜெயசீலன் மாயமாகியுள்ளார். மேலும் கரைக்கு வந்தவர்களை மீட்டு சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் படகு கவிழ்ந்து காணாமல் போன ஜெயசீலன் தீயணைப்புத் துறையினர் மற்றும் மீனவர்கள் அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் உதவியுடன் தேடும் பணியில் கடந்த 2  நாட்களாக ஈடுபட்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து இன்று (31.102023) சின்ன வாய்க்கால் கடற்கரை ஓரமாக இவரது உடல் கரை ஒதுங்கி உள்ளது. இதனை மீட்டு பரங்கிப்பேட்டை காவல் துறையினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த மீனவர் குடும்பத்தினர் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், கடலோர மக்கள் வாழ்வுரிமை இயக்க ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, சிபிஎம் சிதம்பரம் நகர செயலாளர் ராஜா, கடலோர மக்கள் வாழ்வுரிமை இயக்க பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் சந்தானராஜ், நிர்வாகி பழனி, சுந்தர், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஆகாஷ் உள்ளிட்டவர்கள் சந்தித்து ஆறுதல் கூறினர். இந்த சம்பவம் குறித்து எஸ்.ஜி ரமேஷ்பாபு தெரிவிக்கையில், “உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கும், காயத்துடன் உயிர் தப்பியவர்களுக்கும், படகு சேதமடைந்ததற்கு நிவராணம் வழங்க வேண்டும்” என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.