Skip to main content

காதலன் தாயாரை கட்டி வைத்து தாக்குதல்! சிகிச்சையளிக்க மறுத்ததால் ஆர்ப்பாட்டம்

Published on 23/07/2019 | Edited on 23/07/2019

 


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள விளாங்காட்டூர் கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி செல்வி தம்பதிக்கு 25 வயதில் மகன் ஒருவன்  உள்ளார்.  இந்த வாலிபரும்,  அதே கிராமத்தை சேர்ந்த கொளஞ்சி என்பவரின்  மகளும்  காதலித்து வந்துள்ளனர்.

 

c

 

கடந்த மாதம் கொளஞ்சி  தனது மகளுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்து விட்டார்.
இந்நிலையில் காதலர்கள் இருவரும் சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்று விட்டனர்.  இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது.

 

c

 

இந்நிலையில் வாலிபரின் தாய் செல்வியிடம் பெண்ணின் தந்தை கொளஞ்சி  தகராறு செய்து,  பின்னர் செல்வியை மின் கம்பத்தில் கட்டிவைத்து தாக்கியுள்ளார்.

 

இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.  அதேசமயம் கட்டி வைத்து அடித்ததால் காயமுற்ற செல்வி விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால்  நேற்று  திடீரென மருத்துவர்கள்  சிகிச்சை முடிந்ததாகக் கூறி செல்வியின் உடல் நலம் குணமாகிவிட்டது என்று மருத்துவமனையை விட்டு  வெளியேற்றினார்கள்.   ஆனால்  செல்விக்கு உடலில் உள்ள ரத்தக் கட்டுகள் கரையாமல் உள்ள நிலையில் மருத்துவர்கள் வெளியேற்றுவதாக கூறி கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் செல்வி புகார் அளித்தார்.  அதன்பேரில்  வட்ட செயலாளர் அசோகன் மற்றும் மாதர் சங்கத்தினர் ஒன்று திரண்டு செல்வியை மருத்துவம் பார்க்காமல்  வெளியே போக சொன்னதை கண்டித்து விருத்தாசலம் அரசு மருத்துவமனை முன்பு செல்வியின் தலைமையில் கம்யூனிஸ்ட்  மற்றும் மாதர் சங்கத்தினர் திடீர்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.  தகவல் அறிந்த மருத்துவர்கள் செல்வியிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் உள்நோயாளியாக சேர்த்து சிகிச்சை அளிப்பதாக  கூறியதன் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.  இதனால் மருத்துவமனை முன்பு அரைமணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Parliamentary Constituency Congress candidate filing nomination

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  வேட்பாளர் வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் பாராளுமன்ற தொகுதியான நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ளவர்களை பணியாற்ற நடவடிக்கை எடுப்பேன். மேலும் கடலூர் தொகுதிக்கு நான் புதியது என்றாலும் இங்குள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசன் ஆகியவரின் அறிவுறுத்தல் படி  தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்” என கூறினார்

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன்,  நெய்வேலி சபா ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.