Skip to main content

“என்.எல்.சி. CSR நிதியை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும்; மறுத்தால்..." - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

Published on 21/09/2020 | Edited on 21/09/2020

 

“CSR funds should be provided to the affected people. Refusal will lead to a great struggle "- MRK Panneerselvam

 

 

நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் சமூக பாதுகாப்பு நிதியை (CSR) வேறு மாநிலத்திற்கு கொண்டு செல்வதற்கு கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க.செயலாளரும், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

 

“கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் சமூக பாதுகாப்பு நிதியை (CSR) இந்த பகுதி மக்களுக்கு செலவிடாமல் வேறு மாநிலத்திற்கு கொண்டு செல்வதை வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் உருவாவதற்காக தங்கள் வாழ்வாதாரமான விளைநிலங்களையும், வீடுகளையும் இழந்த விவசாயக் குடும்பங்களுக்கு இதுவரை உத்தரவாதமளித்த வகையில் அந்நிறுவனம் உரிய வேலைவாய்ப்புகளை வழங்கவில்லை.


தற்போது இந்த ஆண்டிற்கான CSR  நிதியினை எந்தெந்த பணிகளுக்கு  ஒதுக்கியதென தெரியவில்லை. அதேசமயம்  இந்திய ரயில்வே துறைக்கு நிதி ஒதுக்குவதாக அறிகிறோம். 

 

கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட குறிஞ்சிப்பாடி மற்றும் புவனகிரி தொகுதிகளில் உள்ள பல கிராமங்கள் என்.எல்.சி. நிறுவனத்தால் பாதிக்கப்பட்டுள்ளன என்பதை பலமுறை நிறுவன அதிபர் அவர்களிடம் கடிதம் மூலமாகவும்,  மனுவாகவும் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித பணிகளும் நடைபெறவில்லை.

 

என்.எல்.சி. நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட குறிஞ்சிப்பாடி, புவனகிரி தொகுதிகளில் பல கிராம மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். எனவே இந்த கிராமங்களில் அடிப்படை வசதி உள்கட்டமைப்புகளான குடிநீர், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, சாலை வசதி, பள்ளி கட்டிடம், மருத்துவமனை கட்டிடம், வடிகால் வசதி, பொது கழிப்பிடம் போன்றவைகளை உடனடியாக என்.எல்.சி. நிறுவனம் செய்து தர முன்வர வேண்டும்.  இத்தகைய தேவைகளை செய்து தர மறுக்கும் நிர்வாகம் CSR நிதியை,  குறிப்பாக ரயில்வே துறைக்கு ஒதுக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

 

கடலூர் மாவட்டத்திலுள்ள பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு CSR நிதியை பயன்படுத்த வேண்டும். மறுத்தால், மாவட்ட பொதுமக்களை ஒன்று திரட்டி மிகப் பெரிய போராட்டத்தை நடத்திட நேரிடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்' என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.