Skip to main content

நொறுங்கி கிடந்த பிஸ்கட்; சிறுவனை மண்டியிட்டு சாப்பிட வைத்த கொடூரம்; அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்!

Published on 26/03/2023 | Edited on 27/03/2023

 

Crumbled Biscuits; The cruelty of making the boy kneel down to eat; Government school teacher dismissal!

 

ராசிபுரம் அருகே, மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவனை தரையில் நொறுங்கிக் கிடந்த பிஸ்கட்டை மண்டியிட்டு சாப்பிடும்படி தண்டனை கொடுத்த அரசுப்பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள அரசுப்பள்ளியில் மணிகண்டன் என்பவர் தமிழ்ப்பாட ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன்பு, தொட்டியப்பட்டி அரசுத் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர், ஆசிரியர் ஆகிய இருவரும் ஒரே நாளில் விடுப்பில் சென்றிருந்தனர். இதையடுத்து, மாற்றுப்பணியாக மணிகண்டனை தொட்டியப்பட்டி பள்ளிக்கு மாவட்டக் கல்வி நிர்வாகம் அனுப்பி வைத்தது.  

 

ஆசிரியர் மணிகண்டன், அந்தப் பள்ளியில் படித்து வரும் இரண்டு சிறுமிகள்  மற்றும் 3ம் வகுப்பு படித்து வரும் ஒரு சிறுவன் ஆகியோரை அப்பகுதியில் உள்ள கடைக்குச் சென்று பிஸ்கட் உள்ளிட்ட தின்பண்டங்களை வாங்கி வருமாறு அனுப்பி வைத்துள்ளார்.

 

மணிகண்டன் சொன்ன தின்பண்டங்களை சரியாக வாங்கி வராமல், வெவ்வேறு பிராண்டு பிஸ்கட் பொட்டலங்களை குழந்தைகள் வாங்கி வந்துள்ளதாக தெரிகிறது. அவரும், மூன்று முறை குழந்தைகளை அருகில் உள்ள கடைகளுக்குச் சென்று தான் கூறிய பொருள்களை சரியாக கேட்டு வாங்கி வரும்படி அனுப்பியுள்ளார்.

 

அப்படியும் குழந்தைகள் சரியான பொருள்களை வாங்கி வராததால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன், அவர்கள் வாங்கி வந்த பிஸ்கட் பொட்டலத்தை தரையில் ஓங்கி அடித்துள்ளார். சிறுவனை அழைத்த ஆசிரியர், தரையில் நொறுங்கிக் கிடந்த பிஸ்கட்டை, மண்டியிட்டபடி சாப்பிட வைத்துள்ளார்.

 

பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்றதும், அந்தச் சிறுவன் வகுப்பில் நடந்த சம்பவங்களை பெற்றோரிடம் அழுதபடியே கூறியுள்ளான். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மார்ச் 17ம் தேதி காலையில், பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியரிடம் விசாரித்துள்ளனர். அதன்பிறகு, ராசிபுரம் காவல்நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, மாவட்டக் கல்வி நிர்வாகம் சார்பிலும் ஆசிரியர் மணிகண்டனிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில், அவர் மீதான புகார்கள் உண்மை எனத் தெரிய வந்தது. இதையடுத்து, அவரை பள்ளிக்கல்வி நிர்வாகம் உடனடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
6-year-old boy lost their live in private college bus crash

நாமக்கல்லில் தனியார் கல்லூரி பேருந்து மோதி ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் உள்ள  தோட்ட வாடி கிராமத்தில் உள்ள பேருந்து நிலைய பகுதியில் கூட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் தன்னுடைய 6 வயது மகனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்திற்குப் பின்புறம் வந்த தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 வயது சிறுவன் தலை நசுங்கி உயிரிழந்தார். தந்தை சதீஷ்குமாரின் கை முறிந்து துண்டானது.

இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்த, உடனடியாக அங்கு வந்த போலீசார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி  பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பகுதிகளில் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், அந்த நேரத்தில் தனியார் பேருந்துகள் மிகுந்த வேகத்துடன் செல்வதால் சாலைத் தடுப்பு, வேகத்தடை ஆகியவற்றை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்செங்கோடு காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'பிரதான தொழில் திமுகவால் நசிந்து நலிந்து வருகிறது'-எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
'The main industry is being destroyed by DMK'-Edappadi Palaniswami's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் நாமக்கலில் அதிமுக வேட்பாளர் தமிழ்மணியை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். கூட்டத்தில்  அவர் பேசுகையில், ''கைத்தொழில் நெசவாளர்கள் பாதிப்பாகாத வகையில் பார்த்துக் கொண்ட அரசு அதிமுக .அரசு ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த பலர் கைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள். சங்ககிரி, திருச்செங்கோடு, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் விசைத்தறிகள் செயல்பட்டு வருகிறது. அந்தப் பகுதிகளில் நன்கு அறிமுகமானவன் நான். எல்லா இடத்திற்கும் நான் சென்று வந்திருக்கின்றேன். இந்த விசைத்தறி தொழில் ஒரு பிரதான தொழிலாக இருக்கிறது. பல்லாயிரக்கணக்கான பேர் விசைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள்.

இன்றைக்கு அந்தத் தொழில் எல்லாம் நசுங்கி நலிவடைந்து வருகிறது. இந்தத் தொழில் சிறக்க ஏதாவது இந்த அரசு நடவடிக்கை வேண்டும் என குரல் கொடுத்தால், திமுக அரசு எதையுமே கண்டுகொள்ளாமல் இருக்கிறது. விலையில்லா வேட்டி, சேலைகள் அதிமுக ஆட்சிக் காலத்தில் உரிய நேரத்தில் இந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு ஆர்டர் கொடுத்தோம். இதனால் அந்தத் தொழில் பாதுகாக்கப்பட்டது. ஆனால் 2021 சரியான ஆர்டர் கொடுக்கவில்லை. அதனால் வேலை வாய்ப்பை இழந்தார்கள். 2024ல் தரமான நூல் கொடுக்கவில்லை. அதனால் இப்பொழுது தொழில் சரிவை கண்டுள்ளது. ஆகவே அதிமுக ஆட்சி உங்கள் ஆதரவோடு மீண்டும் மலரும். அப்பொழுது இந்தத் தொழில் செழிக்கும். திமுகவின் பொம்மை முதலமைச்சர் தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் வரை இப்படித்தான் இருக்கும். இதற்கெல்லாம் விடிவு காலம் வர வேண்டும் என்றால் மீண்டும் அதிமுக கட்சிக்கு வர வேண்டும். அப்பொழுதுதான் ஏழைகள் இல்லை என்ற சொல்லை உருவாக்க முடியும்''என்றார்.