Skip to main content

இது மாநில அதிகாரம்! - சி.ஆர்.பி.எஃப் வீரர்களை வெளியனுப்பிய தமிழ்நாடு போலீஸ்! 

Published on 02/12/2023 | Edited on 05/12/2023
CRPF police not allowed in Madurai enforcement directorate office

திண்டுக்கல் அரசு மருத்துவமனை மருத்துவரிடம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் கையும் களவுமாகக் கைது செய்யப்பட்ட சம்பவமும், அவரிடத்தில் இருந்து லேப்டாப் மற்றும் ஹார்டு டிஸ்க்குகள் கைப்பற்றியிருப்பதும் தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துணை கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வந்தவர் சுரேஷ் பாபு. கடந்த 2018 ஆம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், சுரேஷ் பாபு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு மதுரை அமலாக்கத்துறைக்கு சென்றது. மதுரை அமலாக்கத்துறைக்கு பதவி உயர்வு பெற்று வந்த அங்கித் திவாரி என்ற அதிகாரி, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மருத்துவர் சுரேஷ்பாபுவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வருமானத்திற்கு அதிகமாக நீங்கள் சொத்து சேர்த்தது தொடர்பான வழக்கின் விசாரணையிலிருந்து தப்பிக்க வைக்க வேண்டுமானால், மூன்று கோடி ரூபாய்  லஞ்சம் தர வேண்டும் எனக் கேட்டுள்ளார்.

CRPF police not allowed in Madurai enforcement directorate office

முதலில் சுரேஷ்பாபு தர மறுத்துள்ளார். ஆனால் தொடர்ந்து திவாரி தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இறுதியாக 51 லட்சம் ரூபாய் கண்டிப்பாக தரவேண்டும் என மிரட்டி உள்ளார் அமலாக்கத்துறை அதிகாரி திவாரி. இதனைத் தொடர்ந்து முதல் கட்டமாக மதுரை - நத்தம் சாலையில் கடந்த மாதம் ஒன்றாம் தேதி 20 லட்சம் ரூபாய் முதல் தவணையை லஞ்சமாக கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து மீதி உள்ள தொகையை கேட்டுள்ளார் அங்கித் திவாரி.

மீண்டும் மருத்துவர் சுரேஷ் பாபுவை செல்போனில் தொடர்பு கொண்டு பணம் வேண்டும் எனக் கேட்டுள்ளார். இதனையடுத்து நேற்று திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு சுரேஷ் பாபு புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் துணையோடு ரசாயனம் தடவிய 20 லட்சம் ரூபாயை பேக்கில் வைத்து இன்று காலை திண்டுக்கல் - மதுரை சாலையில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு கொடுக்கும்பொழுது கையும் களவுமாக அமலாக்கத்துறை அதிகாரி திவாரி பிடிபட்டார்.

CRPF police not allowed in Madurai enforcement directorate office

லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி. சரவணன் தலைமையில் கடந்த 12 மணி நேரமாக திண்டுக்கல் இ.பி காலனியில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் வைத்து திவாரியிடம் விசாரணை நடைபெற்றது. விசாரணையில், முடிந்த வழக்கை மீண்டும் விசாரிப்பதாக பிரதமர் அலுவலக பெயரை பயன்படுத்தி, மருத்துவரை மிரட்டி, அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் கேட்டது தெரியவந்துள்ளது. பின்னர் மதுரை அமலாக்கத்துறை அலுவலகம் மற்றும் அங்கித் திவாரியின் வீட்டில், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதனால், அங்கு மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், எஸ்.பி ரேங்கில் உள்ள அதிகாரிகள் வந்தால்தான் சோதனைக்கு அனுமதிக்க முடியும் என அமலாக்கத்துறை தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  

இந்த விவகாரத்தில் லஞ்சம் வாங்கிய முக்கிய அதிகாரியான அங்கித் திவாரி அதிகாரப்பூர்வமாக கைது செய்யப்பட்டதாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இதில் மதுரை மற்றும் சென்னை அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கும் லஞ்ச பணமானது பிரித்து கொடுக்கப்பட்டதற்கான ஆவணங்கள் சிக்கி உள்ளதாகவும், இதேபோல் பலரிடம் மிரட்டி லஞ்சம் பெற்று அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு பிரித்துக்கொடுத்ததும் தெரியவந்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியிடம், 15 மணி நேரம் தொடர்ந்து விசாரணை நடத்திய திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், விசாரணையை முடித்து திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

CRPF police not allowed in Madurai enforcement directorate office

 

அதேசமயம், மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று மாலை 6 மணிக்கு துவங்கிய லஞ்ச ஒழிப்புத்துறையினரின் சோதனை இன்று (2ம் தேதி) காலை 7 மணி அளவில் நிறைவடைந்துள்ளது. 

மதுரை அமலாக்கத்துறையில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டபோது நேற்று இரவு முதலில் எல்லை பாதுகாப்புப் படையினர் அங்கு விரைந்தனர். பிறகு நள்ளிரவு சமயத்தில் துணை ராணுவப் படையினர் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு விரைந்தனர். ஆனால், அவர்களை தமிழ்நாடு காவல்துறையினர் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர். அனுமதி மறுத்தது குறித்து துணை ராணுவப் படையினர் தமிழ்நாடு போலீஸாரிடம் கேட்டபோது, முறையான அனுமதி பெற்று பிறகு உள்ளே வாருங்கள் என வெளியே நிறுத்தி வைத்தனர். மேலும், அலுவலகம் ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் இருந்தாலும், தற்போது வழக்கு தமிழ்நாடு மாநில லஞ்ச ஒழிப்புத்துறையில் பதிவாகியுள்ளது. அதனால் தற்போது மாநில அரசின் முறையான அனுமதியின்றி உள்ளே அனுமதிக்க முடியாது என்று தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இதனால், அங்கு மேலும் பரபரப்பான சூழல் நிலவியது. 

அதேபோல், மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டதும், அங்கித் திவாரியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் தன் மேலதிகாரிகளுக்கு இந்த லஞ்ச பணத்தை பகிர்ந்ததாகவும் ஒரு தகவல் பரவியது. இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் சென்னை சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு சோதனைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த சமயம், நேற்று இரவு திடீரென சாஸ்திரி பவன் மூடி பூட்டு போடப்பட்டது. இது மேலும், தமிழ்நாடு அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், கடந்த 13 மணி நேரமாக மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடந்த சோதனை முடிவுபெற்றுள்ளது. இந்தச் சோதனையில், அங்கித் திவாரி அறை மட்டுமின்றி அலுவலகம் முழுவதுமே லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். அங்கித் திவாரி அறையில் இருந்து சில ஆவணங்களையும், அரசு மருத்துவர் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கைப்பற்றி அதனை எடுத்துச் சென்றுள்ளனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

அமலாக்கத்துறை சம்மனுக்கு அவகாசம் கேட்ட தமன்னா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
tamanna asked for time to summon the enforcement department regards ipl

கடந்த 2023ஆம் ஆண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை வியாகாம் நிறுவனம் வாங்கியது. அதன்படி அந்நிறுவனத்தின் செயலியான ஜியோ சினிமா செயலியில் இலவசமாக ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பி வந்தது. 2023 முதல் அடுத்த ஐந்தாண்டிற்கு ஐபில் தொடரின் டிஜிட்டல் உரிமையை வியாகாம் நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஃபேர்பிளே என்கிற சூதாட்ட செயலியில் சட்டவிரோதமாக ஐபிஎல் போட்டிகள் நேரலையில் ஒளிபரப்பப்பட்டதாக கூறி வியாகாம் நிறுவனம் மகாராஷ்ட்ரா சைபர் கிரைமில் புகார் அளித்தது. அந்த புகாரில், ஃபேர்பிளே செயலில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்பட்டதால் தங்கள் நிறுவனத்துக்கு ரூ.100 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக குறிப்பிட்டிருந்தது. இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், ஃபேர்பிளே செயலியின் ஊழியர் ஒருவரை கைது செய்தனர். மேலும் அச்செயலியை விளம்பரப்படுத்திய பிரபலங்களை விசாரணை செய்ய முடிவெடுத்தனர். அந்த வகையில் பாலிவுட் நட்சத்திரங்கள் பாட்ஷா, சஞ்சய் தத், ஜாக்குலின் பெர்னாண்டஸ், தமன்னா உள்ளிட்ட பலர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.  

கடந்த 23 ஆம் தேதி சஞ்சய் தத்துக்கு சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர். ஆனால், தான் இந்தியாவில் இல்லாத காரணத்தால் தன்னால் ஆஜராக முடியவில்லை என சஞ்சய் தத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமன்னாவிற்கு இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியது. 

இந்த நிலையில் விசாரணைக்கு ஆஜராக தமன்னா அனுமதி கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர், மும்பையில் தற்போது இல்லை என சைபர் கிரைம் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாகவும் பின்னர் வேறொரு நாளில் ஆஜராகவுள்ளதாக கூறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

Next Story

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு; உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரிய அமலாக்கத்துறை!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Senthil Balaji Bail Petition ED apologized to the Supreme Court

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதற்கிடையே பலமுறை செந்தில் பாலாஜிக்கு சென்னை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் நிராகரிக்கப்பட்டது. 

Senthil Balaji Bail Petition ED apologized to the Supreme Court

இத்தகைய சூழலில் மீண்டும் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி சார்பில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த 1 ஆம் தேதி (01.04.2024) உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கீழமை நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்ததுடன் அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (29.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. முன்னதாக  அமலாக்கத்துறை சார்பில் நேற்று (28.04.2024) இரவு தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், “செந்தில் பாலாஜிக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக உள்ளதால் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். அமைச்சராக இல்லாவிட்டாலும், எம்.எல்.ஏ.வாக உள்ள செந்தில் பாலாஜி அதிகாரமிக்க நபராக உள்ளதால், சாட்சியங்களை அழிக்க வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. 

Senthil Balaji Bail Petition ED apologized to the Supreme Court

இதனையடுத்து செந்தில்பாலாஜி தரப்பில் வாதிடுகையில், “வழக்கில் விசாரணையை தாமதப்படுத்த அமலாக்கத்துறை முயற்சிக்கிறது. தனிநபர்களுக்குள் நடந்த கொடுக்கல், வாங்கல் விவகாரத்தை நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட மோசடியாக கட்டமைக்கின்றனர்” என குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. இத்தகைய சூழலில் இந்த வழக்கில் தாமதமாக பதில் மனு தாக்கல் செய்ததற்கு உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மன்னிப்பு கோரியது. முன்னதாக அமலாக்கத்துறை மிகத் தாமதமாக பதில் மனு தாக்கல் செய்துள்ளதாக செந்தில் பாலாஜி தரப்பு குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு மே 6 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.