பொங்கல் திருநாளின் 4-வது நாளான இன்று காணும்பொங்கல் கொண்டாடப்படுகிறது. இது கன்னிப்பொங்கல் என்றும் கணுப்பண்டிகை என்றும் அழைக்கப்படும். இந்நாளில் மக்கள் அருகில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று வருவது வழக்கம். அந்த வகையில் இன்று சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வண்டலூர் வன உயிரியல் பூங்காவில் குவிந்தனர்.
அதேபோல் சென்னை மெரினா கடற்கரையிலும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். இருப்பினும் மக்கள் கூட்டம் அலைமோதியதால் பாதுகாப்பு கருதி பொதுமக்கள் கடலில் கால் நனைக்க அனுமதிக்கப்படவில்லை. தடுப்புகள் அமைக்கப்பட்டு தூரத்தில் இருந்தே கடலை ரசிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.