Skip to main content

மழை வெள்ளத்தால் நீரில் மூழ்கிய பயிர்கள்! கடலூரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!  

Published on 30/11/2021 | Edited on 30/11/2021

 

வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பொழிந்துவருகிறது. கடந்த 18ஆம் தேதி கடலூரில் 15 செ.மீ. மழை பொழிந்த நிலையில், தற்போது கடந்த மூன்று நாட்களாக அதிகபட்சமாக 17.3 செ.மீ. மழை பொழிந்துள்ளது. 

 

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மழை பொழிவது நின்றாலும் தொடர் மழையினால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மக்கள் மீளவில்லை. வயல்வெளிகள் மட்டுமல்லாது குடியிருப்புப் பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ள நீர் வடியாததால் பயிர்கள் சேதம் அடைந்துள்ளதுடன், பல குடியிருப்புப் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியில் வர முடியாத சூழல் நிலவுகிறது. 

 

கடலூர் மாநகரில் மஞ்சக்குப்பம், செம்மண்டலம், புதுப்பாளையம், பாரதியார் நகர், முதுநகர், சீதாராம் நகர், வண்ணாரபாளையம்,  கோண்டூர், பாதிரிக்குப்பம், பச்சையாங்குப்பம், புதுப்பாளையம், குமளங்குளம், சேடப்பாளையம், பாதிரிக்குப்பம், சாவடி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நகர்களில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. 

 

இந்தத் தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக 20,500 ஏக்கர் நெற்பயிர்கள், 2,700 ஏக்கர் உளுந்து, 100 ஏக்கர் மக்காச்சோளம், 1,800 ஏக்கர் பருத்தி மற்றும் தோட்டப் பயிர்களான மல்லிகை பூ ஆகியவை 5 ஆயிரம் ஏக்கர் அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக வேளாண்துறை தெரிவித்துள்ளது.

 

தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கடலூர் - புதுவை இணைக்கக் கூடிய கும்தாமேடு தரைப்பாலம் பெண்ணை ஆற்றில் முற்றிலுமாக மூழ்கி இரண்டு கரைகளிலும் அரிப்பு ஏற்பட்டது. இதனால் ஆற்றின் ஓரம் ஆட்சியர் அலுவலகம் எதிரே இருந்த பேருந்து பயணிகள் நிழற்குடை கீழே சாய்ந்த நிலையில் ஜே.சி.பி இயந்திரம் வரவழைக்கப்பட்டு நிழற்குடை இடித்து ஆற்றில் தள்ளப்பட்டது. 

 

விருத்தாசலம் அடுத்த உச்சிமேடு கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவரும் நிலையில் கிராமத்தின் இருபக்கமும் செல்லக்கூடிய ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஓடையைக் கடந்து வெள்ளம் சுமார் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் வழியாக கரை புரண்டு கிராமத்தைச் சுற்றிலும் சூழ்ந்துள்ளது. இதனால் அம்மக்கள் கிராமத்தைவிட்டு வெளியே வர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தனித் தீவாக மாறிப்போன இக்கிராம மக்கள், தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்காகக் கூட வெளியேற முடியாத சூழலில் உள்ளனர். இதேபோல் அருகிலுள்ள இளமங்கலம், ஆலிச்சிக்குடி, ஆலந்துறைப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளைநிலங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் நெற்பயிர்கள் நாசமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Parliamentary Constituency Congress candidate filing nomination

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  வேட்பாளர் வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் பாராளுமன்ற தொகுதியான நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ளவர்களை பணியாற்ற நடவடிக்கை எடுப்பேன். மேலும் கடலூர் தொகுதிக்கு நான் புதியது என்றாலும் இங்குள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசன் ஆகியவரின் அறிவுறுத்தல் படி  தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்” என கூறினார்

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன்,  நெய்வேலி சபா ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.