Skip to main content

“முதியவரை வாயில் கவ்வியபடி முரண்டு பிடித்த முதலை”... போராடி சடலத்தை மீட்ட தீயணைப்புத் துறையினர்!

Published on 16/09/2021 | Edited on 16/09/2021

 

The crocodile that clashed with the old man in the mouth

 


கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ளது பழைய நல்லூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(65). இவர் நேற்று இரவு ஏழு மணி அளவில் பழைய கொள்ளிடம் ஆற்றில் உள்ள தண்ணீரில் குளிப்பதற்காக இறங்கி உள்ளார். அப்போது திடீரென தண்ணீரில் கிடந்த முதலை ஒன்று அவரை கடித்து இழுத்துச் சென்றுள்ளது. கோபாலகிருஷ்ணன் கத்தி சத்தம் போட்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் கழிதடி போன்ற ஆயுதங்களுடன் ஓடிச்சென்று முதலையை அடித்துள்ளனர். ஆனாலும் அந்த முதலை அவரை விடாமல் இழுத்துச் சென்றது. வேளக்குடி பகுதிவரை தண்ணீரில் இழுத்துச் சென்றுள்ளது.

 

அதற்குள் அண்ணாமலை நகர் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் ஊர் மக்களோடும் இணைந்து படகு மூலம் முதியவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு 10 மணி அளவில் ஒரு பகுதியில் முதலை கோபாலகிருஷ்ணனை சடலமாக வாயில் கவ்வியபடி  கடித்துக் குதறிக் கொண்டிருந்தது. முதலையிடமிருந்து கோபாலகிருஷ்ணன் சடலத்தை மீட்பதற்கு கடும் முயற்சி செய்தனர். ஆனால் முதலை விடாமல் முரண்டு பிடித்தது. முதலையை அடித்து விரட்டிவிட்டு கோபாலகிருஷ்ணன் உடலை ரத்த காயங்களுடன் சடலமாக மீட்டுள்ளனர். ஆற்றில் குளிக்கச் சென்ற முதியவர் முதலையின் வாயில் அகப்பட்டுக் கடித்துக் குதறப்பட்டு இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் பழைய கொள்ளிடம் மற்றும் அதன் உபரி நீர் செல்லும் பகுதிகளில் ஏராளமான முதலைகள் உள்ளன.

 

கடந்த 10 ஆண்டுகளில் இதுவரை பத்துக்கும் மேற்பட்டவர்களைக் கடித்துக் குதறி அதனால் உயிரிழந்துள்ளனர். பலர் கை, கால் இழந்து காயமடைந்துள்ளனர். சில தினங்களுக்கு முன்பு பனங்காடு என்ற பகுதியில் ஒரே நாளில் இரண்டு பேர் முதலை கடிக்கு ஆளாகி உள்ளனர். தற்போது முதலையின் வாயில் அகப்பட்டு  இறந்துபோன கோபாலகிருஷ்ணனின் சகோதரர் அறிவானந்தம் என்பவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்றபோது முதலை அவரை இழுத்துச் சென்று கடித்துக் குதறியதால் இறந்துபோனார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முதலைகள் மனிதர்களை மட்டுமல்ல கொள்ளிடம் கரையோரம் மற்றும் ஆற்றங்கரையோரம், ஓடக்கரை ஓரத்தில் மேய்ச்சலுக்குச் செல்லும் ஆடு, மாடுகளையும் விட்டு வைக்கவில்லை, அவற்றையும் பிடித்து கடித்துத்  தின்று விடுகிறது.

 

இதில் அதிகம் பாதிக்கப்படும் கிராமங்கள் காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் தாலுகாவில் உள்ள அகரம் நல்லூர், வேளக்குடி, சிதம்பரம் கஞ்சங்குல்லை என இப்படிப் பல கிராம மக்கள் பாதிக்கப்படுகின்றனர். வனத் துறையினரிடம் அவ்வப்போது பிடிபடும் முதலைகளைச் சிதம்பரம் அருகே உள்ள பத்திரம் மாதிரி குளத்தில் கொண்டு சென்று விடுகின்றனர். ஆனால் அந்த குளத்திலிருந்து முதலைகள் எளிதாக வெளியேறி ஆறு வாய்க்கால் பகுதிக்குச் சென்று விடுகின்றன. எனவே பெரிய அளவில் சிதம்பரம் பகுதியில் முதலைப் பண்ணையை உருவாக்கி ஒட்டுமொத்த முதலைகளையும் பிடித்துக் கொண்டு சென்று அதில் விடவேண்டும். முதலைகளின் பிடியிலிருந்து கிராம மக்களை விடுதலை செய்ய வேண்டும். முதலையின் அச்சத்திலிருந்து சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் கிராம மக்களை அரசு காப்பாற்ற முன்வர வேண்டும் என்கிறார்கள் அப்பகுதி கிராம மக்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.