Skip to main content

3 ஆண்டுகளாக தேர்தல் டெபாசிட் தொகை தராமல் இழுத்தடிப்பு; சி.பி.எம். வேட்பாளர் புகார்

Published on 10/02/2023 | Edited on 10/02/2023

 

CPM candidate complain about delaying payment election deposit for 3 years

 

மூன்று  ஆண்டுகளாகத் தேர்தல் டெபாசிட் தொகையைத் திருப்பித் தராமல் மாநில தேர்தல் ஆணையம் இழுத்தடிப்பது தொடர்பாகத் திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் சிபிஎம் வேட்பாளராக போட்டியிட்ட பாண்டி, திண்டுக்கல் ஆட்சியருக்குப் புகார்  எழுதியுள்ளார். 
              


அதில் தெரிவித்துள்ளதாவது, கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக என்.பாண்டி வேட்பாளராகப் போட்டியிட்டுள்ளார். இதற்காக டெபாசிட் தொகையாக ரூ.10 ஆயிரம் செலுத்தியுள்ளார். தேர்தல் முடிவின் அடிப்படையில் வேட்பாளர் பாண்டி தனது டெபாசிட் தொகையை தக்க வைத்துக்கொண்டுள்ளார். இந்நிலையில் டெபாசிட் தொகையை தேர்தல் நடத்தும் அதிகாரி திருப்பித் தரவில்லை. இந்த டெபாசிட் தொகையை திருப்பித் தரவேண்டும் என்று கடந்த 2021ம் ஆண்டு ஜூலை 9ம் தேதி தேர்தல் நடத்தும் அலுவலரான திண்டுக்கல் கோட்டாட்சியருக்கு  கடிதம் எழுதியுள்ளார். 

 

ஆனால் டெபாசிட் தொகை திருப்பி வழங்கப்படாததால் இதனையடுத்து 2022ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி கோட்டாட்சியருக்கு மீண்டும் நினைவூட்டல் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாகப் பல முறை நேரில் சென்று கேட்டும் கொடுக்காமல் அலைக்கழித்து வந்துள்ளனர். இந்நிலையில் 3 ஆண்டுகள் கழிந்த பின்பும் டெபாசிட் தொகை கிடைக்காததால் தற்போது மீண்டும் தனது டெபாசிட் தொகையான ரூ.10 ஆயிரத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு திண்டுக்கல் ஆட்சியருக்கு என்.பாண்டி கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடித நகல் மாநில தேர்தல் ஆணையருக்கும் அனுப்பியுள்ளார். இந்தக் கடிதத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்து டெபாசிட் தொகை கிடைக்கவில்லை என்றால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் பாண்டி தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எல்லாருமே திருடங்கதான்... சொல்லப் போனா...' - பாடலுக்கு நடனமாடியபடி வந்த சுயேச்சை வேட்பாளர்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Independent candidate danced to the song 'ellarume Thirudangathan... sollpona...'

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் இன்று மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. நேற்று முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள் முதல் சுயேச்சை வேட்பாளர்கள் எனப் பலர் இறுதி நாள் என்பதால் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் சிலர் நூதன முறைகளில் வந்து வேட்புமனு தாக்கல் செய்வது முன்னரே பல தேர்தல்களில் நடந்துள்ளது.

தேர்தல் நேரங்களில் இதுபோன்ற நூதன சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் திண்டுக்கல்லில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர் ஒருவர் 'எல்லாருமே திருடங்கதான் சொல்லப்போனால் குருடங்கதான்' என்ற பாடலை ஒலிக்கவிட்டபடி சாலையில் நடனமாடிக்கொண்டே வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story

“தேர்தல் ஆணையமே ஒருதலைபட்சமாக செயல்படுவது அதிர்ச்சியளிக்கிறது” - திருமாவளவன்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Thirumavalavan said that the Election Commission itself is acting like a one-sided party

மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பாகத் தமிழ்நாட்டில் திமுக தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகின்றது. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அரியலூரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

முன்னதாக அரியலூர் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா, பெரியார்,  அம்பேத்கர், காமராஜர் ஆகியோர் சிலைகளுக்கு விசிக தலைவர் தொல் திருமாவளவன், வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத் தேர்தல் அலுவலரை சந்தித்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தொல். திருமாவளவன், “திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக,  கூட்டணியின் வேட்பாளராக சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறோம். 30 ஆம் தேதி சின்னம் கொடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கூறியிருக்கிறார். தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை. பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு உடனுக்குடன் சின்னங்களை ஒதுக்கி உள்ளது.

எதிரணியில் இருப்பவர்களுக்கு இதுவரையில் சின்னத்தை ஒதுக்காமல், நிராகரித்து தேர்தல் ஆணையமே ஒருதலைபட்சமாக செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. நேர்மையோடு இந்த தேர்தலை நடத்த வேண்டும் அப்பொழுதுதான் ஜனநாயகம் காப்பாற்றப்படும். ஆகவே தேர்தல் ஆணையம் ஒரு சார்பு இல்லாமல் தேசிய அளவில் நேர்மையோடு  தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சி பூஜ்யம் என்று எங்கள் கூட்டணியின் தலைவர் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார் ஆகவே தமிழ்நாட்டில் அவர்கள் என்ன சொன்னாலும் எடுபடாது. அவர்களின் முயற்சி வெற்றி பெறாது. தென்னிந்திய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு கடுமையான பின்னடைவு ஏற்பட்டு தோல்வியை சந்திக்கும்

நான் எப்போதும் மக்கள் பணி தான் செய்து கொண்டிருக்கிறேன். உறங்கும் நேரத்தை தவிர 20 மணி நேரமும் மக்களோடு மக்கள் பணியில் தான் உள்ளேன். தொகுதி மக்கள் அதனை நன்கு அறிவார்கள் மீண்டும் எனக்கு வாய்ப்பு அளிப்பார்கள். சொந்த தொகுதியின் வேட்பாளராகத்தான் மீண்டும் இந்த களத்தில் நிற்கிறேன். அனைத்து தரப்பு மக்களின் ஆதரவோடு மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 இடங்களிலும் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும். அதில் சிதம்பரமும் ஒன்று” என்றார்.