Skip to main content

தமிழ் தெரியாத இந்தி அதிகாரிகளை திருப்பி அனுப்பு.. ஒரு கிராமத்தில் தொடங்கிய போராட்டம்

Published on 14/06/2019 | Edited on 14/06/2019

 

    மோடியின் பா.ஜ.க அரசு இந்தியா முழுவதும் ஒரே மொழி என்பதை அயல்நாடுகளுக்கு காட்டவும், இந்தி தான் பிரதான மொழி என்பதை காட்டிக் கொள்ளவும் கல்வி கொள்கை முதல் அனைத்து மாநில வேலைவாய்ப்புகளிலும் தங்கள் அதிகாரத்தை அழுத்தமாக பயன்படுத்திக் கொண்டு வருகிறது. அதற்கு தமிழ்நாடு போன்ற மாநிலங்களும் தங்களின் மாநில சுயாட்சி என்கிற தத்துவத்தை அடகு வைத்துவிட்டு தலையசைத்துக் கொண்டு பச்சைக் கொடி காட்டி வருகின்றனர்.

 

c


    அதன் பலனாகத் தான் முன்பு மத்திய அரசு வேலைகளில் மட்டும் பிற மாநிலத்தவர்கள் வேலைக்கு வந்து குடியேறிய நிலை மாறி தற்போது தமிழ்நாடு அரசு பணிகளிலும் பிற மாநிலத்தவர்கள் அதிகமாக கால் ஊன்றத் தொடங்கிவிட்டனர். அதற்கு 2016ம் ஆண்டும் முதல்வராக இருந்த ஓ.பி.எஸ். கொண்டு வந்த சட்டத் திருத்தம் தான் காரணமாக அமைந்துள்ளது. மேலும் கட்டாயம் தமிழ் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும் என்ற சரத்தை மாற்றி வேலைக்கு சேர்ந்து 2 ஆண்டுகளில் தமிழ் கற்றுக் கொள்ளலாம் என்ற திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

 

    குஜராத் போன்ற அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநிலத்தவர்களுக்கே வேலை என்ற நிலை தற்போதும் உள்ள நிலையில் தமிழக அரசு வேலைகளை மட்டும் தமிழர்கள் அல்லாதவர்களுக்கு தமிழக அரசு தாரை வார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தான் வங்கிகள், ரயில் நிலையங்களில் தமிழுக்கு இருந்த இடத்தை அழித்துவிட்டு அனைத்தும் ஆங்கிலம், இந்தி என்ற நிலைக்கு கொண்டு வந்து கொஞ்சம் கொஞ்சமாக தமிழத்தில் தமிழை அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

    இந்த நிலையில் தான் 12 ந் தேதி தெற்கு ரயில்வே அதிகாரிகள் பொதுமக்களிடம் ஆங்கிலம், இந்தியில் மட்டுமே பேச வேண்டும் என்று உத்தரவிட்டு செய்திக்குறிப்பு அனுப்பி இருந்தது. அந்த தகவல் வெளியான நிலையில் தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டம் அறிவித்தவுடன் அந்த அறிவிப்பை திரும்ப பெற்றாலும். நடைமுறையில் இருந்து வருகிறது.

 


    இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் வங்கியில் தமிழ் தெரியாத இந்தி மட்டுமே பேசும் வங்கி மேலாளரை திரும்ப பெற்று தமிழ் தெரிந்த அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கிளைச் செயலாளர் திலகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில்  முன்னால் மாவட்டச் செயலாளர் த.செங்கோடன் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

 

    தமிழ் மொழி மட்டுமே பேசத் தெரிந்த எழுதத் தெரிந்த ஒரு கிராமத்தில் உள்ள வங்கியில் இந்தி மட்டுமே தெரிந்த ஒரு அதிகாரியை நியமனம் செய்தால் அந்த வங்கி வாடிக்கையாளர்களின் குறைகளை எப்படி வங்கி அதிகாரி கேட்டு நிவர்த்தி செய்ய முடியும். அதனால் எதைக் கேட்டாலும் அதிகாரி இந்தியில் கேட்க சொல்கிறார். எப்படி நம் பாமர மக்கள் இந்தியில் பேச முடியும். மோடி அரசாங்கம் இந்தியை திணிக்க இப்படி ஒரு முயற்சியில் இறங்கி உள்ளது. அதாவது மக்கள் அதிகம் வந்து செல்லும் இடமான வங்கி, அஞ்சலகம், ரயில்நிலையம் போன்ற இடங்களில் இந்தி அதிகாரிகளை மட்டுமே வைத்து அவர்களுடன் நம் மக்களை உரையாட முடியவில்லை என்று இந்தி கற்றுக் கொள்ள தொடங்குவார்கள் என்று தான் இந்திக்கு முன்பு இந்தி அதிகாரிகளை திணித்துவிட்டார்கள். அதனால் தான் சொல்கிறோம் இந்தி அதிகாரிகளை திரும்ப பெறு தமிழ் அதிகாரிகளை நியமனம் செய் என்கிறோம். 

 

மேலும் இந்த இந்தி அதிகாரிகள் திணிப்பிற்கு காரணம் எடப்பாடி – ஓ.பிஎஸ் அரசுகள் தான். அதாவது மாநில சுயாட்சி என்பதை அறிஞர் அண்ணா தொடர்ந்து வலியுறுத்தி வந்ததுடன் நடைமுறைப்படுத்தியும் வந்தார். ஆனால் அந்த அண்ணாவின் பெயரை வைத்துக் கொண்டு இயங்கும் அண்ணா தி.மு.க தமிழகத்தில் படித்த இளைஞர்களின் வாழ்க்கையில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டு சுயாட்சி தத்துவத்தை குழி தோண்டி புதைத்து வருகிறார்கள். 

 

இந்தி பேசும் மாநிலங்களில் தமிழக இளைஞர்களுக்கு வேலை கிடையாது. ஆனால் தமிழ்நாட்டில் இந்தி மட்டுமல்ல தமிழ் அல்லாத எந்த மொழி பேசுபவராக இருந்தாலும் உடனடியாக வேலை கொடுத்து தமிழக இளைஞர்களை வஞ்சிக்கிறார்கள். சமீபத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 300 பொறியாளர்களில் 39 பேர் தமிழ் தெரியாத வேறு மாநிலத்தவர்கள். தமிழ்நாடு அரசு பணிகளில் கூட மற்றவர்களுக்கு வேலை கொடுக்கிறார்கள். தமிழர்களை வஞ்சித்து இந்திக்கு பல்லக்கு தூக்குவதை எடப்பாடி – ஒ.பி.எஸ். அரசாங்கம் நிறுத்த வேண்டும். தமிழ்நாட்டில் தமிழ் அல்லாத இந்தி போன்ற மற்ற மொழி பேசும் அதிகாரிகளின் நியமனத்தை ரத்து செய்து திருப்பி அனுப்ப வேண்டும். இல்லை என்றால் கொத்தமங்கலம் என்ற சிறு கிராமத்தில் தொடங்கிய ஆர்ப்பாட்டம் அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அலுவலகங்களை இளைஞர்கள் முற்றுகையிட்டு முடக்கும் போராட்டமாக உருவெடுக்கும் என்ற பேசினார். 

 

மாவட்டக்குழு செல்வராஜ் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார். கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 
            

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மோடியின் நாய்க்குட்டிபோல் அமலாக்கத்துறை செயல்படுகிறது” - முத்தரசன்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Mutharasan criticism of BJP

புவனகிரி பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன் சிதம்பரம் நாடளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தொல்.திருமாவளவனுக்கு ஆதரவு திரட்டி பானைச் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். 

அப்போது பேசிய அவர், “அமலாக்கத்துறை மோடியின் நாய்க்குட்டி போல செயல்படுகிறது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு அபராதம் விதித்துள்ளனர். சம்பந்தபட்ட துறை அதிகாரிகளை மோடி, அமித்ஷா ஆட்டி படைக்கிறார்கள். மோடி, தேர்தலுக்குப் பிறகு திராவிட முன்னேற்ற கழகம் இருக்காது என கூறுகிறார். உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை அழித்து விடுங்கள் என கூறுகிறார். இதற்கு அர்த்தம் என்னவென்றால் ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வந்து பாரதிய ஜனதா கட்சியை மட்டும் வைத்துக்கொண்டு சர்வாதிகாரி போல் செயல்படுவதற்காக அனைத்து கட்சிகளையும் ஒழிக்க திட்டமிட்டுள்ளார்.

மோடியின் தேர்தல் அறிக்கையில் சொன்னதை எதையுமே செய்யவில்லை. விவசாயிகளுக்கு ஆதார விலை, சாமிநாதன் கமிஷன் பரிந்துரை அமல்படுத்தவில்லை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. தற்போது கச்சத்தீவைப் பற்றி பேசுகிறார். கச்சத்தீவை கடந்த 10 ஆண்டுகளில் மீட்பதற்கான மோடி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவரை அவர் யாருக்கு பேன் பார்த்துக் கொண்டு இருந்தார்.

மாநில உரிமைகள் பறிக்கப்படுகிறது. ஆளுநர் போட்டி அரசாங்கம் நடத்துகிறார். இது ஜனநாயகத்திற்கு விரோதமானது. இதனை திமுக, கம்யூனிஸ்ட் பிரச்சினையாக பார்க்காமல் பொது பிரச்சினையாக பார்க்க வேண்டும்.  மோடியிடம் சமூக நீதியை எதிர்பார்க்க முடியாது. அப்படி சமூக நீதி அவர்களுக்கு இருந்தால், இட ஒதுக்கீட்டை அமல்படுத்துகிறேன் என கூறியதால் வி.பி.சிங் ஆட்சியை கவிழ்த்திருக்கமாட்டார்கள்.

பாஜக பத்தாண்டுகளில் செய்த தவறு கொஞ்ச நஞ்சமல்ல. சிறுபான்மை மக்களுக்கு எதிராக, சிறு குறு தொழில் நடத்துபவர்களுக்கு எதிராக, விவசாயிகளுக்கு எதிராக 3 சட்டங்கள் நிறைவேற்றினார்கள். தொழிலாளர்களுக்கு எதிராக சட்டங்களை கொண்டு வந்தார்கள்.

இதற்கு அதிமுக ஆதரவளித்தது. தற்போது ஜனநாயகத்தை காப்போம் என  ஏமாற்று வேலை செய்கிறது. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்கு பானைச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். இவருடன் கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் மணிவாசகம்,  மாவட்டச் செயலாளர் துரை, மாவட்ட துணைச் செயலாளர் சேகர், வட்டச் செயலாளர் தமிமுன் அன்சாரி உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

Next Story

“இந்திய அளவில் சமூக நீதி காப்பாற்றப்பட வேண்டும்” - பாஜகவை விளாசிய து.ராஜா

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cpi National Secretary D. Raja has severely criticized the BJP

தமிழகத்திற்கு பிரதமர் மோடி அடிக்கடி வருவதற்கு வெட்கப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் து.ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்தியா கூட்டணி சார்பில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவனுக்கு வாக்கு சேகரித்தார். அப்போது  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த து.ராஜா, “அகில இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக இது மாறி இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் பாஜக நாசகார செயலில் ஈடுபட்டு வருவதால் இந்தியா ஒரு ஜனநாயக குடியரசாக நீடிக்குமா என்ற கேள்வி எழுகிறது. இந்தியா ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசாக, மக்கள் நலன் காத்திட, மாநில உரிமைகளை மதித்து செயல்படுகிற ஒன்றிய அரசாக இந்தியா தொடர்ந்து நீடிக்குமா? என்ற கேள்வியும் ஏற்பட்டு இருக்கிறது. அதனால் தான் இந்தத் தேர்தலை எல்லோருமே முக்கியமான தேர்தலாக கருதுகிறோம்.

பாஜகவை அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும். மதவெறி பாசிசத்தை இந்தியாவில் நிலை நிறுத்த வேண்டும் எனவும், மதச்சார்பற்ற நாடு என்ற நிலையை மாற்றி மதவாத நாடாக்க முயன்று வருகிறது.  சட்ட நெறிகளை எல்லாம் அழித்து ஒழித்து விட்டு ஏற்றத்தாழ்வுகளை அப்படியே கட்டி காப்பாற்ற வேண்டும். ஆர்எஸ்எஸ் அஜண்டாவை நிறைவேற்றுகிற ஒரு கட்சியாக தான் பாஜக செயல்படுகிறது. இதற்கு பிரதமராக மோடி செயல்படுகிறார்

மோடி தமிழ்நாட்டுக்கு தற்போது அடிக்கடி வருகிறார். அவர் பிரதமர் என்ற முறையில் தேர்தல் காலத்தில் மக்களின் வாக்குகளைப் பெற வருவதற்கு வெட்கப்பட வேண்டும்.  தமிழ்நாடு பல பேரிடர்களை சந்தித்தபோதெல்லாம் மோடி வரவில்லை. தமிழ்நாட்டின் மீது அக்கறை இல்லை, நிவாரண நிதி கூட கொடுக்கவில்லை.

இந்தியாவில் முன்பிருந்ததை  விட அந்நிய கடன் அதிகரித்துள்ளது. இது பற்றி மோடி பொது வெளியில் விவாதிக்க தயாரா?  மோடி ஆட்சியில் அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் வளர்ச்சி பெற்று இருக்கிறார்கள். மக்களுக்கு  வளர்ச்சி இல்லை.  மோடியின் அரசு மக்கள் விரோத அரசாக நாட்டு நலனில் அக்கறை இல்லாத ஒரு அரசாக, பெரு முதலாளிகளின் எடுபிடி அரசாக மாறிவிட்டது.  மதச்சார்பின்மையை நிலை நாட்ட வேண்டும் என்பதற்காக இந்தியா கூட்டணியில் இருக்கிற கட்சிகள் தொடர்ந்து போராடுகிறோம். இந்தத் தேர்தல் களத்தில் மக்களிடம் வாக்கு கேட்கின்றோம்.

பாட்டாளி மக்கள் கட்சி பாஜகவோடு  அணி சேர்ந்து இருப்பது பெரிய துரோகம். பாட்டாளிகள் என்று சொல்லிக்கொண்டு பாஜகவோடு சேர்வது எவ்வளவு பெரிய கொள்கை மோசடி, துரோகம் என்பதை இன்றைக்கு மக்கள் கேட்கிறார்கள்.  அதேபோல் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இருக்கிற அதிமுக தமிழர்களின் உரிமைகளை மீட்போம் என்கிறார்கள். தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட போது இவர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்? மோடியை ஆட்சியில் இருந்து அகற்றவேண்டும் என்று எடப்பாடி பேசுவாரா?

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்தியாவை காத்திட, பாசிசத்தை வீழ்த்திட  ஸ்டாலின் அழைக்கிறேன் என்று குரல் கொடுத்து இருக்கிறார். அது அவருடைய குரல் மட்டுமல்ல,  தமிழ்நாடும் இந்தியாவும் ஒன்று பட்டு முன்னேற வேண்டும் என்று விரும்புகிற எல்லோரும் எழுப்புகிற குரல்.  இந்தியாவைக் காத்திட பாசிசத்தை வீழ்த்திட நாம் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும்.  ஒன்றுபட்டு போராட வேண்டும். இந்தப் பின்னணியில் தான் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது.

இந்திய அளவில் சமூக நீதி காப்பாற்றப்பட வேண்டும், ஜாதியை உடைத்து தகர்த்தெறிய வேண்டும், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று  போராடுகிற முன் களப்போராளியாக தொல்.திருமாவளவன் இருக்கிறார். எனவே அவருக்கு சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதியில் பானை சின்னத்தில் வாக்களிக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்” என்றார்.

இவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, சிபிஐ மாநில கட்டுப்பாட்டுக் குழு மணிவாசகம், மாநில நிர்வாகக் குழு மருத்துவர் ரவீந்திரநாத், மாநிலக்குழு மருத்துவர் சாந்தி, மாவட்ட செயலாளர் துரை, மாவட்ட துணைச் செயலாளர் வி.எம் சேகர், வட்டச் செயலாளர் தமீம் முன் அன்சாரி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.