CPI Mutharasan condemn to Governor RN Ravi

"தமிழ்நாடு என்று சொல்வதில் ஆளுநருக்கு என்ன கஷ்டம்.ஒரத்தநாடு, பாப்பான்நாடு, தொண்டைநாடு, முறப்புநாடு, ஒக்கட்நாடுஉள்ளிட்ட பல ஊர்களின் பெயர்களையும் மாற்ற நினைக்கிறாரா..." எனத்தமிழக ஆளுநருக்கு முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisment

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் நாகையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “தற்போதைய மோடி அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகச்செயல்படுகிறது. தொழிற்சாலைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்கள் இதுவரை நிரந்தரம் செய்யப்படாத நிலையில் ஒன்றிய அரசைக் கண்டித்து ஜனவரி 24 ஆம் தேதி மறியல் போராட்டம் நடைபெற உள்ளது” என்றார்.

Advertisment

ஆளுநரின் செயலுக்கு ஆதரவு தெரிவித்து அதிமுக எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க. வானதி சீனிவாசன் உள்ளிட்டவர்கள் வெளிநடப்பு செய்துள்ளனரே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதில் அளித்த முத்தரசன், “எடப்பாடி பழனிசாமி, வானதி சீனிவாசன் உள்ளிட்டவர்கள் உண்மையைப் பேச வேண்டும். ஆளுநருக்கும், முதல்வருக்கும் தனிப்பட்ட பிரச்சனை கிடையாது. இது மாநில பிரச்சனை. முதல் கூட்டத்தில் ஆளுநர் பேசுவது சபை மரபு. தமிழக அரசு கொடுப்பதை படித்துவிட்டு செல்வதுதான் ஆளுநரின் வேலை. ஆளுநர் ஒப்புதல் வாங்கிய பிறகுதான் அறிக்கையை அச்சிடவே முடியும். முன்னாள் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி இப்படி பேசுவது தவறு.

தமிழக ஆளுநராக ஆளுநர் ரவி பொறுப்பேற்கவில்லை. அவர் பொறுப்பேற்றது தமிழ்நாடு மாநில ஆளுநராக. ஆளுநர் ரவி வேண்டுமென்றே விஷமம் செய்கிறார். ஒரு மாநிலத்தின் பெயர் வைப்பதற்கு சங்கரலிங்கனார் 76 நாள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்த வரலாறு தெரியாதவர்கள்., தமிழ்நாடு உருவாக கம்யூனிஸ்ட் கட்சி புபேஷ்குப்தா, ராமமூர்த்தி, அண்ணா, கலைஞர் உள்ளிட்டோரின் பங்கு உள்ளது. தமிழ்நாடு என்று சொல்வதில் ஆளுநருக்கு என்ன கஷ்டம்? தஞ்சாவூர் பக்கம் ஒரத்தநாடு உள்ளது, பாப்பான் நாடு, ஒக்கட்நாடுஎன நாடு என்று பெயர் கொண்ட ஊர்களே உள்ளன. அவற்றை என்ன செய்வது? ஆளுநர் கலகம் விளைவிக்க மேற்கொள்ளப்படும் முயற்சி தமிழ்நாட்டில் நடக்காது” என்று கூறினார்.